புதுக்கோட்டை-சிவகங்கை மாவட்ட எல்லைகையில் புதுவயல் கல்லூர் சுதந்திரபுரம் காலனி பகுதி உதயசூரியன் மனைவி புவனேசுவரி. கணவர் இறந்த நிலையில் மனநிலை பாதிக்கப்பட்ட சுகன்யா (வயது 28) மகளுடன் வசிக்கிறார்.
அப் பகுதியருகேயுள்ள புளியங்குடியிருப்பு வெடத்தை அய்யனார் கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. அங்கு நடந்த அன்னதானத்தில் சாப்பிடச் சென்று வருவதாக கூறிய நிலையில் சுகன்யா அன்று மதியம் வீட்டிலிருந்து சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இரவு நெடுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடிய நிலையில் சுதந்திரபுரம் முந்திரிக் காட்டிற்குள் இளம்பெண் ஒருவரின் உடல் கிடப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் வந்ததன்பேரில் சாக்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த போது இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார். அவர் யாரென்று விசாரித்தபோது காணாமல் போன சுகன்யா தான் என்பது தெரியவந்தது.
அவரது ஆடை கிழிக்கப்பட்டு அலங்கோலமாக கிடந்தார். இதனால் அவர் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாமென காவல்துறை கருதி. அந்தக் கோணத்திலேயே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
சுகன்யா கொலை செய்யப்பட்ட தகவல் சுதந்திரபுரம் பகுதியில் பரவிய உடன்அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி புதுவயல்- அறந்தாங்கி செல்லும் சாலையில் மூன்று மணி நேரம் மறியல் செய்தனர்.
இதனால் அப் பகுதியில் பரபரப்பு கூடியது. மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் சமரசம் செய்தனர். ஆனால் வெகுநேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளம்பெண் கொலை சம்பவம் அந்தப் பகுதி மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கருத்துகள்