சேலம் அருகில் சாலை விபத்தில், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் உயிர் தப்பினார்.
சேலம் மாவட்டத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராஜ். நிகழ்ச்சி முடிந்ததும் இரவு, 10:00 மணிக்கு இனோவா காரில் திருச்சிக்குப் புறப்பட்டார்.
சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில், தாசநாயக்கன்பட்டி அருகில் அவரது வாகனம் சென்று கொண்டிருந்த போது நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி வந்த சிறிய சரக்கூந்து நிலை தடுமாறி சாலை நடுவில் இருந்த தடுப்பை உடைத்துக் கொண்டு, கலெக்டரின் கார் மீது மோதிக் கவிழ்ந்தது.காரின் முன்பக்கம் நொறுங்கியது. காரின் பின் இருக்கையில் ஆட்சியர் சிவராஜ் அமர்ந்திருந்ததால் உயிர் தப்பினார்.
முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஆட்சியரின் உதவியாளர் பெரியண்ணசாமி, மற்றும் ஓட்டுநர் சீனிவாசன் ஆகியோர் காயமடைந்து மல்லுார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பினர். மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால், விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மாற்று வாகனம் மூலம் திருச்சிக்கு ஆட்சியர் சென்றார். விபத்தால் சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. சிறிய சரக்கூந்தை அப்புறப்படுத்திய காவல்துறையினர், அதன் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.
கருத்துகள்