வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் 64-வது நிறுவன தின விழாவை நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் கீழ் செயல்படும் கடத்தல் தடுப்பு மற்றும் புலனாய்வு அமைப்பான வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) தனது 64-வது நிறுவன தினத்தை இன்று கொண்டாடியது.
மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் புதுதில்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். நிதித்துறை இணை அமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி, வருவாய்த்துறை செயலாளர் திரு தருண் பஜாஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
டிஆர்ஐ மற்றும் அதன் அதிகாரிகளின் செயல்திறன், குறிப்பாக பெருந்தொற்றின் போது அவர்கள் ஆற்றிய சிறப்பான சேவையை திருமதி நிர்மலா சீதாராமன் பாராட்டினார். ஆபத்துகளுக்கிடையிலும் இடைவிடாத முயற்சிகளுக்காக சுமார் 800 அதிகாரிகளைப் பாராட்டிய நிதியமைச்சர், பெருந்தொற்றின் போது தங்கள் உயிரை இழந்த அஞ்சா நெஞ்சர்களுக்கு தமது மரியாதையையும் இரங்கலையும் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதர எல்லைகளைப் பாதுகாப்பதில் முன்கள ராணுவ வீரர்கள் போன்று வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் அலுவலர்கள் செயல்படுகிறார்கள் என்று அமைச்சர் கூறினார்.
டிஆர்ஐ-யால் சமீபத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட பெருமளவிலான போதைப் பொருட்கள், தங்கம், செம்மரங்கள், தந்தம், சிகரெட் போன்றவற்றின் கடத்தல் முயற்சிகளை நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
கருத்துகள்