பெண்களும் எதிர்ப்புக் குரல் எழுப்பலாம் என்று தன்னம்பிக்கை ஊட்டியவர் மகாத்மா காந்தி-எழுத்தாளர் பாவண்ணன் தகவல்
தென்னாப்பிரிக்காவில் இருந்து காந்தி இந்தியா திரும்பி விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த பிறகுதான் பெண்கள் பங்கேற்பு அதிகரித்தது. காந்தியின் கருத்துக்களும் முழக்கங்களும் அழைப்புகளும் பெண்களுக்கு அரசியல் போராட்டங்களில் ஈடுபட பல வாய்ப்புகளை வழங்கின. தங்களின் உரிமைகளுக்காக தாங்களும் உரிமைக் குரல் எழுப்பலாம் என்று காந்திதான் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டினார். கடலூர் அஞ்சலையம்மாள் மற்றும் எழுத்தாளரும் மேடைப் பேச்சாளருமான கோதைநாயகி அம்மாள் இருவரையும் உதாரணங்களாகச் சொல்லலாம். இதுபோன்ற எண்ணற்ற பெண்களின் தியாகங்கள் ஏடுகளில் மறைந்துள்ளன, எழுத்துகளில் புதைந்துள்ளன. இன்றைய தலைமுறையினர் விடுதலைப் போராட்ட வீர்ர்களின் வாழ்க்கையையும் தியாகங்களையும் தெரிந்து கொள்ளவேண்டும். அப்போதுதான் சுதந்திரத்தின் அருமை அவர்களுக்குத் தெரியும் என்று சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு.பாவண்ணன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகமும் புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப் பணித் திட்டமும் இணைந்து நேற்று பிற்பகல்(28.8.2021) நடத்திய இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு சிறப்பு காணொலி கருத்தரங்கில் துவக்கவுரை ஆற்றியபோது பாவண்ணன் இவ்வாறு தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கு புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் முதல்வர் டாக்டர் கே.விவேகானந்தன் தலைமை வகித்தார். உழைப்புதான் என்றும் நிலைத்திருக்கும். அயராது நம் முன்னோர் உழைத்ததால்தான் நாம் இன்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம். இன்றைய மாணவர்கள் உழைப்புக்கு மரியாதை கொடுப்பதோடு உழைக்கவும் தயங்கக் கூடாது என்று திரு. விவேகானந்தன் குறிப்பிட்டார்.
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மின்னணுவியல் & கணிப்பொறி அறிவியல் துறைப்பேராசிரியர் டாக்டர் க.நாகராஜன் சிறப்புரை வழங்கினார். வெளிநாட்டினர் நம் நாட்டை காந்தியின் நாடாகத்தான் பார்க்கின்றனர். நம்மை காந்தியின் வாரிசுகளாகத்தான் உலகம் பார்க்கின்றது. ஆனால் நாம்தான் காந்தியின் கொள்கைகளைத் தெரிந்து கொள்வதோ கடைபிடிப்பதோ இல்லை. குறைந்தபட்சம் காந்தி வாங்கிக் கொடுத்த சுதந்திரத்தையாவது இன்றைய தலைமுறையினர் பாதுகாக்க வேண்டும் என்று திரு. நாகராஜன் தனது உரையில் குறிப்பிட்டார்.
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருமான டாக்டர் எஸ்.ராஜேந்திரன் கருத்துரை வழங்கினார்.
உரையரங்கத்துக்குப் பிறகு மாணவ மாணவிகளுக்கான ஆன்லைன் பேச்சுப் போட்டி நடந்தது. விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு என்ற தலைப்பிலான இந்த பேச்சுப் போட்டியில் 10 பேர் கலந்து கொண்டனர். எழுத்தாளர் திரு.பாவண்ணன் மற்றும் பேராசிரியர் க. நாகராஜன் இருவரும் நடுவர்களாக இருந்து பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்தனர். முதல் பரிசுக்கு ஏபி. நிவேதிதா, இரண்டாம் பரிசுக்கு சி.தாமரைச்செல்வி மற்றும் மூன்றாம் பரிசுக்கு எஸ். ஸ்ரீமதி, எஸ்.சந்தியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முன்னதாக புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் துணை இயக்குனர் டாக்டர் தி.சிவக்குமார் வரவேற்பு ஆற்றினார். வரலாற்றில் ஆவணப்படுத்தாமல் விடப்பட்டுள்ள மற்றும் பிரபலமாகாத விடுதலைப் போராட்ட வீர்ர்களின் வாழ்க்கையையும் தியாகங்களையும் வெளிப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது என்று சிவக்குமார் தெரிவித்தார். மாணவர்கள் தங்கள் பகுதிகளில் யாராவது இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்களா எனத் தேடிக் கண்டறிந்து அவர்களை வெளி உலகிற்கு தெரியப்படுத்த முன்வர வேண்டும் என்று சிவக்குமார் கேட்டுக்கொண்டார்.
நிறைவில் கள விளம்பர உதவியாளர் திரு.மு.தியாகராஜன் நன்றி கூறினார்.
கருத்துகள்