கொரோனாவில் இறந்ததாக நாடகமாடி, காப்பகத்திலிருந்த 2 குழந்தைகளை விற்பனை செய்த 4 பெண்கள் உட்பட 7 பேரை கைது செய்து
காவல்துறையினர்விசாரித்து வருகின்றனர். தலைமறைவான காப்பக உரிமையாளர் சிவக்குமார் உள்ளிட்ட இருவரைத் தேடும் தனிப்படை சென்னையில் முகாமிட்டுள்ளனர். மதுரையிலுள்ள இதயம் டிரஸ்ட் நடத்தும் காப்பகத்தில் சமூக ஆர்வலராகச் சேர்த்த ஆதரவற்ற பெண் ஐஸ்வர்யாவின் ஒரு வயது ஆண் குழந்தை கொரோனாவால் இறந்து விட்டதாகப் போலி ஆவணம் தயாரித்து காப்பக உரிமையாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் கொடுத்துள்ளனர். இது தெரிந்து அசாருதீன் என்பவர் குழந்தையை மீட்டுத்தரும்படி மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் புகார் அளித்தார்.
ஆட்சியர் உத்தரவில் தனிப்படை காவல்துறை, காப்பக நிர்வாகிகளில் ஒருவரான கலைவாணியை பிடித்து தீவிர விசாரணை நடத்தியதில் ஐஸ்வர்யாவின் ஆண் குழந்தை மாணிக்கம் மதுரை இஸ்மாயில்புரம் 4 வது தெரு கண்ணன் - பவானி தம்பதியிடமிருந்து மீட்கப்பட்டது. கண்ணன் மதுரை மேல ஆவணி மூல வீதியில் நகைக்கடை நடத்துகிறார். இந்தத் தம்பதியிடம், ஐஸ்வர்யாவின் குழந்தை மாணிக்கத்தை காப்பக உரிமையாளர் சிவக்குமார், ருபாய் ஐந்து லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். இதே போல் மதுரை கல்மேடு பகுதியை சேர்ந்த அனீஸ் ராணி - சாதிக் தம்பதியிடம் விற்கப்பட்ட கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்ரீதேவியின் மற்றொரு இரண்டு வயதான பெண் குழந்தை தீபா என்ற தனம்மாளையும் மீட்டனர்
முறையான தத்து எடுக்காமல் சட்ட விரோதமாகக் குழந்தைகளை வாங்கிய கண்ணன் (வயது 50), மனைவி பவானி (வயது 45) மற்றும் அனீஸ் ராணி (வயது 36), கணவர் சாதிக் (வயது 38), காப்பக ஊழியர் கலைவாணி (வயது 36) மற்றும் குழந்தை விற்பனைக்கு புரோக்கராகச் செயல்பட்ட மதுரையைச் சேர்ந்த செல்வி, ராஜா ஆகிய ஏழு நபர்களை காவல்துறை கைது செய்தனர். காப்பகத்திலிருந்த வருகைப் பதிவேட்டில் 16 குழந்தைகளின் பெயர்களிருந்தது தெரிந்தது. இந்தப் பட்டியல்படி இரு குழந்தைகள் மீட்கப்பட்டபோதும், மேலும் 14 குழந்தைகளின் நிலை பற்றித் தெரியவில்லை. இந்தக் குழந்தைகளும் விற்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் மேலும் விசாரணை நடந்து வருகிறது.
மதுரை காவல்துறை அதிகாரி கூறுயபோது,‘காப்பகத்தை சிவக்குமார் 12 வருடங்களாக பதிவு செய்யாமல் நடத்தி வந்துள்ளார். மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளிடம் தொடர்பு வைத்துக் கொண்டு, காப்பகத்திற்கென பெரிய தொகையை பலரிடமும் வசூல் செய்துள்ளார். காப்பகத்தில் 134 பேர் இருந்தனர். இதில் 26 முதியவர்கள் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் பல்வேறு அரசு, தனியார் இல்லங்களிலும் தங்க வைக்கப்பட்டு, காப்பகம் சீலிடப்பட்டது. காப்பக உரிமையாளர் சிவக்குமார், நிர்வாகி மதார்ஷா தலைமறைவாகியுள்ளனர். இவர்களைத் தேடி இரண்டு தனிப்படைக் காவல்துறை சென்னை விரைந்துள்ளன. சிவகுமாரின் செல்போன் சிக்னல் விழுப்புரம் - சென்னை இடையே காட்டுகிறது.
அவ்வப்போது செல்போனில் சிம் கார்டுகளை மாற்றிப் பயன்படுத்தி வருகிறார். மதார்ஷா செல்போனை அணைத்து வைத்துள்ளார். இருவரும் ஓரிரு நாளில் கைதாவார்கள்’’ என்றார். வழக்குரைஞர் முத்துக்குமார் கூறும்போது,‘காப்பக உரிமையாளர் கடந்த ஆட்சியில் அமைச்சர் ஒருவரிடம் ரூபாய் ஐந்து லட்சம் நிதி பெற்றுள்ளார். அதற்கு முறையாக கணக்குக் கொடுக்கவில்லை. குழந்தை விற்பனை நடந்திருப்பதால், வழக்கை சிபிசிஐடி காவல் பிரிவுக்கு மாற்ற வேண்டுமென்றார்.
காப்பக நிர்வாகியான குழந்தை திருட்டில் தொடர்புடைய கலைவாணிக்கு மாநில அளவில் சிறந்த சேவைக்கான.?! விருதினை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார். இதற்கும் முன்னதாக இந்த காப்பகத்தில் பணிபுரிந்த அருண்குமார் என்பவரும் மாநில விருது பெற்றுள்ளார். இதுதவிர மற்ற தலைமறைவான மேலும் ஒரு நிர்வாகி மதார்ஷாவிற்கு இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று மாநில விருது வழங்குவதற்காக சமூக நலத்துறை, மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை அனுப்பி வைத்துள்ளது. இந்த நிலையில் குழந்தை விற்பனையில் இந்த காப்பகம் சீல் வைக்கப்படும் நிலைக்குளாகியுள்ளது.
மதுரை கல்மேடு பகுதியைச் சேர்ந்த அனீஸ் ராணி- சாதிக். சில்வர் பட்டறை வைத்துள்ள தம்பதியிடம் ரூபாய். 3 லட்சம் பணம், ஒன்றரை லட்சம் செலவில் காப்பகத்தில் ஒரு ஷெட் போட்டுத் தரவும் ஒப்புதல் பெற்று 2 வயதுக் குழந்தை தீபாவை இவர்கள் விற்றுள்ளனர். குழந்தையை விலைக்கு வாங்கி அந்தத் தம்பதியினர் கடந்த வாரம் உறவினர்களை அழைத்து மொய் விருந்து நடத்தி, காதுகுத்தி, புதிய பெயர் வைத்திருக்கிறார்கள் தமிழ்நாடு
சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் : குழந்தைகள் விற்பனை விவகாரம் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகங்கள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் உள்ளிட்டவைளில் சமூக நல அலுவலர்கள் மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தி 15 நாட்களுக்குள் அறிக்கை தரவேண்டுமென உத்தரவிட்டுள்ளதாகவும். கள ஆய்வின்போது காப்பகங்கள் முறையாக அனுமதி பெற்றுச் செயல்படுகிறதா? குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதுகாப்பாக உள்ளனரா என ஆய்வு செய்து தரவும் உத்தரவிட்ட தகவல் தெரிவித்தார். அறிக்கையின் அடிப்படையில் அனுமதியின்றிச் செயல்படும் காப்பகங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமென்றார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் கூறும்போது, குழு அமைத்து, மாவட்டத்தின் அனைத்துக் காப்பகங்களிலும் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. காப்பகத்தில் காணாமல் போன குழந்தைகள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. போலி ஆவணம் தயாரித்த விவகாரத்தில் அரசு ஊழியர்கள் உடந்தையாக இருந்திருந்தால், அவர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்திற்குப் புறம்பாக குழந்தையை யாரும் வாங்க வேண்டாம். குழந்தைகளை தத்தெடுக்க சட்டத்தில் இடமுள்ளது’’ என்றார். எடப்பாடி கே. பழனிச்சாமி முதல்வராக இருந்த போது 2019 ஆம் ஆண்டு இந்தத் திருடர்களைத் தேடிப் பிடித்து விருதுகள் கொடுத்த நிகழ்வு தான் இப்போது அரசியலில் லேட்டஸ்ட் டாக்.
கருத்துகள்