தமிழகத்தில் பஞ்சமி நிலங்களை மீட்க விரைவில் சட்டம் இயற்ற முதலமைச்சர் உறுதி ஷெட்யூல்டு வகுப்பு தேசிய ஆணையத்தின் துணை தலைவர் தகவல்
பஞ்சமி நிலத்தை மீட்க தகுந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்று தமிழக முதலமைச்சர் உறுதியளித்திருப்பதாக ஷெட்யூல்டு வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் துணை தலைவர் தகவல்
தமிழகத்தில் பஞ்சமி நிலங்களை மீட்க விரைவில் சட்டம் இயற்றப்படும் என முதலமைச்சர் உறுதியளித்திருப்பதாக ஷெட்யூல்டு வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் துணை தலைவர் அருண் ஹல்தார் கூறியுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 3 நாட்களாக காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்ததாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர், துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறைத் தலைவருடன் ஆய்வு செய்ததாக அவர் கூறினார்.
இதை தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின், தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி ஆகியோரை சந்தித்து பேசியதாக அவர் தெரிவித்தார். தமிழகத்தில் ஷெட்யூல்டு வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்ததாகவும் அவர் கூறினார்.
குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பஞ்சமி நிலத்தை மீட்பதற்கான சட்டம் விரைவில் கொண்டுவரப்பட்டு, அந்த நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும் என உறுதி அளித்ததாக தெரிவித்த அருண் ஹல்தார், தமிழகத்தில் சுமார் 2 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது என்றும் அதில் சுமார் 40,000 ஏக்கர் பஞ்சமி நிலத்தை வேற்றுப் பிரிவினர் அல்லது தனியார் நிறுவனங்கள் சட்ட விரோதமாக பயன்படுத்தி வருவதாகவும் கூறினார்.
மேலும் வன்கொடுமையால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.8.25 லட்சம் இழப்பீடு, அரசு வேலை, 3 ஏக்கர் விவசாய நிலம் போன்றவை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இதேபோல் தமிழகத்தில் ஷெட்யூல்டு வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாமல் உள்ள 3,000 அரசுப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக அருண் ஹல்தார் கூறினார்.
கருத்துகள்