22 மிகப் பெரிய உணவுப் பூங்காக்கள் மூலம் 6 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் : மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல்
உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
22 மிகப் பெரிய உணவுப் பூங்காக்கள் மூலம் 6 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் : மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல்
22 மிகப் பெரிய உணவுப் பூங்காக்கள் மூலம், 6 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மக்களவையில், உணவுப் பதப்படுத்துதல் துறை இணையமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் தெரிவித்தார்.
அவர் மாநிலங்களவையில் இன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது:
மிகப் பெரிய உணவுப் பூங்கா வழிகாட்டுதல்கள்படி, ஒவ்வொரு உணவுப் பூங்காவும் முழு செயல்பாட்டுக்கு வரும்போது, சுமார் 5000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கும். உணவுப் பூங்கா திட்டத்தின் கீழ், 38 மிகப் பெரிய உணவுப் பூங்காங்களுக்கு, உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சகம் இறுதி ஒப்புதலும், 3 மிகப் பெரிய உணவுப் பூங்காங்களுக்கு கொள்கை அடிப்படையிலான ஒப்புதலும் வழங்கியுள்ளது. செயல்பாட்டில் உள்ள 22 மிகப் பெரிய உணவுப் பூங்காங்கள் மூலம் சுமார் 6,66,000 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிர ஊரகப் பகுதிகளில், வேளாண் பொருட்கள் பதப்படுத்துதல்:
மகாராஷ்டிராவில் இதுவரை 3 மிகப் பெரிய உணவுப் பூங்காக்கள், 62 குளிர்பதனக் கிடங்குகள், 12 வேளாண் பதப்படுத்தும் தொகுப்புகள், 39 உணவுப் பதப்படுத்தும் ஆலைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிர ஊரகப் பகுதிகள் உட்பட, நாடு முழுவதும், உணவுப் பதப்படுத்துதல் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பிரதமரின் கிசான் சம்மதா திட்டத்தை உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சகம் அமல்படுத்துகிறது.
இத்திட்டத்தின் கீழ் உணவுப் பதப்படுத்தும் மையங்கள் அமைக்க தொழில் முனைவோர்களுக்குக் கடனுதவி, முதலீடு மானியம் ஆகியவற்றை உணவுப் பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம் வழங்குகிறது.
தற்சார்பு இந்தியா நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சிறு உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தை மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம் அமல்படுத்தி வருகிறது. ஒரே மாவட்டம், ஒரே தயாரிப்பு என்ற அணுகுமுறை மூலம், 2 லட்சம் சிறு உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் அமைக்கவும்/ மேம்படுத்தவும் ரூ.10,000 கோடி மதிப்பில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு கடனுடன் கூடிய மானியத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
தனியார் முதலீட்டுக்கு அரசு தொடர் ஊக்குவிப்பு:
உணவு பதப்படுத்துதல் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தனியார் துறை முதலீட்டை மத்திய அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.
இதுவரை அனுமதிக்கப்பட்ட 818 திட்டங்களில், 792 திட்டங்கள் தனியார் துறை மூலம் ரூ.5791.71 கோடி மானியத்துடன் உணவு பதப்படுத்தும் மையங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.
இத்துறையில் தனியார் துறை பங்களிப்பை மேலும் ஊக்குவிக்க, முக்கிய நடவடிக்கைகளை மத்திய அரசு இந்தாண்டு எடுத்துள்ளது. உணவு பதப்படுத்துதல் துறையில் ரூ.10,900 கோடி மதிப்பீட்டில் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது சர்வதேச சந்தையில் இந்திய உணவு பொருட்கள் பங்குபெற உதவும்.
கருத்துகள்