சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகில் நடந்த சாலை விபத்தில் பெண் மருத்துவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகில் நடந்த சாலை விபத்து சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது ஜல்லிக்கல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மேலேரிய நிலையில் கவிழ்ந்ததில் பெண் மருத்துவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் மதகுப் பட்டியை சேர்ந்தவர் ஆதப்பன். இவரது மனைவி டாக்டர் இந்திரா. (வயது 60). மதுரையில் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் நல மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் .
இன்று சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மருத்துவர் இந்திரா தனது காரில் அவரே ஓட்டி வந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் மதுரைக்குத் திரும்பிய நிலையில்.திருப்பத்தூரிலிருந்து சிவகங்கைக்கு ஜல்லிக் கற்கள் ஏற்றுக்கொண்டு எதிராக டிப்பர் லாரி வந்தது.ஒக்கூர் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக லாரி, கார் மீது கவிழ்ந்ததில் கார் முழுமையாக நொறுங்கியது. காருக்குள்ளிருந்த டாக்டர் இந்திரா உடல் நசுங்கி உயிரிழந்தார்.
தகவலறிந்ததும் மதகுபட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்புத் துறையினர் உதவியோடு லாரியில் சிக்கிய காரை மீட்டனர் .
மூன்று மணிநேரப் போராட்டத்திற்கு பின் மருத்துவர் இந்திரா காரிலிருந்து பிணமாக மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு சிவகங்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஜல்லி ஏற்றிய டிப்பர் லாரியை ஓட்டி வந்த அஜீத் என்பவரை காவல்துறையினர் பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
திருமண நிகழ்ச்சிக்குச் சென்று விட்டு சந்தோஷமாக மதுரைக்கு திரும்பிய பெண் மருத்துவர் லாரி விபத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் நிகழ்ந்தது குறித்து மதகுபட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்து காரணமாக மானாமதுரை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது
கருத்துகள்