நித்தி ஆயோக் இந்தியாவில் கார்பன் வெளியேற்றம் அற்ற போக்குவரத்துக்கான அமைப்பு : நிதி ஆயோக் மற்றும் உலக வளங்கள் இந்திய மையம் தொடக்கம்
இந்தியாவில் கார்பன் வெளியேற்றம் இல்லாத போக்குவரத்துக்கான அமைப்பை நிதிஆயோக் மற்றும் உலக வளங்கள் இந்திய மையம்(WRI) ஆகியவை கூட்டாக இணைந்து தொடங்கியுள்ளன. ஆசியாவுக்கான என்டிசி-போக்குவரத்து முயற்சித் திட்டத்தின் (NDC-TIA) ஒரு பகுதியாக இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
காணொலிக் காட்சி மூலம் நடந்த இந்த நிகழ்ச்சியை நிதிஆயோக் தலைமைச் செயல் இயக்குநர் அமிதாப் காந்த் தொடங்கி வைத்தார். ஆசியாவின் போக்குவரத்துத் துறையில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவில் மொத்த கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றத்தில், 90 சதவீதத்துக்கும் மேல் வாகனப் போக்குவரத்தால் ஏற்படுகிறது என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. போக்குவரத்துத் துறையில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு, மின்சார வாகனங்களுக்கு மாறுவதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதில் நிதிஆயோக் மும்முரமாக உள்ளது.
இந்தியப் போக்குவரத்துத் துறையில் கார்பன் வெளியேற்றத்தை அகற்றுவதில், பயனுள்ள கொள்கைகளின் ஒத்திசைவான யுக்திகளை உருவாக்குவது மற்றும் பல தரப்பினரை ஒன்றிணைப்பதில் என்டிசி-டிஐஏ கவனம் செலுத்துகிறது. இந்த அமைப்பின் மூலம் உலக வளங்கள் இந்திய மையம், நிதிஆயோக் மற்றும் இதர பங்குதாரர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்தியாவில் மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்கான யுக்திகளை வகுப்பதில் ஒருங்கிணைந்து செயல்படுவர். போக்குவரத்துத் துறையில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் இலக்கை அடைய ஒரே மாதிரியான கொள்கைகளை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தை இந்த அமைப்பு நடத்தும்.
இந்நிகழ்ச்சியில் முக்கிய உரையாற்றிய நிதிஆயோக் தலைவர், ‘‘போக்குவரத்தில் கார்பன் அகற்றத்தைக் கொண்டு வருவதற்கான இந்த அமைப்பு, நாட்டில் மின்சார வாகனச்சூழலை வரையறுக்கும் மைல்கல் ஆகும். இந்த அமைப்பு பல நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளை ஒரு பொதுவான தளத்தில் இணைக்கும்’’ என்றார்.
டபிள்ஆர் இந்தியா அமைப்பின் சிஇஓ டாக்டர் ஓ.பி.அகர்வால் பேசுகையில், ‘‘ நகர்ப்புறப் போக்குவரத்துத்துறையில் கார்பனை அகற்றும் மிகச் சிறந்த வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளது. நடந்து செல்லுதல், மிதிவண்டி ஓட்டுதல், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துதல், மின்சார வாகனங்களை ஊக்குவிப்பது ஆகியவை சரியான யுக்தியாக இருக்கும்’’ என்றார்.
கருத்துகள்