இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகப் பெண்களின் பங்கு மகத்தானது – சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் எஸ்.எஸ்.சுந்தரம் தகவல்
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகப் பெண்களின் பங்கு மகத்தானது – சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் எஸ்.எஸ்.சுந்தரம்
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகப் பெண்களின் பங்கு மகத்தானது என்றும் ஆண்களுக்கு இணையாக அவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தாலும் அது சரிவர வெளியுலகிற்கு அறியப்படவில்லை என்றும் சென்னைப் பல்கலைக்கழக இந்திய வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் எஸ்.எஸ்.சுந்தரம் கூறியுள்ளார்.
நாட்டின் “75-ஆவது சுதந்திர ஆண்டுக் கொண்டாட்டத்தை (ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்)” ஒட்டி “அறியப்படாத தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள்” என்ற தலைப்பில் இணையவழிக் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மக்கள் தொடர்பு கள அலுவலகம் – தஞ்சாவூர் மற்றும் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம்: அலகு – 2-ம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த சிறப்புக் கருத்தரங்கில் பேராசிரியர் எஸ். எஸ். சுந்தரம் சிறப்புரையாற்றினார்
அப்போது பேசிய அவர், இன்று நாம் 75-வது ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடி வரும் வேளையில் இந்த சுதந்திரத்தை நாம் எளிதில் பெறவில்லை. பல்வேறு வீரர்கள் மற்றும் தலைவர்கள் தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்ததன் மூலமே கிடைக்கப் பெற்றுள்ளது என்பதை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக தமிழகத்தில் இருந்து பங்கேற்ற வா.உ.சிதம்பரம், சுப்பிரமணிய சிவா, கொடிக்காத்தக் குமரன், சுப்பிரமணிய பாரதி, ராஜாஜி, காமராஜரையும், தேசிய அளவில் சர்தார் வல்லபாய் பட்டேல், கோபால கிருஷ்ண கோகலே, தாதாபாய் நவரோஜி, சுபாஷ் சந்திரபோஸ் போன்றோரை இந்த தருணத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் தன்னலம் பாராமல் ஆண்களுக்கு இணையாக பெண்களும் இந்த சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்களின் பங்கு மகத்தானது. குறிப்பாக தேசிய அளவில் ஜான்சிராணி, அன்னிபெசன்ட் அம்மையார் போன்றோரும், தமிழகத்தில் வேலு நாச்சியார் தில்லையாடி வள்ளியம்மை போன்றோரைத் தவிர கடலூர் அஞ்சலையம்மாள், லட்சுமிகௌல், லீலாவதி அம்மையார் போன்ற பல பெண் போராட்ட வீரர்கள் வெளியில் அறியப்படாமல் உள்ளனர். விடுதலைப் போராட்ட வீரரும் சமூகப் போராளியுமான லீலாவதி அம்மையார் சுதேசி இயக்கம் என்ற கொள்கையைக் கொண்டு ஆங்கிலேயருக்கு எதிர்ப்பு தெரிவித்து கதர் ஆடை அணிந்ததற்காக மூன்று முறை சிறை சென்றார்.
குறிப்பாக 1941-டிசம்பர்-1-இல் சென்னை எழும்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவர் குறித்த எந்த தகவலும் 4 மாதங்களுக்கும் மேல் தெரியாமல் இருந்தது. இதுபோன்ற பல வீரர்களின் விடுதலைப் போராட்ட விவரங்கள் சென்னை எழும்பூரில் உள்ள ஆவணக் காப்பகத்தில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. எனவே இத்தகைய பெருமைமிகு இந்திய சுதந்திரச் சுடரை வரும் காலங்களில் போற்றிப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் தலைமையுரை ஆற்றிய மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குநர் ஜெ.காமராஜ், நாம் பெற்றுள்ள இந்த சுதந்திரம் அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. நமக்காக போராடிய அத்தகைய தன்னலமற்ற போராட்ட வீரர்கள் சுதந்திரத்திற்காக தங்கள் வாழ்வை மிகத் தெளிவாக வகுத்துப் போராடினர் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். அத்தகைய வரலாற்றை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு தேசத்திற்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
கருத்தரங்கில் தஞ்சாவூர் மக்கள் தொடர்பு கள அலுவலர் கே. ஆனந்த பிரபு வரவேற்புரையாற்றினார். குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் – அலகு -2 ஒருங்கிணைப்பாளர் எம்.ஐடா ரோஸ் வாழ்த்துரை மற்றும் நன்றியுரையாற்றினார்.
முன்னதாக “75-ஆவது சுதந்திர ஆண்டுக் கொண்டாட்டத்தை (ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்)” ஒட்டி “இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கு” என்ற தலைப்பில் சிறப்புப் பேச்சுப் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கருத்துகள்