திருவாதவூர் பெருமான், தென்னவன் பிரமராயன், அருள்வாசகர், மாணிக்கவாசகர், என்ற சிறப்புகளைப் பெற்று திருவாசகத்தைத் தந்து தமிழை உலகறியச் செய்த மாணிக்கவாசகர்
32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து பின்னர் ஆனி மாதம் மகத்தில் தில்லை யில் இறைவனுடன் நேராய்க் கலந்து மாணிக்கவாசகர் முக்தி பெற்றார்.அருள்மிகு ஆத்மநாதசுவாமி திருக்கோயில், ஆவுடையார் கோயில் 614 618, புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தலம் அறந்தாங்கிக்குத் தென்கிழக்கில் 15 கிலோமீட்டரில் அமைந்துள்ளது. மாணிக்கவாசகர் சிவபெருமானால் இங்கு ஆட்கொள்ளப்பட்டார்.
51 பகுதிகள் கொண்ட திருவாசகத்தையும், 400 பாடல்கள் கொண்ட திருக்கோவையாரையும் அருளிச்செய்தார்.
அவற்றைச் செப்புப் பட்டணத்தில் எழுதிய சிவபெருமான்
"இது வாதவூரன் சொல்லத் திருச்சிற்றம்பலம் உடையான் எழுதிய கைச்சாத்து"
எனப்பதிவு செய்து பஞ்சாக்கரப்படியில் வைத்தார். இதைக்கண்ட தில்லைவாழ் பிராமணர்கள் மாணிக்கவாசகரை வணங்கி இதன் பொருளென்ன என்று வினவ, அவர் இத்திருவாசகத்தின் பொருள் இவர்தான் என்று தில்லை அம்பலத்தானைக் காட்டி அப்பெருமானோடு இரண்டறக் கலந்தார்.
32 ஆண்டுக்காலமே வாழ்ந்த மாணிக்கவாசகர், மக்கள் அனைவரும் காணும் வகையில் ஆனி மாத மகம் நட்சத்திரத்தில் சிதம்பர தலத்தில் இறைவனோடு இரண்டறக் கலந்தார். இந்த நாளில் அனைத்து சிவதலங்களிலும்
மாணிக்கவாசகரின் குருபூஜை சிறப்பாக நடைபெறுகிறது.
ஆங்கிலம் என்பது வாணிகத்தின் மொழி , இலத்தீன் என்பது சட்டத்தின் மொழி, கிரேக்கம் என்பது இசையின் மொழி, பிரெஞ்சு என்பது தூதின் மொழி, இத்தாலி எனும் காதலின் மொழி என்ற கூற்று பொருந்துமென்றால் தமிழ் பக்தியின் மொழியாகும் என்கிறார் அறிஞர் தனிநாயக அடிகளார். அவரது கூற்று முற்றிலும் உண்மை.
சைவத்தில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூன்று சிவனடியார்கள் சிவன் கோயில்களில் பாடிய பதிகங்களில் மறைந்தவை போகக் கிடைத்தவை 8,000 பதிகப் பாடல்களாகும். அதன் தொடர்ச்சியாக அக் காலத்தில் மாணிக்கவாசகர் தோன்றிப் பதிகம் பாடினார்.
சிவபக்தர்கள் பலரது வீடுகளில் வைத்து வணங்கப்படும் நூல் திருவாசகம்! மாபெரும் பொக்கிஷத்தைத் தந்தருளியவர் சைவ சமயக் குரவர்கள், நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர்.
மாணிக்கவாசகர் எழுதிய, பெரும் நூல்களுள் முதலாவது திருவாசகம், இரண்டாவதாக திருக்கோவையார் சிவனது பக்திப் பாடல்களின் தொகுப்பே இந்த நூல்கள்.
“திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்” என்ற வாசகம் பாடல்களின் கனிவுத் தன்மையைப் புலப்படுத்தும்.
பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
இதை டாக்டர் ஜி.யூ. போப் ‘எலும்பை உருக்கும் பாட்டு’ என்றார். திருவாசகத்தை அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகறியச் செய்தார்.
திருவாசகம் 656 பாடல்களையும். 51 பிரிவுகளுமுள்ளன. பன்னிரு திருமுறையில் எட்டாம் திருமுறை எனப்படுகிறது. சிவபுராணம் முதல் அச்சோப்பதிகம் வரை அமைந்துள்ளது.
மாணிக்கவாசகர் மதுரை மாநகரத்திலிருந்து, ஏழு கிலோ மீட்டர் தொலைவில் வாதபூரீசுவரர் என்னும் திருநாமத்தோடு இறைவன் அருளும் தலம் திருவாதவூர்.
அன்றைய பாண்டிய நாட்டில் புறச் சமயமாகிய புத்தம் மேலோங்கி, சைவ சமய வளர்ச்சி குன்றியிருந்தது. இறைவன் திருவருளால் சைவம் தழைக்கவும், வேத சிவாகமநெறிகள் விளங்கவும் மாணிக்கவாசகர் அவ்வூரில் அவதரித்த மகனார்க்கு ``திருவாதவூரார்`` என்று பெயர்.
பதினாறு வயதில், வாதவூரார் கலைஞானங்கள் அனைத்தும் கைவரப் பெற்றார். இவரது கல்வித் திறத்தையும், நல்லொழுக்கத்தையும், அறிவுத் திறனையும் கண்டு அனைவரும் வியந்தனர். பாண்டிய மன்னன் ஹரிமர்த்தன பாண்டியன் திருவாதவூரரது அறிவுத்திறனைக் கேள்வியுற்றான்.
அரிமர்த்தன பாண்டியன், அவரைத் தனது அவைக்கு அழைத்து, அளவளாவி அவரது அறிவுத்திறனைக் கண்டு வியந்து, ``தென்னவன் பிரம்மராயன்`` என்னும் பட்டம் சூட்டினான். அத்தோடு தனது முதலாவது அமைச்சராக அமர்த்திக் கொண்டார். திருவாதவூரரும், இறைவனுடைய செயலாக எண்ணி, அதனை ஏற்றார்.
வாதவூராரும், அரிமர்த்தன பாண்டியனுக்கு விசுவாசமாக மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அமைச்சர் பதவியில் சிறப்பாக செயல்பட்டார். ஆயினும் உலக அனுபவ இன்பங்களில் மகிழ்ச்சியடையவில்லை.
உலக வாழ்வும், வாழ்வில் காணும் பெரும் போகமும், நிலையற்றவை என்றறிந்தமையால், அப்பதவியை அவர் பெரிதாக நினைக்கவில்லை.
ஒரு சிறந்த குருநாதரைத் தேடும் வேட்கை, அவருக்குள் இருந்தது. பிறவிப் பெரும் பயனை, அடைதற்குரிய வழி என்ன, என்பதிலேயே இவருடைய சிந்தனை இருந்தது.
படைகளுக்கு சிறந்த குதிரை வாங்க நினைத்த மன்னன் அதற்கான பொறுப்பை அமைச்சரிடம் ஒப்படைத்தான்.
அரசன், அமைச்சராகிய வாதவூரனை பார்த்து, “நம்முடைய கருவூலத்திலிருந்து, வேண்டும் பொருள்களைப் பணியாளர் மூலம் எடுத்துச் சென்று, நல்ல குதிரைகளை வாங்கி வருக” என்று ஆணையிட்டான்.
வாதவூரரும், அக்கட்டளையை ஏற்றுப் கருவூலத்திலிருந்து பொருள்களை ஒட்டகத்தின் மீதேற்றிக் கொண்டு, படைகளும் பரிவாரங்களும், தன்னைச் சூழ்ந்துவர, மதுரை அன்னை மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்திற்குச் சென்று வணங்கி மதுரையை விட்டுப் புறப்பட்டார். பல மாதங்களைக் கடந்து, திருப்பெருந்துறையென்னும் ஸ்தலத்தை அடைந்தார்.
அவ்வூரை அணுக அணுக, அவர்மேல் இருந்த ஏதோ ஒரு சுமை, குறைந்து வருவது போலத் தோன்றியது. இத்தலமே, இறைவன் தன்னை ஆட்கொள்ளும் இடம் போலும் என்ற உணர்வும் தோன்றியது.
அந்த சமயம் சிவநாம முழக்கம் எங்கிருந்தோ வருவது, அவர் செவிகளில் கேட்டது. அவ்வொலி வரும் திசைநோக்கி வாதவூரரும் விரைந்து சென்றார். ஓரிடத்தில், கல்லால மரம் போன்ற பெரிய குருந்த மரத்தடியில், சீடர்கள் சிலரோடு, சிவபெருமானே குருநாதராய் எழுந்தருளியிருந்தார்.
வேத சிவாகமங்களும், புராண இதிகாசச் சமய நூல்களும் ஆகிய பல நூல்களையும், கற்றுத்தெளிந்த சிவகணநாதர்கள், அந்தக் குருநாதரிடம் சீடர்களாக விளங்கினர். அச் சீடர்களின் பற்றறுக்கும் ஆசானாக, அக் குருநாதர் வீற்றிருந்தார். அவரது வலத்திருக்கை, சின் முத்திரையைக் காட்டியிருக்க. அவர் திருமுகம், ஒளி மண்டலமாகத் திகழ. கண்கள், திருவருள் விளக்கத்தைச் செய்தன. இவ்வாறு வீற்றிருந்த, குருநாதரைக் கண்ட வாதவூரார், தாம் பலநாள்களாக விரும்பியிருந்த குருநாதர், இவரேயென்று எண்ணினார்.
காந்தம் கண்ட இரும்பு போல, மணிவாசகர் மனம், குருநாதர் வசமாயிற்று. இந் நிலையில், விரைந்து அருகில் சென்ற வாதவூரார், அடியற்ற மரம் போல, அவரது திருவடியில் வீழ்ந்து பணிந்து, அய்யனே ! எளியேனை ஆட்கொண்டருளுக, என வேண்டி நின்றார். வாதவூரரின் பணிவன்பான நிலையைக் கண்ட குருநாதர், திருக்கண் நோக்கம், ஸ்பரிசம் முதலிய தீட்சைகள் செய்து திருவடிசூட்டி நமசிவாய எனும் திருவைந்தெழுத்தை அவருக்கு உபதேசம் செய்தருளினார். ஞானாசிரியரது திருவருள் நோக்கால் ஞானத்தின் திருவுருவாக வாதவூரார் மாறினார்.
தமது குருநாதரின் திருவடிகளுக்குத் தம்மை ஆட்கொண்டருளிய, பெருங்கருணைத் திறத்தை, வியந்து சொல்மாலைகள் பலவும் சூட்டினார்.
குருநாதனின் முன் வாதவூரார் பாடிய பாடல்கள், இனிமையோடும், அருள் விளக்கத்தோடும் இருந்ததால், வாதவூராருக்கு தீட்சா நாமமாகச் மாணிக்கவாசகன் என்ற பெயரைச் சூட்டினார். அன்று முதல் வாதவூரார் மாணிக்கவாசகர் என்றழைக்கப்பட்டார்.
மணிக்கவாசகர் குருநாதரை வணங்கி, `என்னை ஆட்கொண்டபோதே, என்னுயிரும் உடைமையும் தங்கட்குரியவாயின. ஆதலால், அடியேன் கொண்டு வந்த பொருள்கள் அனைத்தையும் தாங்கள் ஏற்றுக்கொண்டு அருளல் வேண்டும்` என்றார். குருநாதரும் அப்பொருள்களைக் கொண்டு சிவப்பணி செய்க` என்று அருளாசி செய்த கட்டளைப் படியே, மணிக்கவாசகர் அப்பொருள்களைக்கொண்டு, திருப்பெருந்துறையில் மிகச் சிறந்த திருக்கோவிலைக் கட்டி குடமுழுக்கு செய்தார். மடங்கள், நந்தவனங்கள், அமைத்தார். அடியார்களுக்கு, மாகேசுவர பூசை நிகழ்த்தினார்.
, அரசன் குதிரை வாங்குவதற்கு, தம்மிடம் அளித்த பொருள்கள் அனைத்தையும், சிவத் திருப் பணிகளுக்கே செலவிட்டார். நாள்கள் பல செல்லவே. அமைச்சரின் வேறுபட்ட நிலையை, உடன் வந்தவர்கள் கண்டு மாணிக்கவாசகரிடம், `குதிரை கொண்டு மதுரை செல்ல வேண்டுமே என்று தாங்கள் வந்த வேலையினை நினைவூட்டினர். மணிவாசகர் அவ் வார்த்தைகளைக் கேளாதவராய், இறைவழிபாட்டில் ஈடுபட்டிருப்பதை அறிந்த அரசரின் பணியாளர்கள், மதுரை சென்று, பாண்டிய மன்னனிடம் நடந்தவற்றைத் தெரிவித்தனர்
.
பாண்டிய மன்னன் கோபமாக அவரை அழைத்து வருமாறு ஆணையிட்டார், அரச பணியாளர்கள் திருப்பெருந்துறையை அடைந்து, அரசன் அளித்த திருமுத்திரையை அமைச்சரிடம் கொடுத்து அரசன் கட்டளையை அறிவித்து நின்றனர்.
அரசவைக்கு வந்த மணிவாசகர், இறைவன் அருளிய மாணிக்க மணியை மன்னனிடம் கொடுத்து, `வருகின்ற ஆவணி மூல நட்சத்திரத்தன்று, குதிரைகள் மதுரை வந்தடையும்` என்று கூறினார். அரசனும், சினம் மாறி மனம் மகிழ்ந்து, அமைச்சரை அன்போடு வரவேற்று, அருகிலமர்த்தி அவரை மகிழ்வித்தான்.
ஆவணி மூல நட்சத்திரம் வரும் நாளை அரிமர்த்தனன் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அதற்கு இரண்டு நாள் முன்னர் அமைச்சரில் சிலர், “வாதவூரார் சொல்லியதனைத்தும் பொய்யுரை, அவர் தங்களை ஏமாற்ற எண்ணுகின்றார். எடுத்துச் சென்ற பொருள்கள் அனைத்தையும், திருப்பெருந்துறையில் சிவப்பணிக்காகச் ஆலயத்தில் செலவிட்டு விட்டார், அவர் கூறுவதை நம்ப வேண்டாம்” என்றார்கள்.
பாண்டிய மன்னன் ஒற்றர்களை அனுப்பி அவர்கள் மூலம் அமைச்சர்கள் கூறியன அனைத்தும் உண்மையென்பதை அறிந்தான். வாதவூரார் செய்கையை எண்ணிச் சினந்து, தண்டநாயகர் சிலரை அழைத்து, வாதவூரார்பால் சென்று, குதிரை வாங்கக்கொண்டு போன, பொருள்கள் அனைத்தையும், வற்புறுத்தித் திரும்பப் பெற்று வருமாறு கட்டளையிட்டான்.
சேனைத் தலைவர்கள், வாதவூரரிடம் சென்று, மன்னன் கட்டளையை எடுத்துக் கூறி, அவரைத் துன்புறுத்த ஆரம்பித்தனர். கொடுஞ்சிறையில் இட்டனர். சுடுவெயிலில் நிறுத்திக் கடுமையாக வருத்தினர்.
வாதவூரார் இறைவனைத் தியானித்து, “ஐயனே! ஆவணி மூலத்தன்று குதிரை வருவதாகக் கூறிய உன் உரை பொய்யாகுமோ? உன் அடித்தொண்டன் இவ்வாறு துன்புறுவது உனக்கு அழகா? நீ என்னைக் கைவிட்டால் எனக்கு யார் துணை? அடியான் ஒருவன் துன்புறுவது உனக்குக் குறையல்லவா?” என இறைவனிடம் முறையிட்டார்.
வாதவூரார் கவலைகளைப் போக்க திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், நரிகளையெல்லாம் குதிரைகளாக மாற்றி, தேவர்களெல்லாம் குதிரைச் சேவகர்களாய்ப் புடைசூழத் தான் குதிரை வாணிகன் போல திருக்கோலம் பூண்டு, வேதமாகிய குதிரையில் அமர்ந்து, படையுடன் மதுரையை நோக்கி
குதிரைப் படைகள் வருவதை, ஒற்றர்கள் மூலம் மன்னன் அறிந்தான். அவன் மனம் மகிழ்ந்தது. திருவாதவூரரைத் தவறாகத் தண்டித்து விட்டோமோ? என்று வருந்தி, அவரை விடுவித்தான். அரசவையில் அவரை அன்போடு வரவேற்று அமர்த்தினான்.
கடல் அலை போல் வந்த படைகளின் விரைந்த நடையால் எழுந்த புழுதிப் படலம் வானை மறைத்தது. குதிரைக்கூட்டம் மதுரை மாநகரை அடைந்தது. வாணிபத் தலைவனாக வந்த சிவபெருமான், பாண்டியன் முன்னிலையில் குதிரைகளனைத்தையும் கொண்டு வந்து நிறுத்தினான். குதிரைகளைப் பல வகை நடைகளில் நடத்திக் காட்டியும் ஆடல்கள் புரியச் செய்தும், பாண்டியனை மகிழ்வுறுத்தினான். பெருமகிழ்ச்சியடைந்த பாண்டியன், குதிரைத் தலைவனுக்கு, ஒரு பட்டாடையைப் பரிசாகக் கொடுத்தான். குதிரைத் தலைவனாக வந்த பெருமான், அப்பரிசைப் புன்னகையோடு தன் செண்டினால் வாங்க, தான் அளித்த பரிசை மரியாதைக் குறைவாகக் குதிரைத் தலைவன் பெறுவதைக் கண்ட மன்னன் வெகுண்டு எழுந்தான்.
அருகிலிருந்த வாதவூரார், `செண்டினால் பரிசு பெறுதல், அவர்கள் நாட்டு வழக்கு` என்று கூறி, மன்னன் சினத்தை மாற்றினார். பின்னர், குதிரை இலக்கணமறிந்த புலவர்கள், குதிரைகளையெல்லாம்; இவை நல்ல நிறமும்; நடையும், சுழிகளும் பெற்றுள்ளன என்று பாராட்டினர். அரசனும் தானளித்த பொருளைவிடப் பல மடங்கு அதிகமான குதிரைகளைப் பெற்றதாக மகிழ்ந்து அவற்றைப் லயத்தில் அதாவது பந்தியில் சேர்க்குமாறு ஆணையிட்டான்.
வணிகர் தலைவன் குதிரைகள் அனைத்தையும் கயிறு மாற்றிக் கொடுக்கும் படி, தன்னுடன் வந்தவர்களிடம் கூறி, அரசனிடம் விடைபெற்றுச் சென்றான்.
அன்றிரவு நடுநிசியில் குதிரைகளெல்லாம் நரிகளாயின. குதிரை லயத்தில் அதாவது பந்தியிலிருந்த பழைய குதிரைகளையும் கொன்று தின்றது அந்த நரிக்கூட்டம்.
ஊர் மக்கள் அஞ்சும்படி ஊளையிட்டு, மூலைமுடுக்குகளில் எல்லாம் ஓடி மறைந்தன. காலையில் குதிரை சேவகர்கள் உள்ளம் பதறி உடல் நடுங்கி அரசனிடம் முறையிட்டனர். செய்தியைக் கேட்ட மன்னன் கோபம் கொண்டு அமைச்சர்களை அழைத்து திருவாதவூரார் செய்த வஞ்சனையைக் கூறினான்.
படைத்தலைவர்களை அழைத்து, வாதவூரரைச் சுடுவெயிலில் நிறுத்தி தண்டனை அளித்து அவரிடத்தில் கொடுத்த பொருள்களையெல்லாம், திரும்பப் பெற்றுக்கொண்டு வருமாறு உத்தரவிட்டான். படைவீரர்கள் அவரை அழைத்துச் சென்று, சுடுவெயிலில் நிறுத்தித் தலையிலே கல்லேற்றிக் கொடுமைப்படுத்தினர்.
வாதவூரார், இறைவன் திருவருளை நினைந்து, எனக்கு இத்தகைய துன்பங்கள் வருதல் முறையாகுமோ? என்று மீண்டும் கூறி வருந்தினார்.
வாதவூரருடைய துன்பம் துடைக்க எண்ணிய சிவபெருமான், வைகையாற்றில் வெள்ளம் பெருகுமாறு செய்தருளினார். வைகையில் தோன்றிய பெருவெள்ளம், மதுரை மாநகர் முழுவதும் விரைந்து பரவத் தொடங்கியது. பெரு வெள்ளத்தைக் கண்ட ஊர் மக்கள், ஊழிக்காலமே வந்துவிட்டதென்று அஞ்சி, மன்னனிடம் சென்று முறையிட்டனர்.
பாண்டியனும், ஆற்று வெள்ளத்தைத் தணிக்க, பொன், பட்டு முதலிய அணிகலன்களை ஆற்றில் விட்டு, வெள்ளம் தணியுமாறு ஆற்றைப் பணிந்தனன். வெள்ளம் மேலும் பெருகியதேயல்லாமல், சிறிதும் குறையாதது கண்டு, அமைச்சர்களோடு கூடி ஆலோசித்தான். அனைவரும் சிவனடியாராகிய வாதவூரரைத் துன்புறுத்தியதன் விளைவே இது என்றனர். அவரை விடுவித்து மதுரை மாநகரை இவ்வெள்ள நீர் அழிக்காதவாறு காப்பாற்ற வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்கள்.
வாதவூரரும் சிவனின் திருவருளை எண்ணி உள்ளம் நிறைந்தார். வெள்ளத்தின் வேகம் ஒரு சிறிது குறைந்தது. இருப்பினும் முற்றும் வெள்ளம் குறையவில்லை. அதனை சரி செய்ய நினைத்த பாண்டியன், மதுரை மக்களையெல்லாரையும் அழைத்து ஒவ்வொருவருக்கும் இவ்வளவு பங்கு என்று அளந்து கொடுத்து ஆற்றின் கரையை அடைக்கும் படி குடிமராமத்து ஊழியம் செய்ய ஆணையிட்டான். காவலர்கள் ஊர் முழுவதும் முரசறிவித்தனர்.
அந்நகரில் புட்டு விற்று வாழ்க்கை நடத்தும் வந்தி என்னும் மூதாட்டி தனக்கு அளவு செய்துவிட்ட ஆற்றின் பங்கை அடைக்க ஆள் கிடைக்காமல் வருந்தினாள். நாள்தோறும் ஆண்டவனிடம் அன்பு செலுத்தி வந்த அவ்வந்தியின் துன்பத்தைத் தவிர்க்க இறைவன் அவளிடம் கூலி ஆள் போலத் தோன்றினான், `யாரேனும் கூலி கொடுத்து என் வேலை கொள்வார் உண்டோ?` என்று கூவிய வண்ணம் தன்னை வந்தடைந்த அப்பணியாளனைக் கண்ட வந்தி மகிழ்ந்தாள். நீ எனக்குக் கூலியாளாக வர வேண்டும் என்றாள்.
அவ்வாறு வந்து, என் ஆற்றின் பங்கை, அடைத்துத் தருவாயானால், நான் விற்கும் பிட்டைக் கூலியாகத் தருகிறேன்` என்று கூறினாள். அதற்கு இசைந்த அந்தக் கூலியாள், அவள் கொடுத்த புட்டை வாங்கி உண்டு, தாயே! என் பசி தீர்ந்தது, இனி நீ ஏவிய பணியை நான் செய்து முடிப்பேன், என்று அவன் பங்கை அறிந்து, அதனை அடைப்பதற்கு முற்பட்டான். வேலையைத் தொடங்கிய, அவ் வந்தியின் ஆளாகிய சிவபெருமான், மண்ணை வெட்டித் தன் திருமுடியில் எடுத்துச் சென்று கரையில் கொட்டிவிட்டுக், களைப்படைந்தவன் போல ஓய்வு எடுத்துக்கொள்வதும், வந்தி அளித்த புட்டை உண்பதும், ஆடுவதும் பாடுவதும் செய்து பொழுதைப் போக்கினான். வேலை செய்து களைத்தவன் போலக், கூடையைத் தலையணையாக வைத்து, உறங்கவும் செய்தான். ஆற்றின் கரை அடைபட்டதா என்பதைப் பார்வையிட வந்த மன்னனிடம் காவலர், ஊரில் உள்ளோர் ஒவ்வொருவரும் தத்தம் பங்கை அடைத்து முடித்தனர். பிட்டு விற்கும் வந்தியென்னும், கிழவியின் பங்கு மட்டும் அடைபடாமல் கிடக்கிறது.
வந்திக்கு ஆளாய் வந்த ஒருவன் சரிவரத் தன் பணியைச் செய்யாமல் பொழுதைக் கழிக்கிறான். அதனால் அப்பகுதி நூற்றைக் கெடுத்தது குறுணி என்பது போல, ஒருத்தி பங்கு ஊரார் பங்கையும் கரைக்கிறது என்று கூறினர்.
உடனே அப்பகுதியைப் பார்வையிட வந்த பாண்டியன், அந்தக் கூலியாளை அழைத்து வரச் செய்தான். தன்னுடைய கைப்பிரம்பால் முதுகில் அடித்தான். அடித்த அளவில் கூலியாளாக வந்த பெருமான் ஒருகூடை மண்ணை உடைப்பிற்கொட்டி மறைந்தான், பாண்டியன் அடித்த அப்பிரம்படி; அரசன், அரசி, அமைச்சர், காவலாளர்கள் முதலிய எல்லோர் மேலும் பட்டது. அப்போது வாதவூரார் இறைவன் தன் அடியவர் பொருட்டுக் கூலியாளாக வந்த திருவருளை எண்ணி வியந்தார்.
பாண்டிய மன்னன் வாதவூரார் பெருமையை நன்கறிந்து அவரை வணங்கி நின்றார், “நற்றவப் பெரியவரே எனக்கு அமைச்சராய் இருந்து எம் குலதெய்வத்தை என் கண்ணில் காட்டி, குதிரைச் சேவகனாகவும், கூலியாளாகவும் வரச்செய்து, என் பிறவி மாசை ஒழித்த பெரியவரே, என்னை மன்னித்தருள வேண்டும். தங்கள் பெருமையை, இறைவன் எனக்கு நன்குணர்த்தினான். என் அரசுரிமையை இன்று முதல் தாங்கள் ஏற்றருளல் வேண்டும்`, என்று வேண்டினான்.
வாதவூரார் பாண்டியனிடம், “இறைவனுடைய திருவடித் தொண்டு செய்ய, என்னை உரிமையாக்குவதே இவ்வுலக ஆட்சியை எனக்குத் தருவதற்கு ஒப்பாகும்” என்றார். மன்னனும், அவர் விரும்பியவாறு அவரைச் செல்லவிடுத்துத் திருவருள் உணர்வோடு தம் அரண்மனைக்குச் சென்றான்.
அமைச்சர் பதவியைத் துறந்து தவ வேடம் தாங்கிய மாணிக்கவாசகர் இறைவன் திருவிளையாடல்களை எண்ணி மகிழ்ந்தவராய் திருப் பெருந்துறையை அடைந்தார்.
மீண்டும் தன் குருநாதரை அடைந்த மாணிக்கவாசகர் அடியவர் கூட்டத்தோடு கலந்து மகிழ்ந்திருந்தார். ஞானதேசிகனாய் வந்த சிவ பெருமான் தாம் கயிலைக்குச் செல்ல வேண்டியதை சீடர்களுக்கு உணர்த்தி அவர்களுக்கு அருளாசி வழங்கி சென்றார்.
அடியவர்கள் தம் குருநாதரைப் பிரிய மனமில்லாமல், பெரிதும் வருந்தினர். அதனைக் கண்ட குருநாதர் “அக் குருந்த மரத்தின் நிழலில் ஒரு தெய்வப் பீடம் அமைத்து அதில் நம்முடைய திருவடிகளை எழுப்பி வழிபாடு செய்து வருவீர்களானால் ஒருநாள் இக்கோயில் திருக்குளத்தில் தீப் பிழம்பு ஒன்று தோன்றும். அதில் அனைவரும் மூழ்கி எம்மை அடையலாம்” என்று திருவாய் மலர்ந்தார். தம்மைப் பின்தொடர்ந்து வந்த அடியார்களை `நிற்க` எனக் கட்டளையிட்டுக் கயிலை சென்றார். வாதவூரடிகள் மட்டும், அவரைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருந்தார். அவரைக்கண்ட குருநாதர் `நீ எம்மைப் பின்தொடர்ந்து வருதல் வேண்டாம். உத்தரகோசமங்கை என்னும் திருப்பதிக்குச் சென்று, அங்கு எண்வகைச் சித்திகளையும் பெற்று, திருக்கழுக்குன்றம் முதலான தலங்களைத் தரிசித்துப் பின்னர், தில்லை அடைவாயாக` என்றார்.
மாணிக்கவாசகரும் அவ்வாறே திருப்பெருந்துறைக் குருந்த மரத்தின் கீழ், ஒரு தெய்வீகப் பீடமமைத்து, அதில் குருநாதரின் திருவடிகளை எழுந்தருளச் செய்து, அடியார்களோடு தாமும் வழிபட்டு வந்தார்.
மாணிக்கவாசகர், திருவருளில் திளைத்து வாழும் நாள்களில், நமச்சிவாய வாழ்க என்று தொடங்கும் சிவபுராணம் முதல், அற்புதப் பத்து, அதிசயப்பத்து, குழைத்த பத்து, சென்னிப் பத்து, ஆசைப்பத்து, வாழாப்பத்து, அடைக்கலப் பத்து, செத்திலாப் பத்து, புணர்ச்சிப் பத்து, அருட்பத்து, திருவார்த்தை, எண்ணப் பதிகம், திருவெண்பா, திருப்பள்ளியெழுச்சி, திருவேசறவு, ஆனந்த மாலை, உயிருண்ணிப்பத்து, பிரார்த்தனைப் பத்து, திருப்பாண்டிப் பதிகம் முதலிய பதிகங்களைப் பாடினார்.
அதிகாலையில் மன்னர்களை எழுப்ப, பள்ளியெழுச்சி பாடும் நிலை அந்நாளிலிருந்தது. மாணிக்கவாசகர் அப்போது சிவனை எழுப்புவதாகப் பத்துப் பாடல்களைத் “திருப்பள்ளி எழுச்சி”பாடல்களாகப் பாடியுள்ளார். இதுவும் திருவாசகத்தில் ஒரு பகுதியே.
அடியார் கூட்டத்துடன், பலநாள் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருந்தார். ஒருநாள் திருக்குளத்தில் தீப் பிழம்பு தோன்றிற்று. அடியார்கள் அனைவரும், நமச்சிவாயமென் அதில் மூழ்கினர். பெருமான், அம்மையப்பராய் இடப வாகனத்தில் எழுந்தருளி அருட்காட்சி வழங்கியருளினார்.
அடியார்கள் அனைவரும் அதில் மூழ்கிச் சிவகணங்களாயினர். மணிவாசகர் இவ்வேளையில் கொன்றை மர நிழலில், சிவயோகத்தில் அமர்ந்திருந்தார். இந்நிகழ்ச்சியை, யோகக் காட்சியில் அறிந்த அடிகள், அடியார்களின் பிரிவாற்றாது வருந்தி, குருந்த மரத்தினடியில் இருந்த, குருநாதரின் திருவடிப் பீடத்தை, பற்றிக் கொண்டு அழுதார். திருச்சதகம் என்னும் பாமாலையால், இறைவன் திருவருளைத் தோத்திரித்தார்.
பின்னர், குருநாதன் தனக்குப் பணித்த அருளாணையின் வண்ணம், திருவுத்தரகோசமங்கைக்குச் சென்று, அங்கும் குருநாதரைக் காணாது வருந்தி, நீத்தல் விண்ணப்பம் என்னும் திருப்பதிகத்தால் வழிபடு செய்தார். அப்போது, இறைவன் திருப்பெருந்துறையில் காட்டிய குருந்தமர் கோலத்தைக் காட்டியருளினார். அத்திருக் கோலத்தைக் கண்டு மகிழ்ந்த அடிகள், அங்கு பல சித்திகளும் கைவரப் பெற்றார்.
பின்னர், பல திருப்பதிகளையும் வணங்கிக் கொண்டு பாண்டிய நாட்டிலிருந்து சோழ நாட்டில் திருவிடைமருதூரை வந்தடைந்தார். இடைமருதில் ஆனந்தத் தேனாக எழுந்தருளியுள்ள இறைவன் அருள் நலத்தை நுகர்ந்து திருவாரூர் அடைந்தார். அங்கு புற்றிடங் கொண்ட பெருமானை வணங்கி திருப்புலம்பல் என்னும் பதிகத்தை அருளினார்.
பின்னர், சீர்காழியை அடைந்து தோணியப்பரைத் தரிசித்து, பிடித்தபத்து பதிகத்தை அருளினார். பின்னர், சோழநாட்டின் ஒரு பகுதியான நடுநாட்டை அடைந்து, திருமுதுகுன்றம், திரு வெண்ணெய் நல்லூர் தலங்களைத் தரிசித்து திருவண்ணாமலையை அடைந்தார். அங்கும் இறைவன் குருந்தமர் திருக்கோலம் காட்டியருளினான். அக்காட்சியைக் கண்டு வணங்கிய அடிகள், அத்தலத்தில் பலநாள்கள் தங்கியிருந்தார்.
மாணிக்கவாசகர் தல யாத்திரை செல்லும் இடங்களில் மக்கள் வாழ்வியலோடு வழக்கத்தில் இருந்த சில நாட்டுப்புறப்பாடல் வடிவங்களுக்கு ஏற்ப தம் பக்தி பாடல்களுக்கு வடிவம் கொடுத்துள்ளார். அதனால் தான் எழுதப் படிக்கத் தெரியாத சிற்றூர் மக்களும் அவர் பாடல்களைக் காதால் கேட்டு, மனப்பாடம் செய்து, வெகு எளிதாகப் பாடுவதைக் இன்று வரை காண முடியும்.
அண்ணாமலையில் தங்கியிருந்தபோது, மார்கழி மாதம் வந்தது. திருவாதிரைக்கு முன் பத்து நாள்களில், கன்னிப் பெண்கள் விடியற்காலம் எழுந்து, வீடுகள்தோறும் சென்று, ஒருவரையொருவர் துயிலெழுப்பிக் கொண்டு, நீராடி வழிபாடு செய்வதைக் கண்டார். அவர்கள் வாய் மொழியாகவே வைத்து, திருவெம்பாவையை மாணிக்கவாசகர் பாடினார்.
‘திருவெம்பாவை’. இது திருவாசகத்தில் ஒரு பகுதி. இன்றளவும் மார்கழி மாதத்தில் அதிகாலையில் சைவர்களால் பாடப்படுகிறது. 20 பாடல்களைக் கொண்டது. திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் ஒருவரை ஒருவர் துயில் எழுப்பி, கூடி, பொய்கைக்குச் சென்று நீராடிப் பாவை வைத்து வழிபடுவதைச் சொல்லுகிறது.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம் மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எம் தோழி பரிசேலோர் எம்பாவாய்.. (திருவெம்பாவை’. முதல் பாடல்)
என்று இறைவழிபாட்டுக்கு ஆன்மாக்களைத் தட்டி எழுப்பும்விதமாக இருக்கும் இவரது பாடல்கள். திருவண்ணாமலை கிரிவலம் வரும்போது அடி அண்ணாமலை செல்லும் முன்பு மாணிக்கவாசகர் திருவெம்பாவை அருளிய சன்னதி சாலையின் முன்பே இருக்கும்.
அதேபோல திருவண்ணாமலை பெண்கள் அம்மானையாடும் காட்சியைக் கண்டு, அவர்கள் பாடுவதாக வைத்து, திருவம்மானையையும் அருளினார்.
இளம்பெண்கள் உட்கார்ந்து காய்களைத் தூக்கிப்போட்டு கையால் பிடித்து விளையாடும் விளையாட்டு அம்மானை. அப்போது அவர்கள் பாடுவர். அப்பாடல் அமைப்பில் மாணிக்கவாசகர் பாடியது திருவம்மானை ஆகும்.
அண்ணாமலைக்கு அடுத்து காஞ்சிபுரம் வந்தடைந்தார். அவ்வூர் இறைவனைத் தரிசித்து திருக்கழுக்குன்றம் அடைந்தார். திருக்கழுக்குன்றப் பதிகம் பாடினார். அங்கே பெருமான் பெருந்துறையில், அவரை ஆட்கொண்ட குருநாதர் திருக்கோலத்தோடு காட்சி வழங்கினான். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு, தில்லையின் எல்லையை அடைந்து, அத் திருத்தலத்தைத் தரிசித்தார். தில்லை, சிவ லோகம் போலக் காட்சியளித்தது.
அந்நகரையடைந்த மணிவாசகர் திருவீதிகளைக் கடந்து வடக்குத் திருவாயில் வழியே திருக் கோயிலுக்குள் சென்றார். சிவனது கங்கையில் நீராடி வலமாகச் சிற்சபையில் எழுந்தருளியிருக்கும், ஆனந்த நடராசப் பெருமானை உளம் நெகிழ்ந்து வணங்கினார். குரு நாதனாக எழுந்தருளிக் காட்சி கொடுத்த இறைவனை, தில்லைச் சிற்றம்பலத்திலே கண்டு தரிசித்து பேரானந்தம் கொண்டார். ஆனந்தக் கண்ணீர் பெருக, கண்ட பத்து என்னும் பதிகம் பாடி வழிபட்டார். பின்னர், தில்லையின் கீழ்த்திசையில், ஒரு தவச்சாலை அமைத்து, பலநாள்கள் தங்கியிருந்து, தினமும் அம்பலவாணனின், ஆனந்த நடனத்தைத் தரிசித்துவந்தார். அங்கிருந்து திருப்புலீச்சுரம், திருநாகேச்சுரம் முதலான தலங்களுக்குச் சென்று தரிசித்து, மீண்டும் தில்லை வந்தடைந்தார்.
தில்லையில் அடிகள் அருளிச் செய்தவை, குலாப்பத்து, கோயில் திருப்பதிகம், கோயில் மூத்த திருப் பதிகம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப் பகுதி, போற்றித் திருவகவல், திருப்பொற்சுண்ணம், திருத்தெள்ளேணம், திருவுந்தியார், திருத்தோள் நோக்கம், திருப்பூவல்லி, திருப்பொன்னூசல், அன்னைப் பத்து, திருக்கோத்தும்பி, குயில் பத்து, திருத்தசாங்கம், அச்சப்பத்து என்பனவாம்.
கீர்த்தி என்பது புகழ். சிவனது புகழைப் பாடும் நூல் கீர்த்தித் திரு அகவல். அடியார் பார்க்கும் வகையிலும், நினைக்கும் வகையிலும் எளிமையாக அருள் செய்தவன் சிவன். தில்லையில் ஆடுபவன் சிவன் வேட்டுவன் வடிவம் தாங்கியது, வலை வீசும் மீனவனாக வந்து கெளிற்று மீனைக் கொன்றது, என்று இறைவனின் திருவிளையாடல்களைப் போற்றுகிறார் மாணிக்கவாசகர். திருவாசகத்தின் ஒரு பகுதியாக கீர்த்தித் திரு அகவல் விளங்குகின்றது
மாணிக்கவாசகர் பாடியது, ‘திருவண்டப் பகுதி’ ஆகும். சிவன் எல்லாம் வல்லவன். பெரியதில் பெரியவன், சிறியதில் சிறியவன் என்று அவனது வடிவத்தைப் போற்றுவது ‘திருவண்டப் பகுதி’ ஆகும். சிவனின் திறத்தை வியந்து பாடுகிறது.
படைப்பாற் படைக்கும் பழையோன், படைத்தவை
காப்போற் காக்கும் கடவுள், காப்பவை
கரப்போன் கரப்பவை கருதாக்
கருத்துடைக் கடவுள்
(திருவண்டப் பகுதி : 13-16)
சூரியனுக்கு ஒளி தந்தவன். சந்திரனில் குளிர்ச்சியை வைத்தவன். தீயில் வெப்பத்தை வைத்தவன். காற்றில் இயக்கத்தை வைத்தவன். நீரில் சுவையைத் தந்தவன். மண்ணில் திட்பத்தை வைத்தவன் என்று சிவனை வியக்கிறார் மாணிக்கவாசகர்.
‘போற்றி’ என்றால் வணக்கம் என்று பொருள். உலகில் உயிர்கள் உடம்புடன் பொருந்தித் தோன்றும் உலக உற்பத்தியைக் கூறுவது, போற்றித் திருவகவல் ஆகும்.
ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி
குறியே போற்றி குணமே போற்றி
நெறியே போற்றி நினைவே போற்றி
வானோர்க்கு அரிய மருந்தே போற்றி
ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி
(அடிகள் :112-117)
திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பொற்சுண்ணம், திருவம்மானை, திருப்பூவல்லி, திருவுந்தியார் முதலியன பலர் கூடிப் பாடும் கூட்டுப் பாடலாக அமைந்துள்ளன.
நெல் குத்தும்போதும், வாசனைப்பொடிகள் இடிக்கும்போதும் பெண்கள் கை சோர்வு தெரியாமலிருக்கப் பாடும் பாடல் ‘வள்ளைப் பாட்டு’ என்பது. ‘திருப்பொற்சுண்ணமாக’ மாணிக்கவாசகர் அமைத்துள்ளார். அந்தப் பாடல்களின் அமைப்பில் மாணிக்கவாசகர் இயற்றியது, திருப்பொற்சுண்ணம் ஆகும்.
பெண்கள் பூப்பறிக்கும்போது பாடும் அமைப்பில் அவர் எழுதியது, திருப்பூவல்லி. பெண்கள் ஊஞ்சலில் அமர்ந்து ஆடும்போது பாடும் பாடல் வடிவில் அவர் அமைத்த பாக்கள், திருப்பொன்னூஞ்சல் ஆகும்
விழாக் காலங்களில் மகளிர் ஒன்றாகக் கூடி வட்டமாக நின்று கைகொட்டி ஆடும்போது பாடும் பாடல் வடிவம் ‘திருத்தெள்ளேணம்’ ஆகும். இவ்வாறாக பெண்களது பாடல்கள் முறைமையைப் பின்பற்றி மாணிக்கவாசகர் பாக்களை அமைத்துள்ளமை சிறப்பானது, அனைவருக்கும் பாட எளிதானது.
மாணிக்கவாசகரது ‘திருச்சாழல்’ பாடல்கள், ‘திருப்பிச் சொல்லும் முறையில்’ அமைந்துள்ளன.
தாயுமிலி தந்தையுமிலி தான் தனியன் காணேடீ
தாயுமிலி தந்தையுமிலி தான் தனியன் ஆயிடினும் (3)
என்றும்
தொக்கன வந்தவர் தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ!
தொக்கன வந்தவர் தமைத் தொலைத்தருளி அருள் கொடுத்தங்கு (5)
என்று ‘திருச்சாழல்’ பகுதி முழுவதுமே திருப்பிச் சொல்லும் முறையில் உள்ளது. ஒருவர் பாட ஏனையோர் திருப்பிச் சொல்லும் முறை அனைவரிடமும் பாடல்களைக் கொண்டு சேர்க்க உதவியது எனலாம்.
இன்றைய நிறைய நவீன பாடல்களுக்குச் சிந்தனை வளத்தைத் தருவது திருவாசகமாகும்.
மணிவாசகர் தில்லையில் வாழ்ந்துவரும் நாள்களில் சிவனடியார் ஒருவர் சிதம்பரத்திலிருந்து இலங்கை சென்றிருந்தார்.
அவ்வடியார் செம்பொன்னம்பலம் திருவம்பலம் திருச்சிற்றம்பலம் என்ற திருநாமங்களை இடைவிடாது சொல்லிக் கொண்டிருப்பவர். அவர் இலங்கைசென்றிருந்த காலத்தில் அந்நாட்டில் புத்த சமயம்
மேலோங்கியிருந்தது. இவ்வடியாரின் இயல்பைக் கண்ட சிலர் அரசனிடம் சென்று அவரது செய்கைகளை உணர்த்தினர். அரசன் அச் சிவனடியாரைச் சபைக்கு அழைத்து வருமாறு செய்தான். அரசவைக்கு வந்த அடியவர் செம்பொன்னம்பலம், திருவம்பலம், என்று சொல்லிக் கொண்டே தன் இருக்கையிலமர்ந்தார்.
அரசன் வியந்து இதன் பொருள் யாது? என்று அவரைக் கேட்டான். அவ்வடியார், அதன் சிறப்புகளை எடுத்துரைத்து, `தீயவரும் உள்ளன்போடு இப்பெயரை ஒருமுறை கூறினால், 21,600 தடவை, திருவைந் தெழுத்தைக் கூறியதனால் உண்டாகும் பயனை இது தரும்` என்று கூறித் தில்லைப் பெருமானின், சிறப்பை எடுத்துரைத்தனர். அங்கிருந்த புத்தமத ஆசாரியன் சிவனடியார் கூறுவதைக் கேட்டுச் சினந்தார். `திரிபிடகம் அருளிய எங்கள் புத்தரைத் தவிர வேறு தெய்வம் உண்டோ? இன்றே நான் தில்லைக்குச் சென்று சைவத்தை வென்று புத்தனே கடவுள் என்று நிலைநாட்டி வருவேன்` என்று சூளுரைத்து கிளம்பினார். ஈழத்தரசனும் தன் ஊமைப் பெண்ணையும் உடன் அழைத்துக் கொண்டு புத்தாசாரியனுடன் தில்லைக்குப் புறப்பட்டான். தில்லையையடைந்த புத்த குரு, அரசன் முதலானோர் திருக்கோயிலையடைந்தனர். அக்கோயில் மண்டபம் ஒன்றில் அமர்ந்தனர். கோயில் காப்பாளர் அவர்களை அணுகி புறச் சமயத்தார் இங்கு தங்குதல் கூடாது என்று கூறினர். அதனைக் கேட்ட புத்தகுரு `யாம் உங்கள் சமயத்தை வென்று எங்கள் சமயத்தை இங்கு நிலைநாட்ட வந்துள்ளோம் என்று வாதிற்கு அறைகூவினான்.
அச்சூளுரை தில்லைவாழ் அந்தணர்களுக்கு எட்டியது. அவர்கள் சோழ மன்னனுக்கு இந்நிகழ்ச்சியை உடன் தெரிவித்தனர். அன்றிரவு தில்லைவாழ் அந்தணர்கள் அனைவரும் புத்தமத குருவை எவ்வாறு வெல்வது என்ற கவலையுடன் தில்லைச் சிற்றம்பலவனை எண்ணி வணங்கித் துயில்கொண்டனர். நடராசப் பெருமான் அவர்கள் கனவில் எழுந்தருளி `தில்லையின் கீழ்பால் சிவயோகத்தில் அமர்ந்து தவமியற்றி வரும் நம் அடியவனாகிய வாதவூரனை அழைத்துவந்து இந்த புத்த குருவோடு வாதிடச் செய்க. அவன் அவர்களை வெல்வான்” என்று கூறி மறைந்தார்.
மறுநாள் தாம் கண்ட கனவை ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டு இறைவன் திருவருளை வியந்து மணிவாசகர் எழுந்தருளியுள்ள தவச்சாலையை அடைந்தனர். மணிவாசகரிடம் “அடிகளே! நம் சைவ சமயத்தை அழித்து புத்த மதத்தை நிலைநாட்டும் எண்ணத்துடன் ஈழநாட்டு மன்னனும், புத்த மதகுருவும் வந்துள்ளனர். தாங்கள் வந்து அவர்களை வாதில் வென்று நம் சமயத்தை நிலைநிறுத்தல் வேண்டும்`” என்று அழைத்தார்கள்.
வாதவூரடிகளும் தில்லை மூவாயிரவருடன் சென்று ஆனந்தக் கூத்தனை வணங்கி அவனருள் பெற்று புத்த மத குரு இருந்த மண்டபத்தை அடைந்தார். தீயவர்களைக் காண்பது தீதென்றெண்ணி அவர்களுக்கெதிரே ஒரு திரையிடச் செய்து தான் மறுபக்கத்தில் அமர்ந்தார். சோழ மன்னனும் மறையோரும் புலவர்களும் அந்த அவையில் கூடியிருந்தனர்.
சோழன் வாதவூரரைப் பணிந்து, “புத்தர்களை வாதில் வென்று நம் சமயத்தை நிலைபெறச் செய்வது தங்கள் கடமை, தோல்வியுற்ற புத்தர்களை முறைசெய்வது என் கடமை” என்று வேண்டிக் கொண்டான்.
பின்னர் மணிவாசகர், புத்த குருவை நோக்கி வந்த காரியம் என்ன?` என்று வாதத்தைத் தொடங்கினார்.
வாதம் தொடர்ந்து நடைபெற்றது. மணிவாசகர் எத்தனை உண்மைகளை எடுத்துரைத்தாலும் அவை புத்தகுருவின் செவிகளில் ஏறவில்லை. மணிவாசகர் கூறிய வாதத்தை மறுக்கும் வழியின்றி, சிவ நிந்தை செய்யத் தொடங்கினான். அதனைக் கண்ட மணிவாசகர் கலைமகளை வேண்டி “சிவநிந்தை செய்யும் நாவில் நீ இருத்தல் பொருந்துமோ? இவர்கள் நாவைவிட்டு அகல்வாயாக. இது இறைவன் ஆணை” என்று கூறினார். அவ்வளவில் புத்த குருவும் அவருடன் வந்தவர்களும் ஊமைகளாயினர்.
இதனைக் கண்டு வியப்புற்ற ஈழமன்னன், வாதவூரரை வணங்கி, “அடிகளே என் பெண், பிறவி முதல் ஊமையாக இருக்கின்றாள். அவளைப் பேசும்படி செய்தால் நான் தங்களுக்கு அடிமையாவேன்” என்று கூறினான். வாதவூராரும் அதற்கிசைந்தார். அப்பெண்ணை அவைக்கு வரவழைத்து அமர்த்தி, பெண்ணே! இப்புத்தன் கேட்ட கேள்விகளுக்கு விடை கூறு என்று கூறினார். அப்பெண்ணும் அனைவரும் வியந்து மகிழும்படி, புத்த குருவின் வினாக்களை மணிவாசகர் தாமே அப்பெண்ணிடம் கேட்க அப்பெண் அதற்கு விடையளித்தாள்.
அந்த வினா விடைகள் தாம், திருச்சாழல் என்ற திருப்பதிகமாக அமைந்தது (தோழியர் இருவர் ஒருவரை ஒருவர் வினா-விடை கூறும் விளையாட்டுப் பாடல் முறை ‘திருச்சாழல்’ ஆகும்).
ஈழ மன்னனும் அதனைக் கண்டு மகிழ்ந்தார். மணிவாசகர் திருவடிகளிலே விழுந்து வணங்கி சைவம் சார்ந்தான். அவையோர் அனைவரும் மணிவாசகப் பெருமானைப் போற்றித் துதித்தார்கள். ஈழ மன்னன் திருநீறும் கண்டிகையும் பூண்டு அடிகளைப் பணிந்து, புத்தகுருவும் மற்றவர்களும் மீண்டும் பேசும் திறம் பெற அருள் செய்ய வேண்டுமென்று வேண்டினான். மணிவாசகர் அவர்கள் மீது திருவருட் பார்வையைச் செலுத்தினார்.
அவ்வளவில் அனைவரும் ஊமை நீங்கிப் பேசும் திறம் பெற்றனர். மாணிக்கவாசகரை வணங்கித் தாங்கள் செய்த குற்றத்தை, மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டனர். புத்தகுருவும் அவரைச் சூழ வந்த அனைவரும் சைவர்களாக மாறினர். மாணிக்கவாசகரும் திருக்கோயிலுக்குட் சென்று சபாநாயகரை வணங்கித் தம் தவச் சாலைக்கு எழுந்தருளினார். இவ்வாறு தவச்சாலையில் தங்கியிருந்த காலத்தில் மணிவாசகர் திருப்படையாட்சி, திருப்படையெழுச்சி, அச்சோப்பத்து, யாத்திரைப்பத்து என்ற பதிகங்களைப் பாடியருளினார்.
இறைவன் திருவாசகம் கேட்டு எழுதியது
சிதம்பரத்தில் இப்படியாக மணிவாசகர் வாழ்ந்து வரும் நாள்களில், ஒரு நாள் அந்தணர் ஒருவர் அவரிடம் வந்து, தான் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவரென்றும், சிவபிரான் மணிவாசகருக்காகச் செய்த அருட்செயல் உலகெங்கும் பரவியுள்ளது என்றும் வியந்து கூறி, மணிவாசகர் பல தருணங்களிலும் பாடிய பாடல்களை முறையாகச் சொல்லும்படி கேட்டுக் கொண்டார்.
மணிவாசகரும் அந்தணரை அருகிலிருத்தி தாம் பாடிய திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் சொல்லியருளினார்.
அந்தணரும் தம் திருக்கரத்தால் அவற்றை எழுதி முடித்தார். “பாவை பாடிய தங்கள் திருவாயால் ஒரு கோவை பாடுக” என்று கேட்டுக்கொண்டார். அவ்வேண்டுகோளுக்கு இணங்கிய மணிவாசகர் இறைவனது திருவடிப் பேற்றை உட்கருத்தாகக் கொண்டு இனிய கோவையார் என்ற நூலை அருளிச் செய்தார்.
அதை கேட்ட அந்தணர் அந்த நூலையும் தம் திருக்கரத்தால் எழுதி முடித்தார். பின்னர் அந்தணர் வடிவில் வந்த சிவபெருமான் மறைந்தார். அதனைக் கண்ட மணிவாசகர் இப்படித் தன்னை ஆட்கொண்டவர் சிவபிரானே என்பதை அறிந்து ஆனந்தக் கண்ணீர் பெருகித் திருவருளை எண்ணி மகிழ்ந்தார்.
திருச்சிற்றம்பலக் கோவை சிவனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட தமிழ் மரபுப் பாடல். தில்லையில் சிற்றம்பலத்தில் உறையும் சிவன் தலைவன் ஆதலால் இந்நூல், ‘திருச்சிற்றம்பலக் கோவை’ எனப்படுகிறது. இறைவன் தலைவன். மனித ஆன்மா தலைவி. இத்தலைவன் தலைவியின் அன்புகலந்த காதல் நுவல்பொருள் ஆக அமைந்த நானூறு பாடல்களைக் கொண்டது. பாடல்களில் சொற்சுவை, பொருள் சுவை மிகுந்துள்ளது. ‘தேனூறு செஞ்சொல் திருக்கோவை நானூறு’ என்பார்கள். இப்பாடல்கள் கட்டளைக் கலித்துறைப் பாவகையில் அமைந்துள்ளன.
மீண்டாரென உவந்தேன் கண்டும்மை இம்மேதகவே
பூண்டார் இருவர்முன் போயினரே புலியூரெனை நின்று
ஆண்டான் அருவரை ஆளியன்னானைக் கண்டேனயலே
தூண்டா விளக்கனையாய் என்னையோ அன்னை சொல்லியது
(திருக்கோவையார் - 244)
திருவாதவூரரின் திருவாசகத்தையும், திருக்கோவையையும் தம் கையால் எழுதிய இறைவன் அந்நூல்களை உலகறியச் செய்ய வேண்டி நூலின் முடிவில் `திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து` எனத் திருச்சாத்திட்டுத் தில்லைச் சிற்றம்பலத்தின் வாயிற்படியிலே வைத்தருளினார்.
காலையில் இறைவனைப் பூசை செய்ய வந்த அர்ச்சகர் வாயிற்படியில் நூல் ஒன்று இருப்பதைக் கண்டு அதனையெடுத்து ஆண்டவனால் இது தரப்பட்டதாகும் என்ற அன்புணர்வோடு பிரித்துப் பார்த்துப் படித்தார். அவ்வேடுகளின் முடிவில் திருவாதவூரார் சொற்படி திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து என்றிருந்ததைக் கண்டு உடல் சிலிர்த்தனர். இறைவன் திருவருளைப் பெறுதற்குரிய நூல்களில் இது தலையானது என்று புகழ்ந்து இந்நூலைப் பாடிய வாதவூரரைச் கண்டு வணங்கினார். திருவாயிற்படியில் இந்நூல் இறைவனால் வைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சியை அவரிடம் தெரிவித்தார். வாதவூரார் அதனைக் கேட்டு திருவருளை எண்ணி வணங்கினார்.
முடிவில் அந்தணர் அனைவரும் இந்நூலின் பொருளை தாங்களே விளக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு மணிவாசகர் இதன் பொருளை தில்லைச் சிற்றம்பலத்தில் வந்து தெரிவிக்கின்றேன் என்று சொல்லி அவர்களோடு சிற்சபைக்கு எழுந்தருளினார். அங்கு வந்து `இந்நூற் பொருள் இச்சபையில் எழுந்தருளியுள்ள ஆனந்தக் கூத்தப்பெருமானே ஆவான்” என்று சுட்டிக் காட்டி அச்சபையில் எல்லோரும் காண மறைந்தருளினார்.
ஆனி மகத்தன்று இறைவனோடு இரண்டறக்கலந்தார். இவ்வற்புதங்கள் கண்ட அனைவரும் வியந்து மகிழ்ந்து வணங்கிப் போற்றினர்.
தில்லைவாழ் நடராஜப்பெருமான் மணிவாசகருக்குத் தம் திருவடிகளிலேயே இரண்டறக் கலக்கும் பேரின்பப் பேற்றைத் தந்து, அவரை ஆட்கொண்டருளினார்.
கருத்துகள்