"தொழில்நுட்ப மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் தர உறுதி மற்றும் NBA அங்கீகாரத்தின் தேவைகள் பற்றிய விளக்கம்" : திருச்சி என்.ஐ.டி-யில் பயிற்சி பட்டறை
திருச்சிராப்பள்ளி என்.ஐ.டி, வேதியியல் பொறியியல் துறையில்
"தொழில்நுட்ப மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் தர உறுதி மற்றும் NBA அங்கீகாரத்தின் தேவைகள் பற்றிய விளக்கம்" என்ற தலைப்பில் ஒரு வார பயிற்சி பட்டறையின் தொடக்க விழா ஆன்லைன் மூலம் ஜூலை 19, 2021 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினர்களாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் லட்சுமிநாராயண சாமவேதம், அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்ஐடி வளாகத்தின் டீன் டாக்டர் டி.தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேதியியல் பொறியியல் துறையின் தலைவரும் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் பி.கலைச்செல்வி கூட்டத்தை வரவேற்று, துறையின் சாதனைகள் குறித்து விளக்கினார். மேலும், கடந்த 16 மாதங்களில், கொவிட் 19 இன் போது வேதியியல் பொறியியல் துறை, கற்பித்தல், கற்றல் மற்றும் ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்து செய்ததாகவும் தெரிவித்தார்.
AICTE-MARGDARSHAN திட்டத்தின் நிறுவன ஒருங்கிணைப்பாளர் டாக்டர் என்.சிவகுமாரன், அவரது உரையின் போது பல புதுமையான
திட்டங்கள் மூலம் இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்ட கல்லூரிகளின் தர
மேம்பாடுகளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்டார்.
வேதியியல் பொறியியல் துறை ஆசிரியரும், பயிற்சி பட்டறையின்
ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் அருணகிரி, பட்டறையின் நோக்கங்கள், பங்கேற்பாளர்கள், நிறுவனங்களின் தன்மை, வெவ்வேறு தலைப்புகள் மற்றும் அது குறித்து பேசும் வல்லுநர்கள் பற்றியும் விளக்கிக் கூறினார்.
என்.ஐ.டி திருச்சிராப்பள்ளியின் கல்வித்துறை டீன் டாக்டர் ராமகல்யனான் அய்யகரி உயர்கல்வி தொடர்பான தரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். உயர்கல்வி தரம் அளவிடுவதற்கு ஆவணங்கள், செயல்படுத்தப்பட்ட கொள்கைகள், குறிப்பிட்ட கால தணிக்கை மற்றும் நல்ல பதிவுகள் தேவை என்றும், பட்டறை இளம் ஆசிரியர்களுக்கு ஒரு சரியான தளமாக அமையும் என்றும், இந்த பட்டறையில் கலந்து கொண்ட பிறகு, இந்த பட்டறையில் பெற்ற அறிவை தங்கள் சகாக்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கும் பரப்ப முடியும் என்று குறிப்பிட்டார்.
கெளரவ விருந்தினராக கலந்து கொண்ட, எம்.ஐ.டி வளாகத்தின் டீன் டாக்டர் தியாகராஜன், என்ஐடி திருச்சிராப்பள்ளி போன்ற சிறந்த நிறுவனங்கள் NBA-வின் தேவைகளுக்கு ஒரு தரத்தை நிர்ணயித்துள்ளன என்றும், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், இயல்பு, மின்னணு மற்றும் அறிவு ஆகிய மூன்றுக்கும் உள்ள தொடர்பை மேற்கோள் காட்டி, இந்த பட்டறையை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களையும் நிறுவனத்தையும் பாராட்டினார். தர உத்தரவாதத்திற்கு ABCD என்ற நான்கு அத்தியாவசிய பாகங்கள் , தணிக்கைக்கு A (Auditing), தரம் தீர்மானித்தல்
(Bench marking) B, சரிபார்ப்பு பட்டியலுக்கு C (Check list) மற்றும்
ஆவணங்களுக்கான டி (Documents) முக்கியம் ஆகும் என்று குறிப்பிட்டார்.
முதன்மை விருந்தினர், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் டாக்டர்
லக்ஷ்மிநாராயணன் சாமவேதம், தர மதிப்பீடு தயாரிப்பு குறித்து விரிவாகப் பேசினார். ஒரு ஆசிரியராக, திட்ட ஒருங்கிணைப்பாளராக மற்றும் கல்வித் தலைவராக அவருடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். கடந்த காலங்களில் இருந்து, தர அங்கீகார முறை எவ்வாறு மாறியுள்ளது என்பதையும், ஒரு ஆசிரியராகவும் நிர்வாகியாகவும் மேம்படுத்திக்கொள்ள எவ்வாறு உதவியது என்பதையும், அவர் தனது உரையில் பகிர்ந்து கொண்டார்.
திருச்சிராப்பள்ளி என்.ஐ.டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்