தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் ஐகானிக் வாரக் கொண்டாட்டங்கள்
கருத்துக் கோர்வையை மெருகேற்றும் புகைப்படக்கருவி என்ற தலைப்பில் ஒளிப்பதிவாளர் திரு அல்ஃபோன்ஸ் ராய் உரையாற்றுகிறார்
கருத்துக் கோர்வையை மெருகேற்றும் புகைப்படக்கருவி என்ற தலைப்பில் ஒளிப்பதிவாளர் திரு அல்ஃபோன்ஸ் ராய் உரையாற்றும் நிகழ்ச்சியை தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் நாளை (ஆகஸ்ட் 25, 2021) காலை 10 மணிக்கு நடத்தவிருக்கிறது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பாக நடைபெறும் ஐகானிக் வாரம் 2021 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 23-ஆம் தேதி, 'படத்தொகுப்பில் தொழில்நுட்பம்- அன்றும், இன்றும்’ என்ற தலைப்பில் திரைப்படத் தொகுப்பாளர் திரு. அக்கினேனி ஸ்ரீகர் பிரசாத் கலந்து கொண்ட இணையவழி நிகழ்ச்சியில், முன்பதிவு செய்திருந்த தமிழ்நாட்டில் உள்ள திறன் மேம்பாட்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 120 மாணவர்கள் இந்த அமர்வில் பங்கேற்றார்கள். தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி, படத்தொகுப்பில் உள்ள நடைமுறைகள் மற்றும் படைப்பம்சங்கள், கதையைத் திறம்பட எடுத்துரைப்பதில் அவற்றின் தாக்கம் குறித்து திரு. ஸ்ரீகர் பிரசாத் உரையாற்றினார். மின்னணு வாயிலாக அவருடன் கலந்துரையாடிய மாணவர்கள், இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ளப்பட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் உத்திகள் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்டனர்.
www.cinemasofindia.com என்ற தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் ஓடிடி தளத்தில், ‘திரைப்படத் தயாரிப்பில் நவீன இந்தியா மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள்' என்ற கருப்பொருளில் பல்வேறு விருதுகளைப் பெற்ற திரைப்படங்கள் ஒரு வார காலத்திற்கு இலவசமாக ஒளிபரப்பப்படும்.
ஐகானிக் வாரம் 2021 கொண்டாட்டங்கள் குறித்துப் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் திரைப்படங்கள் பிரிவு இயக்குநரும், தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநருமான திருமதி. தன்பிரீத் கௌர், “இந்தியாவின் 75-ஆவது சுதந்திர ஆண்டை முன்னிட்டு நடைபெறும் ஐகானிக் வாரக் கொண்டாட்டங்களின் போது, திரைப்படத் திறன் சார்ந்த நிகழ்ச்சிகளை இணையவழி வாயிலாக நடத்துவதற்கும், தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் ஓடிடி தளத்தில் திரைப்படங்களை திரையிடுவதற்கும் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். திறன் மேம்பாட்டிற்கு முன்னுரிமை வழங்கப்படுவதோடு சர்வதேச நிலவரங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் இளைஞர்கள் தங்களது தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்”, என்று கூறினார்.
ஆகஸ்ட் 23 முதல் 29 வரை நடைபெறும் ஐகானிக் வாரம் 2021, இந்திய அரசின் விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவ முன்முயற்சியின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.
தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் பொதுமேலாளர் திரு. டி. ராமகிருஷ்ணன் பேசுகையில், “திரைப்படத் தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவு குறித்த அமர்வுகளில், புகழ்பெற்ற மற்றும் விருதுகள் வென்ற சிறப்பு அழைப்பாளர்களிடமிருந்து பல்வேறு திறன்களை மாணவர்கள் பெறுவதற்கு இது ஒரு மிகச்சிறந்த தருணமாக விளங்கும்”, என்று தெரிவித்தார்.
“பல்வேறு திரைப்படத் திருவிழாக்களுக்கு உகந்த தளமாக இது உருவாகி வருகிறது. ஐகானிக் வாரத்தை முன்னிட்டு, இந்தத் தளத்தில் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் பல்வேறு படைப்புகளை ஒளிபரப்புவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். திரைப்பட அறிவை மேம்படுத்தி புதிய தலைமுறை திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு இதன் மூலம் ஊக்கமளிக்கப்படும்”, என்று சிண்டிகேஷன் அண்ட் மார்க்கெட்டிங்கின் விநியோகப் பிரிவு தலைவர் திருமிகு தீப்தி சாவ்லா கூறினார்.
சிறப்பு அழைப்பாளர்கள் பற்றி:
திரு அக்கினேனி ஸ்ரீகர் பிரசாத்-
திரு அக்கினேனி ஸ்ரீகர் பிரசாத், இந்தியத் திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். இவர் தெலுங்கு, மலையாளம், தமிழ், இந்தி ஆகிய மொழிப் படங்களில் அதிகமாகப் பணியாற்றி வருகிறார். எட்டு தேசிய திரைப்பட விருதுகளையும், 5 கேரள மாநிலத் திரைப்பட விருதுகளையும், 2 நந்தி விருதுகளையும், 2 ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். இந்தியத் திரைப்படத்துறையில் பல்வேறு மொழிகளில் பங்களித்ததற்காக 2013-ஆம் ஆண்டின் லிம்கா சாதனைப் புத்தகத்தில் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது. “அதிக எண்ணிக்கையிலான மொழிகளில் தொகுக்கப்பட்ட திரைப்படங்களுக்கான” சாதனையையும் படைத்து, லிம்கா சாதனைப் புத்தகத்தில் திரு பிரசாத் இடம்பெற்றுள்ளார். இதுவரை 17 வெவ்வேறு மொழிகளின் படங்களுக்கு அவர் திரைப்படத் தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
திரு அல்ஃபோன்ஸ் ராய்-
திரு அல்ஃபோன்ஸ் ராய், இந்திய ஒளிப்பதிவாளராவார். அடிப்படையில் அவர் ஓர் வன உயிரின ஒளிப்பதிவாளர். டிரெஷர் சீகர்ஸ்: டிபெட்’ஸ் ஹிட்டன் கிங்டம், கிங்டம் ஆஃப் கோப்ரா, டெம்பிள் டவர், எலிபன்ட் மௌண்டைன் மற்றும் டைகர் பை நைட் போன்ற வன உயிரின ஆவணங்களில் தமது பங்களிப்பை இவர் வழங்கியுள்ளார். கடந்த 2008-ஆம் ஆண்டு தனது முதல் திரைப்படமான ஆமீர்க்கு அவர் விருது பெற்றார். ரெய்ட், மே கட், ஆமீர், குலாபி கேங், மும்பை கட்டிங் உள்ளிடிட்ட திரைப்படங்களில் அவர் பணியாற்றியுள்ளார்.
சினிமாஸ் ஆஃப் இந்தியா:
தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் ஓடிடி தளமான www.cinemasofindia.com இல் ‘திரைப்படத் தயாரிப்பில் நவீன இந்தியா மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள்' என்ற கருப்பொருளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு திரைப்படங்கள் ஒளிபரப்பப்படும். ஐலண்ட் சிட்டி, பயாஸ்கோப், கிராசிங் பிரிட்ஜஸ், பங்கர்வாடி, வீஸ் மஞ்சி வீஸ், மிஸ் பீட்டீ’ஸ் சில்ரன் மற்றும் ஏக் கர் ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பப்படும்.
தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் பற்றி:
கடந்த 1985-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், இந்தியாவில் சிறந்த திரைப்பட இயக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் (இந்திய அரசு) உருவாக்கப்பட்டது. பல்வேறு இந்திய மொழிகளின் தனிநபர் திரைப்படங்களுக்கு நிதி, விநியோகம் மற்றும் வளர்ச்சி சார்ந்த ஆதரவை அளிப்பதற்கான சூழலை உருவாக்குவதில் இந்த அமைப்பு முக்கிய பங்காற்றுகிறது.
கருத்துகள்