மதுரை செந்தமிழ்க் கல்லூரியின் மாணவர்களுக்கு 75- ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் பெருவிழா இணையவழி கருத்தரங்கம்
காந்தியடிகளின் போராட்டம் உலகம் சார்ந்த அறப்போர்
மத்திய அரசின் மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பாக மதுரை செந்தமிழ்க் கல்லூரியின் மாணவர்களுக்கு 75- ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் பெருவிழா என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கமும், வினாடி வினா போட்டியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மதுரை செந்தமிழ்க் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் ஒருங்கிணைப்பு செய்தது.
செந்தமிழ் இதழ் ஆசிரியர் முனைவர் இரா.சதாசிவம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியது; மகாத்மா காந்தியடிகள் நாட்டின் விடுதலைக்காக உள்ளத்தாலும் உடலாலும் பாடுபட்டவர். அவரது அறப்போர் வீச்சானது உலகம் முழுதும் உள்ள செய்தித்தாள்களில் இடம்பெற்றிருந்தது. மக்களின் உழைப்பு, கல்வி, அறிவு இவற்றை சர்வோதயம் என்று குறிப்பிட்டார். நெசவுத் தொழிலாளர்களும் விவசாயிகளும் நாட்டின் முதுகெலும்பு, அவர்கள் நைந்துவிடாமல் காக்க வேண்டும். மாணவர்கள் அறிவாலும் சிந்தனையாளும் காந்தியடிகள் பயணித்தப் பாதையில் சென்று உலகத்தை விடுவிக்க முயற்சிக்க வேண்டும் என்றார்.
காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக காந்திய நிர்மாணத்திட்ட அருங்காட்சியக இயக்குனர், முனைவர் த.ரவிச்சந்திரன் பேசியது; இந்திய விடுதலைப் போராட்டமானது, கத்தியின்றி இரத்தமின்றி காந்தியடிகள் தலைமையில் அஹிம்சை முறையில் நடைபெற்றது. பல சத்தியாகிரகிகள் துன்பப்பட்டு, சிறைவாசம் சென்று உயிர் தியாகம் செய்து பெற்ற சுதந்திரம். வன்முறையில், ரத்தம் சிந்தி பெற்ற பிரெஞ்சுப்புரட்சி , ரஷ்யப்புரட்சிகளில் இருந்து முற்றிலும் இது வேறுபட்டது. காந்தியடிகள் தமிழகத்திற்கு தன் வாழ்நாளில் 21 முறை வந்துள்ளார். மதுரை மாநகருக்கு ஐந்து முறை வந்துள்ளார். 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதியன்று மதுரை மாநகரில் தான் அரைமுழ ஆடைக்கு மாறினார். வருங்காலம் மாணவர்கள் இளைஞர்கள் கையில் தான் உள்ளது. அவர்கள் நன்கு படித்து பொறுப்புணர்ந்து இந்திய நாட்டின் நிலையை உயர்த்த வேண்டும். இதை அவர்கள் இன்றைய தினம் சூளுரையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் தமிழ் மற்றும் இந்திய மொழிகள் புலத்தலைவர் முனைவர் பா.ஆனந்தகுமார் தமிழ் இலக்கியங்களில் இந்திய விடுதலைப்போர் என்ற தலைப்பில் பேசியதாவது; இலக்கியங்கள் சமூக ஆவணமாகத் திகழ்வதோடு சமூக மாற்றத்திற்கான காரணியாகவும் விளங்குகின்றன. இந்திய விடுதலைப் போர் தமிழ் இலக்கியத்தில் விரிவான பதிவைப் பெற்றுள்ளது. பாரதியாரின் படைப்புகள் இதன் மையமாகத் திகழ்கின்றன. பாரதியார் காசி, கொல்கத்தா, சூரத் ஆகிய இடங்களில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகளில் கலந்து கொண்டுள்ளார். இந்திய விடுதலையை களத்தில் நின்று பாடியவர். திலகரை அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டு அவரது பால பாரத சங்கத்தில் இணைந்து செயல்பட்டார். அவரது ஒவ்வொரு தேசிய பாடலுக்கும் வரலாற்றுக் குறிப்பு உண்டு. விவேகானந்தரின் சகோதரர் யுகாந்தர் பத்திரிகை ஆசிரியர் பூபேந்திர நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது பூபேந்திர விஜயம் பாடலைப் பாடினார். வ.உ.சி. சிறையில் அடைக்கப்பட்ட போது சுதந்திர தாகம் பாடலைப் பாடினார். சென்னையில் 1907 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதேசிய ஊர்வலத்தின் இறுதியில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அப்போது தான் தாயின் மணிக்கொடி பாடலைப் பாடினார். பாரதி காட்டும் தேசியக் கொடியில் ஒருபுறம் இந்திரனின் வச்சிராயுதமும் மற்றொரு புறம் இஸ்லாமியரின் இளம் பிறையும் நடுவில் வந்தேமாதரம் எனும் மந்திரச் சொல்லும் இடம் பெற்றுள்ளது. பாரதியைப் போல பாரதிதாசன், நாமக்கல் இராமலிங்கம், கவிமணி தேசிக விநாயகம் ஆகிய கவிஞர்களும் இந்திய விடுதலையை வரவேற்றுப் பாடியுள்ளனர். நாடகத்தின் மூலம் தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர், மதுரகவி பாஸ்கர தாஸ், விசுவநாத தாஸ் ஆகியோர் விடுதலைப் போராட்ட உணர்வைப் பொது மக்களிடம் கொண்டு சென்றனர்.
மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலக விளம்பர உதவி அலுவலர் திரு ப.வேல்முருகன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வரவேற்புரை ஆற்றினார். மதுரை செந்தமிழ் கல்லூரியின் தமிழ்த்துறை உதவி பேராசிரியரும் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருமான முனைவர் பூ.பூங்கோதை நன்றி தெரிவித்தார். முனைவர் பா.நேருஜி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இக்கருத்தரங்கை தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் வினாடி வினாப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இளம் இலக்கியம் இரண்டாம் ஆண்டு மாணவர் எஸ்.வி.மருது பகவதி முதலிடத்தையும், முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவி ரம்யா இரண்டாம் இடத்தையும் மற்றும் இளம் இலக்கியம் மூன்றாம் ஆண்டு மாணவர் சமயக்கனி மூன்றாம் இடத்தையும் பிடித்து பரிசுகளைப்பெற்றனர்.
கருத்துகள்