சிறு, குறு, நடுத்தர தொழில் துறையில் தற்சார்பு
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணை அமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வெர்மா கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
நாட்டில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் உட்பட சிறு வணிகங்களுக்கு கொவிட்-19 காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பை தணிக்க, தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்துள்ளது. அவற்றில் சில:
* அழுத்தத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ 20,000 கோடி துணைக் கடன்.
* சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட வணிகங்களுக்கு ரூ 3 லட்சம் கோடி அவசரக் கடன் உத்தரவாதத் திட்டம் (பின்னர் இது 2022-23 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி ரூ. 5 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டது).
* தற்சார்பு இந்தியா நிதி மூலம் ரூ 50,000 கோடி நிதி
* சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வகைப்பாட்டில் புதிய திருத்தப்பட்ட அளவுகோல்கள்.
* எளிதாக வணிகம் செய்ய ‘உத்யம் பதிவு’ மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் புதிய பதிவு.
* ரூ 200 கோடி வரை கொள்முதல் செய்வதற்கு உலகளாவிய டெண்டர் முறை இல்லை.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஊக்குவிப்பு மற்றும் மேம்பாடு ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சவால்களை மதிப்பிடுவதற்காக பங்குதாரர்கள், தொழில் சங்கங்கள், தனிநபர் நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளுடன் கருத்தரங்குகள், காணொலி, கூட்டம் போன்றவற்றின் மூலம் இந்திய அரசு தொடர்ந்து தொடர்பு கொள்கிறது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில துறை அமைச்சகம் செயல்படுத்துகிறது.
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம், பாரம்பரியத் தொழில்களின் மறுமலர்ச்சிக்கான நிதித் திட்டம், புதுமைகளை மேம்படுத்துவதற்கான திட்டம், கிராமப்புற தொழில் மற்றும் தொழில்முனைவோர் திட்டம், குறு மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் மற்றும் குறு மற்றும் சிறு தொழில்கள் கிளஸ்டர் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்டவை இந்தத் திட்டங்களில் அடங்கும்.
கருத்துகள்