மதுரை சித்திரைத் திருவிழாவில் வைகையாற்றில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
இரு குடும்பங்களுக்கு தலா ரூபாய் .5 லட்சம் நிதியுதவி மதுரையில் இன்று காலை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கிய நிகழ்வைக் காணும் பொருட்டு, பல பகுதிகளிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். கோவிட் பாதிப்பால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின், வைபவம் நடப்பதால், பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது இன்று காலை அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் பங்குபெற்று, திரும்பும் வேளையில் கூட்டநெரிசலில் சிக்கி ஒரு ஆணும், பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஒருவர் பலத்த காயங்களுடனும், 7 பேர் சிறிய காயங்களுடனும் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.சம்பவத்தை கேள்விப்பட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வேதனையுடன் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு, இச்சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கும் தலா ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரணமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், சிறிய காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட ஆணையிட்டுள்ளார். மதுரையின் சித்திரைத் திருவிழாவின் கூட்ட நெரிசலில் சிக்கி உயிர்பலியும் , மக்கள் காயமடைந்திருப்பதும் மிகுந்த மன வேதனையை உருவாக்கிய நிலையில்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சை பெறுவோர்களை தமிழக அமைச்சர்கள் பி.மூர்த்தி ,பி.டிஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்
பாதிக்கப்பட்டோருக்கு உடனடி சிகிச்சை அனைத்துவகையிலும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ்சேகர் இஆப , மருத்துவமனை முதல்வர் மரு.ரத்தினவேலு , உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருத்துகள்