சிறுபான்மையினருக்கு இலவச பயிற்சி
நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
சீக்கியர், ஜெயின், முஸ்லிம், கிறிஸ்தவர்கள், பௌத்த மதம் மற்றும் பார்சி இனத்தை சேர்ந்தவர்கள் தொழில்நுட்ப கல்வி / தொழில் கல்விக்கான மாணவர் சேர்க்கை, மற்றும் அரசு/ தனியார் துறை வேலைவாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வில் பங்கேற்க ‘நயா சவேரா’ திட்டத்தின் கீழ் இலவச பயிற்சிகளை சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சகம் அளிக்கிறது. தொண்டு நிறுவனங்கள், மற்றும் திட்டங்களை அமல்படுத்தும் முகமைகள்(பிஐஏ) மூலம் இந்த பயிற்சிகள் நாடு முழுவதும் அளிக்கப்படுகின்றன. நயா சவேரா திட்டம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து சிறுபான்மையினத்தை சேர்ந்த 1,19,283 மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை அமல்படுத்துவதற்காக 130 திட்ட அமலாக்க குழுக்களை மத்திய அமைச்சகம் கடந்த 2017-18ம் ஆண்டு உருவாக்கியது. இந்த நிதியாண்டில் நயா சவேரா திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்புகளை நடத்த 37 அமைப்புகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது .. 2021-22ம் நிதியாண்டில் நவம்பர் 30ம் தேதி வரை திட்டத்தை அமல்படுத்தும் முகமைகளுக்கு(பிஐஏ) ரூ.13.53 கோடி வழங்கப்பட்டுள்ளது.
ஹஜ் புனித யாத்திரைக்கான பதிவு
நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
இந்திய முஸ்லிம்கள், ஹஜ் புனித யாத்திரையை எளிதாக மேற்கொள்ள, ஹஜ் யாத்திரை நடைமுறைகள் 100 சதவீதம் டிஜிட்டல் / ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த நடைமுறை சுமூகமாகவும், வெளிப்படை தன்மையுடனும், இடைத்தரகர்கள் இன்றி நடக்கிறது. இதன் மூலம் ஹஜ் யாத்திரிகள், தனியார் ஹஜ் யாத்திரை ஏற்பாட்டாளர்கள், இந்திய ஹஜ் கமிட்டியினர் உட்பட பல தரப்பினர் பயனடைந்துள்ளனர்.
ஹஜ் யாத்திரைக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பதற்கான நடைமுறை நவம்பர் 1ம் தேதி தொடங்கியது. புனித யாத்திரை மேற்கொள்ள விரும்பும் யாத்திரிகள் www.hajcommittee.gov.in என்ற இணையளம் மற்றும் கைப்பேசி செயலியில் 2022 ஜனவரி 31ம் தேதி வரை, தங்கள் விண்ணப்பங்களை தாக்கல் செய்யலாம். சிறுபான்மையினரின் நலனுக்கான நிதி
நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
மத்திய அரசு திட்டமான பிரதமரின் ஜன் விகாஸ் காரியக்ரம் , சமுதாய பொருளாதார சொத்துக்கள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 1,300 பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது.
இத்திட்டம் தொடங்கியது முதல் 42 கல்லூரிகள், 180 உறைவிட பள்ளிகள், 3,062 பள்ளி கட்டிடங்கள், 43,838 கூடுதல் வகுப்பறைகள்/ வளாகங்கள், 15,545 கற்பித்தல் உபகரணங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள், 1376 விடுதிகள், 24 பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள், 232 ஐடிஐ கட்டிடங்கள், 55 பாலிடெக்னிக்குகள், 21 திறன் மையங்கள், 5,382 சுகாதார திட்டங்கள், ஒரு யுனானி மருத்துவக் கல்லூரி, 81,503 குடிநீர் விநியோக திட்டங்கள், 40,795 அங்கன்வாடி மையங்கள், 408 மண்டபங்கள், ஒரு சத்பவ் கேந்திரம், 168 பொது சேவை மையங்கள், 609 சந்தை வசதிகள், 9 ஹூனார் மையங்கள், 9330 சுகாதாரம்/ கழிவறை திட்டங்கள், 76 விளையாட்டு வசதிகள் உள்ளிட்டவற்றுக்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
கருத்துகள்