ராமேஸ்வரத்தில் “ஒலிம்பிக் சாம்பியன்களுடன் சந்திப்பு” இயக்கம்
ஒலிம்பிக் படகு போட்டிகளில் பங்கேற்ற கே சி கணபதி, வருண் தக்கார் ஆகியோர் வியாழன் அன்று (ஜனவரி 6, 2022) ராமேஸ்வரத்தில் “சாம்பியன்களுடன் சந்திப்பு” இயக்கத்தைத் தொடங்கினர். ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களும், வீராங்கனைகளும் நாடு முழுவதும் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடுமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி, கேட்டுக் கொண்டதையடுத்து இந்த இயக்கத்தை இவர்கள் நடத்தி வருகின்றனர்.
ஆசிய சாம்பியன் பட்ட போட்டிகளில், படகுப் போட்டிப் பிரிவில், தங்கப்பதக்கம் வென்ற கணபதியும், வருணும் ராமேஸ்வரத்தில் உள்ள விவேகானந்த வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுடன் கலந்துரையாடினர். விளையாட்டு வீரராகும் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான நோய் எதிர்ப்பு ஆற்றல் மற்றும் உடல் தகுதிக்கு சமச்சீரான ஊட்டச்சத்தின் தேவையை அப்போது அவர்கள் எடுத்துரைத்தனர்.
2022-ஆம் ஆண்டுக்கு மாணவர்களின் விளையாட்டுக்கள் மீதான தீர்மானத்தை, அவர்கள் கேட்டறிந்ததோடு விளையாட்டு வீரர்களாக வளர்ந்து வரும் மாணவர்களின் அனுபவத்தையும் கேட்டறிந்தனர். மேலும், படகு செலுத்துவதற்கு முக்கியமான சில அடிப்படை கட்டுடலுக்கான பயிற்சிகளையும், இந்த இரட்டையர்கள் செய்து காண்பித்தனர்.
“படகு செலுத்துவதற்கு உடல் பலத்தோடு நெகிழ்ச்சித் தன்மையும், சீராக இருக்க வேண்டும்” இல்லையென்றால் திடீரென மாற்றம் அடையும் காற்றின் வேகம், உங்களையும், படகுகளையும் வீசியெறிந்து விடும். எனவே ஒவ்வொரு நாளையும் ஓட்டப்பயிற்சி அல்லது மிதிவண்டி ஓட்டுதலுடன் தொடங்க வேண்டும். இது உடலுக்கு நெகிழ்வுத் தன்மையை தரும். மாலையில், பளு தூக்குதலில் பயிற்சி பெறவேண்டும், இது உடலை வலுவாக்கும்” என்று மாணவர்களிடம் வருணும், கணபதியும் தெரிவித்தனர்.
“பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 75 பள்ளிகளிலிருந்து வந்துள்ள 150க்கும் அதிகமான மாணவர்களுடன், கலந்துரையாடுவது மகத்தான விஷயமாகும். அவர்களுக்கு நாங்கள், ஊக்கம் அளித்திருப்பதாகவும் இந்த மாணவர்களிலிருந்து ஒலிம்பிக் பதக்கம் பெறுவோர் உருவாவார்கள் என்றும் நம்புகிறோம்” என இந்த இரட்டையர்கள் தெரிவித்தனர்.
‘சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழா’-வின் ஒரு பகுதியாக இந்த தனித்துவ முன்முயற்சியை 2021 டிசம்பரில் ஒலிம்பிக் தங்கப்பதக்க வீரர் நீரஜ் சோப்ரா தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து வட இந்தியாவில், ஒலிம்பிக் வெண்கலப் பதக்க வீரர் பஜ்ரங் புனியா, இயக்கத்தைக் கொண்டு சென்றார்.
பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுடன் உரையாடும் ‘சாம்பியன்களுடன் சந்திப்பு’ என்ற இந்த இயக்கத்திற்கு, மத்திய கல்வி அமைச்சகமும், இளையோர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகமும் கூட்டாக ஏற்பாடு செய்து வருகின்றன. இந்த பயணத்தின் போது ஒலிம்பிக் வீரர்கள், தங்களின் சொந்த அனுபவங்களையும், வாழ்க்கை தந்த பாடங்களையும், எடுத்துரைத்ததோடு எதிர்கால விளையாட்டு வீரர்கள் உருவாவதற்கான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்கள்.
ராமேஸ்வரம் பள்ளியில் நடைபெற்ற மாணவர் சந்திப்பின்போது, முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் கொவிட்-19-க்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி நிர்வாகம் கண்டிப்புடன் அமல்படுத்தியது.
கருத்துகள்