கொரோனா தொற்று தாக்கம்: குழந்தைகள் தங்கள் கருத்தை தெரிவிக்க, பெரியவர்கள் ஊக்குவிப்பது முக்கியம் - எய்ம்ஸ் மனநல நிபுணர் கருத்து
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கொரோனா தொற்று தாக்கம்: குழந்தைகள் தங்கள் கருத்தை தெரிவிக்க, பெரியவர்கள் ஊக்குவிப்பது முக்கியம் - எய்ம்ஸ் மனநல நிபுணர் கருத்து
குழந்தைகள் மனநிலையில் கொரோனா, ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து விவரித்த தில்லி எய்ம்ஸ் மனநல மருத்துவப் பிரிவு நிபுணர் டாக்டர் ராஜேஷ் சாகர், குழந்தைகள் தங்கள் கருத்தை தெரிவிக்க பெரியவர்கள் ஊக்குவிப்பது முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளின் மனநலத்தில் கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கம், அதை போக்குவது குறித்து டாக்டர் ராஜேஷ் சாகர் கூறியதாவது:
குழந்தைகள், உடல்ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், மென்மையானவர்கள். எந்தவித மனஅழுத்தம், கவலை, அதிர்ச்சியாக இருந்தாலும் அது அவர்களை ஆழமாக பாதிக்கும் மற்றும் நீண்டகால விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
கொரோனா தொற்று, குழந்தைகளின் இயல்பான நடவடிக்கைகளை மாற்றிவிட்டது - பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கல்வி முறை ஆன்லைனுக்கு மாறிவிட்டது. சக நண்பர்களுடன் பேசுவது குறைந்துவிட்டது. அதோடு, சில குழந்தைகள் பெற்றோர்கள், உறவினர்கள் அல்லது பராமரிப்பாளர்களை இழந்துவிட்டனர். இவை எல்லாம், குழந்தைகளின் மனநலத்தை பாதிக்கும். அவர்கள் இழந்துள்ள உணர்வுபூர்வமான சூழல், அவர்களின் இயல்பான வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் முக்கியம்.
மன அழுத்தமான சூழ்நிலைகளில், பெரியவர்கள் போல் அல்லாமல், குழந்தைகள் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்கள். சில குழந்தைகள் ஒட்டிக் கொள்ளும், சிலர் விலகியிருப்பர், சில குழந்தைகள் ஆவேசமடையும், சில குழந்தைகள் மனச்சோர்வுடன் இருக்கும். அதனால் குழந்தைகளின் நடத்தைகளை பெரியவர்கள் கவனிப்பது முக்கியம்.
தற்போதைய நெருக்கடியில், குழந்தைகள் தொடர்பான பல விஷயங்களில் தங்கள் கருத்துக்கள், எண்ணங்களை தெரிவிக்க, பெரியவர்கள் ஊக்குவிக்க வேண்டியது முக்கியம்.
குழந்தைகள் தங்கள் கருத்தை தெளிவாக வெளிப்படுத்த, அவர்களுக்கு உகந்த சூழல் வழங்கப்பட வேண்டும். அவர்களால் பேசமுடியவில்லை என்றால், படங்கள், ஓவியங்கள் மற்றும் இதர வழிகளில் தங்கள் கருத்தை தெரிவிக்க ஊக்குவிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராஜேஷ் சாகர் கூறினார்.
கருத்துகள்