பிரபல குற்றவாளி பிபிஜிடி சங்கர் மற்றும் பினாமிகளின் ரூ.25 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
பிரபல குற்றவாளி ரூ.25 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
தமிழக காவல்துறையால் கொலை, மிரட்டி பணம் பறித்தல், வழிப்பறி, கொள்ளை மற்றும் குற்றச்சதி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களின் பேரில் 15 முதல் தகவல் அறிக்கைகளும், 3 குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்ட பிபிஜிடி சங்கர், அவரது பெயரிலும், அவரது பினாமிகள் பெயரிலும் சென்னை புறநகர் பகுதிகளில் அசையா சொத்துக்களாக வைத்துள்ள ரூ.25 கோடி சந்தை மதிப்புள்ள 79 நிலங்களை, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டம் 2002-ன் கீழ் அமலாக்கத் துறை தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளது.
தமிழக காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டம் 2002-ன் கீழ் விசாரணை மேற்கொண்ட அமலாக்கத் துறை, பிபிஜிடி சங்கர் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது, பல்வேறு சட்ட விரோத சொத்துக்கள் குறித்த ஆவணங்கள் கண்டறியப்பட்டு, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ், அவற்றை பறிமுதல் செய்துள்ளது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், குற்றம்சாட்டப்பட்டவரும், அவரது கூட்டாளிகளும் அளித்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 79 சொத்துக்களை வாங்குவதற்கு கொடுக்கப்பட்ட பணத்திற்கு சட்டப்பூர்வ ஆதாரம் எதையும் அவரால் தெரிவிக்க இயலாததோடு, இந்த பணம் சட்டப்பூர்வ தொழில் மூலம் சம்பாதித்தது அல்ல என்றும், நீண்ட காலமாக பல்வேறு நபர்களை மிரட்டி பறிக்கப்பட்ட பணம் என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
குற்றச்சாட்டுக்கு ஆளான நபர், தம்மிடம் உள்ள சொத்துக்கள் கறைபடியாத முறையில் வாங்கிய சொத்துக்கள் என்று காட்டும் விதமாக புதுவிதமான உத்தியை பயன்படுத்தி, அதிகாரப்பூர்வ ஆவணங்களில் இந்த சொத்துக்களுக்கு தமது பினாமிகளை உரிமையாளராக்கி, அவர்களிடம் இருந்து தமக்கு பொது அதிகாரம் பெற்று பதிவு செய்துள்ளார்.
பொது அதிகாரம் பெற்ற நபர் என்பது கிரய பத்திரத்திற்கு மாற்று முறையாக பயன்படுத்தப்படுகிறது. தமக்கு எதிராக காவல்துறையினர் பதிவு செய்துள்ள பல வழக்குகள் விசாரணையில் உள்ளதால், இதுபோன்ற சொத்துக்களை வாங்குவதற்கான தொகையை அவர் வழங்கினாலும், தம்மை தற்காத்துக் கொள்ளும் விதமாக சொத்துக்களை தமது பெயரில் அவர் பதிவு செய்வதில்லை.
இந்த வழக்கின் மேல் விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கருத்துகள்