தேசிய ஊட்டச்சத்து மாதம் குறித்த ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு நிகழ்ச்சியை கரூர் இனுங்கூரில் திருச்சிராப்பள்ளி கள விளம்பர அலுவலகம் நடத்தியது
ஊட்டச்சத்து மாதம், இந்தியாவின் 75 ஆண்டுகள் சுதந்திரத்தை குறிக்கும் விடுதலையின் அம்ரித் மகோத்ஸவம் மற்றும் கொவிட் தடுப்பு குறித்த ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு நிகழ்ச்சி ஒன்றை கரூரில் உள்ள குளித்தலை வட்டத்தில் இருக்கும் இனுங்கூரில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கள விளம்பர அலுவலகம், திருச்சிராப்பள்ளி நடத்தியது.
தலைமையுரை ஆற்றிய இனுங்கூர் பஞ்சாயத்து தலைவர் திரு பி குமார், 18 வயதுக்கு பின்பே பெண்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார். பத்தாம் வகுப்பு படித்த பெண்களின் திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் ரூ 25000 மற்றும் பட்டப்படிப்பு படித்த பெண்களின் திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் ரூ 50,000 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாக அவர் கூறினார்.
அறிமுகவுரை ஆற்றிய திருச்சிராப்பள்ளி கள விளம்பர அலுவலர் திரு கே தேவி பத்மநாபன், ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்காக செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்படுவதாக கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியால் சர்வதேச பெண்கள் தினமான 2018 மார்ச் 8 அன்று ஊட்டச்சத்து இயக்கம் தொடங்கப்பட்டதென்று அவர் கூறினார்.
ஊட்டச்சத்து மாதத்தில் மொத்தம் நான்கு மையக்கருக்கள் இருப்பதாகவும், முதலாவதாக ஊட்டச்சத்து மிக்க செடிகளை நடுவதற்காக செப்டம்பர் 1 முதல் 7 வரை ஊட்டசத்து மரம் நடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இரண்டாவது மையக்கருவான ஆரோக்கிய ஊட்டச்சத்திற்காக யோகா செப்டம்பர் 8 முதல் 15 வரை அனுசரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், மூன்றாவது பகுதியாக செப்டம்பர் 16 முதல் 23 வரை அங்கன்வாடி பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டதென்றும் நான்காவதாக செப்டம்பர் 24 முதல் 30 வரை தீவிர ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள் வழங்கப்படுவதாகவும் கூறினார்.
திருச்சி அந்தநல்லூர் வட்டத்தில் உள்ள முத்தரசநல்லூரில் செப்டம்பர் 7 அன்று முதல் ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு நிகழ்ச்சியும், பெரம்பலூரில் உள்ள செட்டிகுளம் அலத்தூர் வட்டத்தில் இரண்டாவது நிகழ்ச்சியும், திருச்சி மணிகண்டம் வட்டத்தில் உள்ள நாகமங்கலத்தில் மூன்றாவது நிகழ்ச்சியும் நடத்தப்பட்டதென்றும், தற்போது கரூரின் குளித்தலை வட்டத்தில் உள்ள சுக்காப்பட்டி இனுங்கூர் கிராமத்தில் நான்காவது ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
சிறப்புரை ஆற்றிய இனுங்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்ட மருத்துவ அலுவலர் டாக்டர் டி சிவகுமார், பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்தை வலுப்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை சுகாதாரத் துறை செயல்படுத்தி வருவதாக கூறினார். பெருந்தொற்றின் பரவலை தடுக்க கொவிட் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுமாறு மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு ஏ ராஜேந்திரன் மற்றும் திரு ஏ பி சுப்பிரமணியன் ஆகியோர் மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து பேசினர். ஊட்டச்சத்து மாதமாக செப்டம்பர் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர் திருமதி எம் வினோதினி பேசினார். மன நலனின் முக்கியத்துவம் குறித்து கரூர் மாவட்ட மனநல ஆலோசகர் திருமதி ஏ மகேஸ்வரி பேசினார்.
வரவேற்புரை வழங்கிய திருச்சிராப்பள்ளி கள விளம்பர அலுவலர் திரு கே ரவீந்திரன், ஊட்டச்சத்து மாதம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி குளித்தலை பஞ்சாயத்து ஒன்றியம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் குளித்தலை, இனுங்கூர் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றோடு இணைந்து நடத்தப்படுவதாக கூறினார்.
சித்த மருத்துவ அலுவலர் திரு நடராஜன், சுக்கம்பட்டி பஞ்சாயத்து ஒன்றிய பள்ளி தலைமையாசிரியர் திரு பால் ஜகதீசன், இனுங்கூர் பஞ்சாயத்து துணை தலைவர் திரு பாலு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பேசினர். இனுங்கூர் பஞ்சாயத்து செயலாளர் திரு பி மதியழகன் நன்றியுரை வழங்கினார்.
ஆரோக்கியமான குழந்தையின் தாய்க்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கீரைகள், காய்கறிகள் மற்றும் ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் குறித்த கண்காட்சி நிகழ்ச்சியின் போது நடத்தப்பட்டது. கொவிட் தடுப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பாடல் மற்றும் நாடக நிகழ்ச்சிகளை அபிநயா கலை மன்றம் நடத்தியது.
தேசிய ஊட்டச்சத்து மாதம், விடுதலையின் அம்ரித் மகோத்ஸவம் மற்றும் கொவிட் தடுப்பு விழிப்புணர்வு குறித்த எல் ஈ டி விழிப்புணர்வு வாகனம் பஞ்சாயத்து தலைவர் திரு பி குமாரால் இனுங்கூர் கிராமத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
கருத்துகள்