உள்நாட்டு செமிகண்டக்டர் சிப் வடிவமைப்பு நிறுவனங்களுக்கான வடிவமைப்பு சார்ந்த ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்பு
நாட்டில் செமிகண்டக்டர் வடிவமைப்பு தொழிலுக்கான துடிப்புமிகு சூழலியலை உருவாக்கும் லட்சியத்துடன் 100 உள்நாட்டு நிறுவனங்கள், ஸ்டார்ட் அப்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து வடிவமைப்பு சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகத்தால் டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த வடிவமைப்பு சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் சிப் மற்றும் செமிகண்டக்டர் உள்ளிட்ட பொருட்களின் வடிவமைப்பில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு நிறுவனங்கள், ஸ்டார்ட் அப்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி மற்றும் வடிவமைப்பு உள்கட்டமைப்பு ஆதரவு ஐந்து வருடங்களுக்கு வழங்கப்படும்.
டிசம்பர் மாதம் அரசு அறிவித்த ரூபாய் 76,000 கோடி தொகுப்பின் ஒரு பகுதியான இந்த திட்டம், அடுத்த ஐந்து வருடங்களில் குறைந்தபட்சம் 20 நிறுவனங்களையாவது ரூபாய் 1,500 கோடி விற்றுமுதல் எட்ட வைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஜனவரி 1, 2022 முதல் டிசம்பர் 31, 2024 வரை விண்ணப்பங்களை வரவேற்று www.chips-dli.gov.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பு சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் வழிகாட்டுதல்களை விண்ணப்பதாரர்கள் இந்த தளத்தில் பார்த்து இத்திட்டத்தின் கீழ் ஆதரவை பெறுவதற்காக தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
கருத்துகள்