தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே வழக்குரைஞர் கொலை வழக்கில் தொடர்புடைய மற்றொரு வழக்குரைஞர் படுகொலை. பழிக்கு பழியாக நடந்த சம்பவத்தில் நான்கு பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
தேனி மாவட்டம் கூடலூர் வட்டம் குள்ளப்பகவுண்டன்பட்டி வழக்குரைஞர் ரஞ்சித்குமார் (வயது 42). நிலப்பிரச்சனை தொடர்பாக 2020 ஆம் ஆண்டு
மார்ச் மாதம் 6 ஆம் தேதி உத்தமபாளையம் அருகில் கோவிந்தன்பட்டியில் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த உத்தமபாளையம் காவல்துறையினர் வழக்குரைஞர் மதன், ஜெயபிரபு, கார் ஓட்டுநர்கள் சூப் செல்வம், மற்றும் ஆனந்தன், உடன் கூலிப்படையாகச் செயல்பட்ட ராஜேஷ், சஞ்சய், ராஜா, வேல்முருகன் உள்ளிட்ட எட்டு பேரைக் கைது செய்த பிறகு மற்றொரு வழக்குரைஞர் சொக்கர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் தலைமறைவான மூதாட்டி மயிலம்மாளுடன் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் உள்ள நிலையில் தற்போது உயிரிழந்த ரஞ்சித்குமாரை பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கில் தொடர்புடைய கூடலூர் வழக்குரைஞர் மதன்(வயது 39) இன்று முற்பகலில் சாலை ஓரத்தில் வெட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டார். உத்தமபாளையம் நீதிமன்றத்தில் தனது பணியை முடித்து இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வழக்குரைஞர் மதனை காரில் பின் தொடர்ந்த கும்பல் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் அவரது வாகனத்தில் மோதி இடித்து கீழே தள்ளிவிட்டு நிலை தடுமாறி விழுந்த மதனை சராசரியாக வெட்டியுள்ளது. ரத்த வெள்ளத்தில் விழுந்த மதனை மீட்ட அருகிலிருந்த நபர்கள் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மதன் உயிரிழந்தாக தெரிவித்ததால் உடற்கூறாய்விற்காக சடலத்தை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இதனிடையே மதனை வெட்டிய கும்பல் காரில் தப்பிய போது உத்தமபாளையம் - அம்மாபட்டி சாலையில் காவல்துறையினர் பிடித்ததில் ஏற்கனவே படுகொலை செய்யப்பட்ட வழக்குரைஞர் ரஞ்சித்குமாரின் தந்தை கருணாநிதி (வயது 70), சகோதரர்கள் செல்வேந்திரன் (வயது 47), சுதேசி (வயது 36), மற்றும் உறவினர் குமார் (வயது 45) ஆகிய நான்கு பேரைக் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.
காவல்துறையினரின் முதல் விசாரணையில், ரஞ்சித்குமாரின் மரணத்திற்கு பழி வாங்குவதற்காக மதனை படுகொலை செய்திருப்பதாக தெரியவந்த நிலையில் உத்தமபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடர்கின்றனர்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பழிக்கு பழியாக வழக்குரைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பானது.
கருத்துகள்