மது குடிக்க வைத்து, தகாத முறையில் வீடியோ எடுத்து திருமண வரவேற்பு நடன பெண்களை பாலியல் தொழிலில் தள்ளி துன்புறுத்தல் போலீசுடன் சேர்ந்து களியாட்டம் நடத்தியவர் கைது
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மற்றும் திருச்சிராப்பள்ளியில் கலக்கல் ஈவண்ட் மேனேஜ்மென்ட் எனும் பெயரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து தரும் நிறுவனம் நடத்தி வரும் ராஜா. திருமண வரவேற்பில் நடனமாட 30 பெண்களை வைத்து நிகழ்வுகளில்‘வெல்கம் கேர்ள்ஸ்' என்ற பெயரில் இயங்கி வருகிறார். இதில் பணியாற்றும் பெண்களை மது குடிக்கவைத்து ஆபாச வீடீயோ எடுத்து மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக புகார் எழுந்தது. வீடியோவை இணையதளத்தில் விடுவதாகவும், உறவினர்களிடம் காட்டுவதாகவும் கூறி மிரட்டி சிலருக்கு பாலியல் டார்ச்சர் செய்ததாக தெரிகிறது.
இந்தநிலையில், இவரது நிறுவனத்தில் பணியாற்றிய தஞ்சாவூர் இளம்பெண்ணிடம் ரூபாய்.50 ஆயிரம் தருவதாகக் கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றார். அவர் மறுப்பு தெரிவித்தும் ராஜா தொடர்ந்து வற்புறுத்தி வந்ததனால் மனமுடைந்த அந்தப் பெண் தனது நண்பர்களிடம் தெரிவிக்க அவர்கள் திருமண நிகழ்ச்சி உள்ளதாகக் கூறி ராஜாவை சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள அமராவதிபுதூருக்கு வரவழைத்து. அங்கு வந்த ராஜாவை, நடனக்குழு பெண்கள்‘பாலியல் தொழிலுக்கா கூப்பிடுகிறாய்" என்று கூறி சரமாரியாக சுற்றி வளைத்து அடித்தனர். அந்தக் காணொளிக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
பெண்களிடம் அடிவாங்கிய ராஜா
சாக்கோட்டை காவல்நிலையத்தில் அளித்த புகாரில், தன்னை அடித்து பணம் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டதாக கூறியதைத் தொடர்ந்து, காவல்நிலையத்தில் எழுத்தராகப் பணியாற்றும் மாயவதன், என்பவர் அந்தப் பெண்ணிடம் பேசும் பதிவு ஆடியோவும் வைரலானது. இதுதொடர்பாக தஞ்சாவூர் பெண் மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அனுப்பி வைத்த புகார்கள் மனுவில் கூறியிருப்பதாவது:- எனக்கும் காரைக்குடியை சேர்ந்த ராஜ்குமாருக்கும் திருமணம் நடந்தது. சென்னையில் வசித்து வந்த நாங்கள், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டோம்.
கும்பகோணத்தில் வசிக்கும் என் பெற்றோர் வீட்டிற்கு வந்து ஹோட்டலில் கணக்காளராகவும் விசேஷ நிகழ்ச்சிகளில் ‘வெல்கம் கேர்ள்ஸ்' ஆகவும் பணியாற்றுகிறேன். 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதுவயலில் நடந்த திருமண நிகழ்ச்சியில் வரவேற்பாளராகப் பணியாற்றினேன். ராஜா ஏற்பாட்டில் அந்த நிகழ்ச்சி நடந்ததை அறிந்தேன். அப்போது, அவர் நிறைய நிகழ்ச்சிக்கு ஆள் தேவை எனக் கூறி எனது செல்போன் எண்ணைப் பெற்றுக்கொண்டார். மேலும் நிகழ்ச்சியில் சாக்கோட்டை காவல்நிலைய எழுத்தர் மாயவதனை நண்பர் என அறிமுகப்படுத்தினார். அடுத்த இரண்டு நாட்களுக்குப் பிறகு என்னைத் தொடர்பு கொண்ட ராஜா,‘பெரிய வி.ஐ.பி.க்கள் எல்லாம் இருக்காங்க, எங்களுடன் ஒரு அக்ரிமென்ட் போட்டு 1 அல்லது 2 மாதம் தங்கினால் இலட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்’’ எனக் கூறி பாலியல் தொழிலுக்கு அழைத்தார்.
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சாக்கோட்டை காவல் நிலைய எழுத்தர் மாயவதன் பேசினார். ராஜா புகார் கொடுத்திருப்பதால் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கூறினார். தவிர என்னிடம் அடிக்கடி போன் செய்து தகாத முறையில் பேசினார். ராஜா சொல்வதுபோல் நடக்காவிட்டால் ஆட்களை வைத்து ராஜாவைக் கடத்தி மிரட்டியதாக வழக்கு போடுவதாகவும் அச்சுறுத்தினார். காவல் துறையில் பணி புரியும் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாயவதன், ராஜாவுடன் சேர்ந்து சட்டவிரோதமான செயல்களைச் செய்து வருகிறார். இவர்களைக் கைது செய்து விசாரித்தால் பல உண்மைகள் வெளியே வரும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில், முதல்வர் தனிப்பிரிவுக்கு அளித்த புகாரின் அடிப்படையில் சாக்கோட்டை காவல்நிலையத்தில் மனு அளித்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில், விஸ்வநாதன் (எ) ராஜா தன்னை நடன நிகழ்ச்சிக்கு அழைத்து, தனது பெண்மையை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாகவும், முறைகேடான செயல்களுக்குத் தூண்டியதாகவும் தெரிவித்தார். அதனடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354, 506 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்து ராஜாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கருத்துகள்