ஆண்களுக்கு பெண்களின் உரிமைகள் குறித்து கற்றுத் தரவேண்டும்
புதுச்சேரி அரசு செயலாளர் செ.உதயகுமார் தகவல்
பெண்கள் தங்கள் கல்விக்கு அதிலும் உயர்கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும். பெண்கள் படிக்கவே கூடாது என்ற காலம் போய் பள்ளி இறுதித் தேர்வுகளில் மாணவர்களைவிட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெறும் காலமாக இன்றைய காலகட்டம் உள்ளது. பாரதி கண்ட புதுமைப் பெண்களாக மாணவிகள் மாறவேண்டும். அதற்கு கடுமையாக உழைப்பதோடு உரிமைக்கு அஞ்சாமல் குரல் எழுப்பும் துணிவும் வேண்டும். பொதுவாக ஆண்களைவிட பெண்களுக்குத்தான் மனோதிடம் அதிகம். பெண்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். ஒப்பீட்டு அளவில் புதுச்சேரியில்
பெண்களுக்கான சுதந்திரமும் பாதுகாப்பும் திருப்திகரமாக உள்ளன. பெண்களின் உரிமைகள் குறித்து ஆன்களுக்கு கற்பிக்க வேண்டும். மாணவிகள் தங்கள் வீடுகளில் உள்ள தந்தை, சகோதரர்களுக்கு பெண்களை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டில் நாம் பெண்களுக்கு உரிய மரியாதையை உறுதி செய்வதோடு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் வீராங்கனைகள் குறித்து தெரிந்துகொண்டு அவர்களின் தியாகத்தையும் போற்ற வேண்டும் என்று புதுச்சேரி அரசின் செய்தி-விளம்பரத்துறையின் அரசு செயலரும் ஆசாதி கா அம்ருத் மகோத்சவ் மாநிலக் குழு உறுப்பினர்-செயலருமான திரு.செ,உதயகுமார் தெரிவித்தார்.
புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகமும் புதுச்சேரி தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டமும் இணைந்து நடத்திய இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு பெருவிழாவின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட ஆன்லைன் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கியபோது செயலர் உதயகுமார் இவ்வாறு தெரிவித்தார். பரிசளிப்பு நிகழ்ச்சி செயலரின் அறையிலேயே நடைபெற்றது.
முன்னதாக மக்கள் தொடர்பு கள அலுவலக துணை இயக்குனர் டாக்டர் தி.சிவக்குமார் தனது அறிமுக உரையில் 28.8.2021 அன்று நடத்தப்பட்ட வெபினாரில் சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு.பாவண்ணன் மற்றும் புதுச்சேரி தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தின் மின்னணு மற்றும் கணிப்பொறியியல் துறைப் பேராசிரியர் டாக்டர் க.நாகராஜன் இருவரும் நடுவர்களாக இருக்க விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பரிசுகள் வழங்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.
முதல் பரிசை ஏபி. நிவேதிதா, இரண்டாம் பரிசை சி.தாமரைச்செல்வி மற்றும் இரண்டு மூன்றாம் பரிசுகளை எஸ். ஸ்ரீமதி மற்றும் எஸ்.சந்தியா ஆகியோர் செயலாளர் திரு.செ.உதயகுமாரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருமான டாக்டர் எஸ்.ராஜேந்திரன் மற்றும் கள விளம்பர உதவியாளர் திரு.மு.தியாகராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி அரசின் செய்தி-விளம்பரத்துறையின் அரசு செயலாளர் திரு.செ,உதயகுமாருக்கு மக்கள் தொடர்பு கள அலுவலக துணை இயக்குனர் டாக்டர் தி.சிவக்குமார் காந்திய நூல்களை வழங்குகின்றார்.
புதுச்சேரி அரசின் செய்தி-விளம்பரத்துறையின் அரசு செயலாளர் திரு.செ,உதயகுமார் & மக்கள் தொடர்பு கள அலுவலக துணை இயக்குனர் டாக்டர் தி.சிவக்குமார் ஆகியோருடன் பரிசு பெற்ற மாணவிகள்
கருத்துகள்