குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ஒவ்வொரு குடிமகனும் எளிதில் அணுகக்கூடிய வகையில், குறைந்த செலவில், புரிந்து கொள்ளும் தன்மையில் சட்ட நடைமுறைகளை அமைக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர்
சாமானிய மனிதனுக்கு நீதி முறையாகக் கிடைப்பதற்கு, மிகுதியான காலதாமதம், சட்ட நடைமுறைகளின் கட்டணம், அணுக இயலாமை போன்றவை தடைகளாக இருப்பதாக குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் பொன்மொழியைக் குறிப்பிட்ட திரு நாயுடு, “நீதியை நாடும் ஏழை மனிதனை” பற்றிய சிந்தனையும், செயல்பாடுகளும் தான் வழக்கறிஞர்களின் முக்கிய உந்து சக்தியாக விளங்க வேண்டும் என்று கூறினார்.
சட்ட நடைமுறையின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்துவதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய திரு நாயுடு, பொது மக்களுக்காக சேவையாற்றுவோருடன் தொடர்புடைய குற்ற வழக்குகள் விரைவாகவும், உணர்ச்சி வயப்படாத வகையிலும், பாரபட்சமற்ற முறையிலும் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நோக்கத்திற்காக, அரசு ஊழியர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட குற்ற வழக்குகளை பிரத்தியேகமாக கையாள்வதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படலாம் என்று குடியரசு துணைத்தலைவர் யோசனை தெரிவித்தார்.
தேர்தல் சம்பந்தமான வழக்குகள் மற்றும் தேர்தலில் நடைபெறும் முறைகேடுகளை தடுப்பதற்கு தனியே விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படலாம் என்றும் அவர் கூறினார். சட்டமன்ற கட்சித் தாவல் வழக்குகள், உரிய கால கட்டத்திற்குள் விரைவாக தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
இமாச்சல பிரதேசம் மற்றும் இதர மாநிலங்களின் சட்டமன்றங்களில் அண்மையில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து திரு நாயுடு கவலை தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொரு மன்றத்திலும் உயரிய அறநெறிகளையும், முன்மாதிரியான நடத்தைமுறையையும் கடைப்பிடிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.
மக்களவை நடவடிக்கைகளில் அடிக்கடி ஏற்படும் இடையூறுகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்த அவர், 'எந்த ஒரு பிரச்சனையையும் ஆலோசனை, விவாதம், தீர்வு ஆகியவை மட்டுமே முன்னெடுத்துச் செல்ல முடியும், இடையூறு ஏற்படுத்துவது அல்ல', என்று கூறினார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் 13 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய குடியரசு துணைத் தலைவர், தங்களது தொழிலில் சிறந்து விளங்குவதற்காக பட்டதாரிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு குடிமகனும் எளிதில் அணுகக்கூடிய வகையில், குறைந்த செலவில், புரிந்து கொள்ளும் தன்மையில் சட்ட நடைமுறையை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். காலனித்துவ மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த குடியரசு துணைத் தலைவர், பட்டமளிப்பு நிகழ்ச்சிகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் உள்நாட்டு உடைகளை பின்பற்றுமாறு கல்வி நிறுவனங்களையும், நீதிமன்றங்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்திய நடைமுறைகளில் சட்டம் மற்றும் நீதியின் முக்கியத்துவம் பற்றி பேசுகையில், இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் தெரிவித்துள்ளபடி நீதியை பாதுகாப்பதற்காக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி, நடுநிலையான விசாரணை, உணர்ச்சி வயப்படாமல் ஆதாரங்களை பகுப்பாய்வு செய்து, அனைத்து குடிமக்களுக்கும் சமமான நீதியை வழங்குவதே சிறந்த நீதி முறையாகும் என்று தெரிவித்தார்.
நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றொரு முக்கிய சவால் என்று திரு நாயுடு குறிப்பிட்டார். உரிய காலத்திற்குள் நீதி வழங்குவதின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டிய அவர், நாட்டில் நிலுவையில் உள்ள சுமார் 4 கோடி வழக்குகளுக்கு தீர்வு ஏற்படுத்துவதற்கான முறையைக் கண்டறிய வேண்டும் என்றும் கீழமை நீதிமன்றங்களில் சுமார் 87 சதவீத வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
பொதுநல வழக்குகள் பற்றியும் இதுபோன்ற வழக்குகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய திரு வெங்கையா நாயுடு, தேவையற்ற சம்பவங்களுக்கு பொது நல வழக்குகள் தொடுக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். “பொதுநல வழக்குகள், தனியார் நல வழக்குகளாக மாறக்கூடாது”, என்றார் அவர்.
நலிந்த பிரிவினர் குறிப்பாக மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளில் விரைவாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
டாக்டர் பி ஆர் அம்பேத்கருக்கு குடியரசு துணைத் தலைவர் மரியாதை செலுத்தினார். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பயனடையும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உயரிய கொள்கைகள் முறையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யும் போது மட்டும்தான் நமது குடியரசு மீது டாக்டர் அம்பேத்கர் கொண்டிருந்த கனவு நனவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித், பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டி எஸ் என் சாஸ்திரி, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கருத்துகள்