அதிமுக ஆட்சியின் கொள்கை முடிவென்பதால் மேல்முறையீடு போயஸ் தோட்ட வேதா நிலையம் வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மனு
தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் காலம்சென்ற முனைவர் கா.காளிமுத்து அவர்களின் மேடைப்பேச்சுக்களில்; 1980 முதல் 87 காலகட்டத்தில் பெரிதாய் வார்த்தைகளால் தாக்கப்பட்டது பால்கனி தான் அந்த பால்கனி இருக்கும் நபர்களைப் பொருத்தே மதிப்பு பெறுகிறது அந்த வகையில்
எந்தப் பால்கனியை விமர்சித்தாரோ ! அதே பால்கனி இருக்கும் திசை நோக்கி, அவர் பிற்காலத்தில் கும்பிட்டது தான் அந்த வரலாறு. அண்ணன் மூத்த பத்திரிகையாளர் பொன்மதி அவர்கள் கூற்றுப்படி. அதுவே அப்போதய நிலையில் உண்மையும் கூட. குடகுமலை 'ஷேப்' பில் பலர் குனிந்து பழகியதின் கோனார் தமிழ் விளக்க உரைக் குறிப்பேடு அவர் தான் !
முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளருமான (இந்த வார்த்தைக்குத்தான் ஆம் எத்தனை வலிமை - பொ.செ.வே இல்லாமல் ஆகி விட்டது) செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் இறந்த பின்னர், இரண்டு தலைவர்களால் மூன்று பால்கனிகள்; அதிமுகவில் காட்சிப் படுத்தப் பட்டிருக்கிறது.
வி.கே. சசிகலா நடராஜன் , ‘நான் இருக்கிறேன்’ என்பது போல, அவ்வை சண்முகம் சாலையிலுள்ள அதிமுக தலைமை நிலைய பால்கனியில் நின்று பலமுறை தொண்டர்களுக்கு ஆறுதல் அளித்திருக்கிறார்.
அதற்கு முன்னதாக ஒருநாள் இரவு, போயஸ் கார்டன் இல்ல பால்கனியில் தொண்டர்களைப் பார்த்து கை ஆட்டி ஆறுதல் படுத்தியிருக்கிறார்.
செல்வி ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த நாளான 2017 பிப்ரவரி 24 - அன்று, ”எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை" என்ற கட்சியைத் தொடங்கி விட்டதாக திருமதி. ஜெ.தீபா அறிவித்த பின் சென்னை தி.நகரில் உள்ள வீட்டில்; பிரஸ் மீட் அளித்தார். பிரஸ் மீட்டுக்கு முன்னதாக, அந்த வீட்டு போர்டிகோவுக்கு இடதுபக்க மாடியில்; வெளிமுகம் பார்த்தது போல் அமைந்த; பத்து மீட்டர் நீள பால்கனியில் நின்று; தொண்டர்களைப் பார்த்து கைகளை ஆட்டினார்.
போயஸ்கார்டன் பால்கனியோ, அதிமுக தலைமைக் கழகப் பால்கனியோ இப்போதைக்கு கிடைக்காமல் போகலாம்; இருக்கும் பால்கனியைப் பயன்படுத்தி பால்கனிக்கான ஃபவரை வெளிப்படுத்துவோம் என்று நினைத்திருக்கக்கூடும்.
இப்போது போயஸ் கார்டன் பால்கனியே, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மூலம் அவர் கைக்கு வந்திருக்கிறது. முன்னர் ஜெ.தீபா , கையில் வைத்திருந்த கட்சியான; எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தற்போதைய நிலை குறித்து இன்னும் ஜெ. தீபா ஏதும் அறியப்படவில்லை அல்லது சொல்லவில்லை.
அதேபோல் அந்தக் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த தீபாவின் கார் டிரைவர் ராஜா திடீரென அப்போது அந்தக் கட்சியின் பொறுப்பிலிருந்து விலக்கப் பட்டிருந்தார். தீபாவின் கணவரான மாதவனும் அதேபோல் ஒருநாள், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நீக்கி வைக்கப்பட்டார்.
இந்த நிலையை அல்லது சரிவை சரிசெய்ய பேட்ரிக் எனும் மாதவன் தன் பங்கிற்கு தனியாக ஒரு கட்சியை 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதியில் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் சமாதியில் வைத்து ஆரம்பித்தார்.
ஜெ. தீபா கட்சியைத் தொடங்கிய இரண்டே மாதத்தில், இது தான் நடந்தது !
மெரினா கடற்கரையில் முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் சமாதியில் வைத்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக ஊடகங்களுக்கு முதல்நாள் இரவில். மாதவன் அனுப்பிய தகவலால் நூற்றுக்கணக்கில் அன்றைய தேதியில் பல கேமராக்கள் கூடி விட்டன.
இன்னொரு பக்கம் ஜெ.தீபா, மற்றும் அதிமுக புதிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் எதிர்க் கருத்துகளைக் கேட்கவும் அந்தந்தப் பக்கங்களில் கேமராக்களும் பேனா - பேடுகளுமாய் பல மீடியாக்கள் நிரம்பி விட்டது.
சொன்னபடி காலையில் மெரீனாவுக்கு வந்த மாதவன், ஜெயலலிதா அவர்கள் சமாதியை 3 முறை சுற்றி வந்து, வணங்கிவிட்டு
’எம்.ஜி.ஆர். ஜெயலலிதா திராவிட முன்னேற்ற கழகம்’ என்று கட்சியை ஆரம்பித்து இருப்பதாகவும், கட்சியை வளப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப் போவதாகவும் தெரிவித்தார்.
அப்போது ஒரு செய்தியாளர், ‘ எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை கட்சியின் நிறுவனர் ஜெ.தீபா அவர்களும் கட்சியை பலப்படுத்த டூர் போகப் போவதாகச் சொல்லி இருக்கிறார்கள், உங்கள் பயணம் இணைந்து இருக்குமா; தனித்தனியாக இருக்குமா?’ என்றே கேட்ட ஒரு மூத்த செய்தியாளருக்கு
”இரட்டை இலையை மீட்பதுதான் என்னுடைய முதல் வேலை. மற்றவற்றைப் பற்றி பிறகு பேசுவோம், போனில் வாங்களேன்” என்றே பதில் தந்தார் மாதவன்.
அதுவும் உண்மைதான். போனில் எப்போது - எதைப் பேசினாலும், எது குறித்து கேட்டாலும்; பதில் சொல்கிற நபராகத்தான் அவர் இருந்தார். அரசியலில் ஜொலிப்பதற்கு இது தேவைப்படாத ஒரு தகுதி என்பதை அடுத்த முறை சந்திக்கும் போது, தெரிந்து கொண்டிருப்பார் முதலில் போயஸ் கார்டன் வேதா இல்லத்தின் பால்கனியில் சகோதரருடன் காட்சி தந்த பின்னர் செய்தியாளர் முன்பு
‘இந்த வீட்டுக்குள் நுழைய விடாமல் என்னை தடுத்து வெளியில் நிறுத்தி வைத்து...’ என்று பேட்டியில் ஜெ.தீபா சொல்லியிருப்பதைப் பார்த்தால், பல கேள்விகள் எழுகிறது !
ஜெ.தீபாவின் இப்போதைய பலமாக பார்ப்பது வழக்கறிஞர் ஏ.சுப்பிரமணியைத்தான்
வடசென்னை திருவொற்றியூரில் குறைந்த விலையில் மருத்துவ சேவை (சில நேரங்களில் அடித்தட்டு ஏழைகளுக்கு இலவச சேவையும் - சுப்பிரமணியத்தின் மனைவி மருத்துவராக இருக்கிறார்), இலவச சட்ட ஆலோசனை, மருத்துவ முகாம்கள், சட்ட உதவி முகாம்கள் என எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கக் கூடியவர்.
ஜெ.தீபாவுடன் நம்பிக்கையான தொண்டனாக சில ஆண்டுகள் கூடவே பயணிக்கிறவர், அரசியல் அனுபவம் உள்ளவர் என்பதால், ஏதேனும் ‘சிறப்பு’ முன்னெடுப்புகள் இருக்கலாம் என்று தோணுகிறது !
இவ்வளவு நிலைமைக்கு மத்தியில் முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதியளிக்கக் கோரி, அதிமுகவின் முன்னாள் சட்ட அமைச்சரான சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இன்று காலை வழக்கு விசாரணையின் போது அதிமுகவுக்கும், போயஸ் கார்டனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதென்றும், இது கடந்த அதிமுக ஆட்சியின் கொள்கை முடிவென்பதால் மேல்முறையீடு செய்வதாகவும், எனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கெதிராக மேல்முறையீடு செய்ய அனுமதியளிக்க வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கபட்டதையடுத்து , முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அதிமுகவுக்கு அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக சார்பில் உடனடியாக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு டிசம்பர் 20 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமெனத் தெரிகிறது.
கருத்துகள்