உட்புறங்களில் காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளியை அனுமதிக்கும் வகையில் கட்டிடக்கலையை மேம்படுத்த குடியரசு துணைத் தலைவர் அழைப்பு
உட்புற இடங்களில் காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளியை சிறந்த முறையில் அனுமதிக்கும் வகையில் கட்டிடக்கலையை மேம்படுத்த குடியரசு துணைத் தலைவர் அழைப்பு
உட்புற இடங்களில் சரியான காற்று சுழற்சி மற்றும் சூரிய ஒளியை உறுதி செய்ய வீடுகளின் திட்டமிடல் மற்றும் கட்டுமான அணுகுமுறையை மேம்படுத்த வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று அழைப்பு விடுத்தார்.
நாம் சுவாசிக்கும் காற்றின் தரமும் நமது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை தீர்மானிக்கிறது என்பதை கொவிட் பெருந்தொற்று சரியான நேரத்தில் நினைவூட்டியுள்ளது என்று அவர் கூறினார்.
காற்றில் வைரஸ்கள் மணிக்கணக்கில் இடைநிறுத்தப்பட்டிருப்பதால், சாதாரண சுவாசம் அல்லது பேசுவதன் மூலம் கூட அவை பரவும் என்ற ஆராய்ச்சி முடிவுகளை அவர் குறிப்பிட்டார். மோசமான காற்றோட்டத்துடன் கூடிய நெரிசலான இடங்கள் அதிக தொற்று அபாயத்தை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.
போதுமான காற்றோட்டம் மற்றும் இயற்கை ஒளியுடன் கூடிய இடங்களை உருவாக்க அவர் அழைப்பு விடுத்தார். மேலும், இந்த செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல மருத்துவ சமுதாயத்தை அவர் வலியுறுத்தினார்.
நுரையீரலியல் (இன்டர்வென்ஷனல் பல்மனாலஜி) குறித்த இரண்டாவது வருடாந்திர சர்வதேச மாநாடான பிராங்கஸ் 2021-ஐ காணொலி மூலம் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் இருந்து தொடங்கிவைத்த திரு நாயுடு, பெருந்தொற்றுக்குப் பிறகு சுவாச ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்கள் அதிகம் அறிந்திருப்பதைக் கவனித்தார்.
புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் நுரையீரல் மற்றும் தொண்டை புற்றுநோய் குறித்து அரசு மற்றும் குடிமை சமூகம் ஆகிய இரு தரப்பிலும் அதிகளவில் மக்கள் தொடர்பு இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
பெருநகரங்களில் குறிப்பாக குளிர்கால மாதங்களில் வெளிப்புறக் காற்றின் தரம் மோசமடைந்து வருவது குறித்து திரு நாயுடு கவலை தெரிவித்தார். பருவநிலை மாற்றம் மற்றும் வாகன மாசுபாடு ஆகியவை இதன் முக்கிய காரணிகளாக இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், வளர்ச்சியை நோக்கிய நமது அணுகுமுறையை நிலைத்தன்மை நிலைப்பாட்டில் இருந்து தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஒருவரின் வாழ்க்கை முறையை மதிப்பீடு செய்து, அவரது கார்பன் தடயத்தை முடிந்தவரை குறைக்க முயற்சிக்கவும் அவர் மக்களை கேட்டுக்கொண்டார்.
கிராமப்புறங்களில் நல்ல சுகாதார வசதிகளை அமைக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். "உலகத் தரம் வாய்ந்த தொலைமருத்துவ வசதிகளை நமது கிராமங்களுக்கு வழங்க, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் இந்தியாவின் வலிமையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்" என்று அவர் கூறினார்.
கருத்துகள்