சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றியபோது, பொன். மாணிக்கவேல், தவறான அறிக்கைகளைத் தாக்கல் செய்ததாக வும் இது குறித்து, தனிப்படை அமைத்து விசாரிக்கக் கோரி, சென்னை சேகர் ராம் என்பவர் தன்னை பத்திரிகையாளர் எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கு விசாரணையின் போது, சேகர் ராம் போலிப் பத்திரிகையாளர் இல்லை என, பொன். மாணிக்கவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில் போலிப் பத்திரிகையாளர்களைகளை தடுப்பது தொடர்பாக, விசாரணையை விரிவுபடுத்திய உயர் நீதிமன்றம்.
வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில், மூத்த பத்திரிகையாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைப்பை மூன்று மாதங்களில் ஏற்படுத்த வேண்டுமென்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது
பிரஸ் கிளப் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்களை அங்கீகரிக்கும் அதிகாரத்தை, பிரஸ் கவுன்சிலுக்கு மட்டுமே வழங்க வேண்டும் எனவும், சாதி, மதம், மொழி அடிப்படையில் பத்திரிகையாளர் சங்கங்களை அனுமதிக்கக் கூடாதென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மட்டுமே பத்திரிகையாளர் சங்கங்களுக்குத் தேர்தல் நடத்த வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மூலமாக மட்டுமே பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனைகள், மற்றும் இலவச பேருந்து பயணச் சலுகைகள் வழங்க வேண்டுமே தவிர, நேரடியாக வழங்கக் கூடாதென உத்தரவிட்டனர்.
போலிப் பத்திரிகையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்க பிரஸ் கவுன்சிலுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் எனவும், இந்த அடிப்படையில் அங்கீகார அடையாள அட்டை வழங்கும் விதிகளில் மூன்று மாதங்களில் உரிய திருத்தம் கொண்டு வரவேண்டுமெனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை நான்கு வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் , தவறினால் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்த நீதிபதிகள், விசாரணையை ஆறு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.
கருத்துகள்