பெரும்பாக்கத்தில் புதிய தபால் நிலையம்
பெரும்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, அங்கு புதிய துணை தபால் நிலையம் ஒன்றை 2021 மார்ச் 1 அன்று தபால் துறை திறக்கவிருக்கிறது.
பெரும்பாக்கம் பஞ்சாயத்து மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் சுமார் 71,000 மக்களுக்கு இந்த புதிய தபால் நிலையம் சேவையாற்றும். கதவு எண் 52, டாக்டர் அம்பேத்கர் சாலை, பெரும்பாக்கம் என்னும் விலாசத்தில் இருந்து இது செயல்படும்.
கணினிமயமாக்கப்பட்ட இந்த புதிய தபால் நிலையம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். கடிதங்கள், பார்சல்கள், விரைவு தபால், பண அஞ்சல், தொலைபேசி மற்றும் காப்பீட்டு கட்டணங்களை செலுத்துதல், சிறு சேமிப்பு உள்ளிட்ட சேமிப்பு திட்டங்கள் போன்ற சேவைகளை பொதுமக்களுக்கு இந்த தபால் நிலையம் வழங்கும்.
இப்பகுதிக்கான கடிதப் பட்டுவாடா மேடவாக்கம் தபால் நிலையத்தில் இருந்து தொடர்ந்து நடைபெறும். தாம்பரம் தபால் மண்டலத்தில் 100-வது துணை தபால் நிலையமாக செயல்படப் போகும் பெரும்பாக்கம் தபால் நிலையத்தின் அஞ்சல் குறியீட்டு எண் 600100 ஆக இருக்கும்.
2021 மார்ச் 1 அன்று காலை 10 மணி அளவில் சென்னை மண்டல தலைமை தபால் அதிகாரி திருமதி சுமதி ரவிச்சந்திரன், சென்னை மண்டலத்தின் தபால் சேவைகள் இயக்குநர் திரு கே சோமசுந்தரத்தின் முன்னிலையில் பெரும்பாக்கம் தபால் நிலையத்தை திறந்து வைக்கிறார்.
பெரும்பாக்கம் பகுதியில் உள்ள பொதுமக்கள், வர்த்தகர்கள், கல்வி நிறுவனங்கள் புதிய தபால் நிலையத்தின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு செய்திக் குறிப்பொன்றில் தபால் அலுவலகங்களின் மூத்த கண்காணிப்பாளர், தாம்பரம் பகுதி, திருமதி டி வி சுந்தரி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்