மங்கோலியாவின் நாடாளுமன்ற தூதுக்குழுவினருடன் மத்திய எஃகுத் துறை அமைச்சர் சந்திப்பு
மங்கோலியாவின் நாடாளுமன்ற தூதுக்குழுவினர், மத்திய எஃகுத் துறை அமைச்சர் திரு ராம்சந்திர பிரசாத் சிங்கை இன்று புதுதில்லியில் சந்தித்தனர். மங்கோலிய நாடாளுமன்றத் தலைவர் திரு கோம்போஜாவ் ஸன்தன்ஷதார் தலைமையிலான இந்தக் குழுவில் ஆறு உறுப்பினர்களும் சுரங்கம் மற்றும் கனரக தொழில்கள் துறை அமைச்சரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியா-மங்கோலியா இடையே நீடித்து நிலைத்திருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக, கலாச்சார உறவுகள் குறிப்பாக புத்த சமய உறவுகளை எஃகுத் துறை அமைச்சர் எடுத்துரைத்தார்.
புத்த பகவான் ஞானம் பெற்ற பீகாரில் உள்ள புத்தகயா புனித பூமியைக் காண வருகை தந்துள்ள மங்கோலிய நாடாளுமன்ற குழுவிற்கு அமைச்சர் வாழ்த்துத் தெரிவித்தார். மங்கோலிய சுதந்திரத்தின் நூற்றாண்டு விழா குறித்தும், இந்த தூதுக் குழுவிடம் இந்தியாவின் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
பரஸ்பரம் நலன் பயக்கும் இருதரப்பு உறவுகளில் ஆர்வம் காட்டுவதாக தெரிவித்த திரு ராம்சந்திர பிரசாத், குறைந்த விலையில் தரமான நிலக்கரியை வழங்கும் நம்பகமான நாடாக மங்கோலியாவை இந்தியா காண்கிறது என்று அவர் கூறினார். இந்திய எஃகு துறைக்கு இது மிகவும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள்