தக்ஷின் - தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாட்டில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் உரை
திரைப்படங்கள் நாட்டின் ஆன்மாவாக திகழ்கின்றன. நம் திரையுலக நட்சத்திரங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களுடன் நாம் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளோம்
உலக அளவில் திரைப்படத் துறையில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று
இந்தியா ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது. அவ்வாறு தயாரிக்கப்படும் திரைப்படங்கள் உலகம் முழுவதும் சென்றடைகின்றன
இந்திய தொழில் கூட்டமைப்பின், தென் மண்டல பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தக்ஷின் - தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாட்டில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல் முருகன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர். திரைப்படங்கள் நாட்டின் ஆன்மாவாக திகழ்வதாகவும், நம் திரையுலக நட்சத்திரங்கள் நடிக்கும் கதா பாத்திரங்களுடன் நாம் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளதாகவும் கூறினார். உலக அளவில் திரைப்படத் துறையில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று தெரிவித்தார்.
இந்தியா ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது என்று கூறிய அமைச்சர், அவ்வாறு தயாரிக்கப்படும் திரைப்படங்கள் உலகம் முழுவதும் சென்றடைகின்றன என்று கூறினார். அதற்கு உதாரணமாக சமீபத்தில் வெளியான RRR திரைப்படத்தை கூறலாம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நமது நாட்டுத் திரைப்படங்கள் மட்டுமல்லாமல், ஜங்கிள் புக் போன்ற ஹாலிவுட் திரைப்படங்களும் தயாரிப்பிற்குப் பிந்தைய பணிகளுக்காக இந்தியாவிற்கு வந்துள்ளன என்று மத்திய இணையமைச்சர் கூறினார்.
பல்வேறு வடிவங்களிலும் பொழுதுபோக்கு அம்சங்களின் தாக்கம் உள்ளது என்று கூறிய அமைச்சர், வெள்ளித் திரை, மல்டிபிளக்ஸ்கள், தொலைக்காட்சி , நவீன செல்போன்கள், டிடிஎச், OTT.போன்ற பல்வேறு தளங்கள் பார்வையாளர்கள் தெரிவு செய்யும் வகையிலும், ஆக்கப்பூர்வமான தொழில்முனைவோருக்கு விருப்பமானவற்றை தேர்ந்தெடுக்கவும் உதவுகிறது என்றார். அனிமேஷன், கேமிங், VFX மற்றும் OTT ஆகியவை புதிய வாய்ப்புகளை வழங்குவதாக அவர் தெரிவித்தார்.நாட்டின் 75-வது விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, திரைப்படத் துறையில் சிறந்து விளங்கும் 75 புதிய திறமையாளர்களுக்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது என்று அவர் கூறினார்.
இந்தியத் திரைப்படத் துறையை எளிதாக்குவதற்கு மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாகவும், அத்தகைய முயற்சிகளில் திரைப்பட வசதிகளுக்கான அலுவலகத்தில் ஒற்றைச் சாளர அனுமதி அமைப்பு முறையும் ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.
இவை தவிர, இந்திய தயாரிப்பாளர்களுடன் இணைந்து திரைப்படத்தை தயாரிப்பதற்காக 15 நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அண்மையில் காலமான ஜாம்பவான்களான எஸ்.பி. பாலசுப்ரமணியம், லதா மங்கேஸ்கர் மற்றும் திலீப் குமார் ஆகியோரையும் அமைச்சர் எல் முருகன் அப்போது நினைவு கூர்ந்தார்.
கருத்துகள்