சிங்கப்பூர் பிரதமர் அலுவலக அமைச்சர் டாக்டர் மாலிக்கி ஒஸ்மான் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருடன் சந்திப்பு
சிங்கப்பூர் பிரதமர் அலுவலக அமைச்சர் டாக்டர் மாலிக்கி ஒஸ்மான் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருடன் சந்திப்பு
சிங்கப்பூர் அரசின் கல்வி மற்றும் வெளியுறவுத் துறைக்கான இரண்டாவது அமைச்சரும், பிரதமர் அலுவலக அமைச்சருமான டாக்டர் முகமது மாலிக்கி பின் ஒஸ்மானை மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் இன்று சந்தித்தார்.
டிஜிட்டல் ஊடகம், இளைஞர் பரிமாற்றம் மற்றும் இருதரப்பு உறவுகள் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
சந்திப்பின் போது, சிங்கப்பூரில் டிஜிட்டல் தளங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களின் ஒழுங்குமுறை கட்டமைப்பைப் பற்றி டாக்டர் ஒஸ்மான் திரு தாக்கூருக்கு தெரிவித்தார். இந்தியாவின் ஒழுங்குமுறை அமைப்பை பற்றி விவாதித்த திரு தாக்கூர், இந்தியாவில் பின்பற்றப்படும் மூன்று அடுக்கு வழிமுறைகள் குறித்து டாக்டர் ஒஸ்மானிடம் தெரிவித்தார்.
மேலும், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கீழ் பிரத்யேக உண்மைச் சரிபார்ப்புப் பிரிவின் வாயிலாக இந்தியா மேற்கொண்ட உண்மைச் சரிபார்ப்பு பற்றி, சிங்கப்பூர் உயரதிகாரிகளுக்கு திரு தாக்கூர் விளக்கினார். மேலும், இந்த பிரிவை வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சலில் எவரும் எளிதாக அணுக முடியும் என்று கூறினார்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டில் இருப்பதாகவும், 1965 ஆகஸ்ட் 9-ம் தேதி சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்திருப்பதால் இரு நாடுகளும் ஒரு வார காலத்தை இந்தியா-சிங்கப்பூர் சுதந்திர வாரமாகக் கொண்டாடுவது குறித்து ஆராயலாம் என்றும், அதில் கலாச்சாரம் மற்றும் அறிவுப் பரிமாற்றம் உள்ளிட்டவையும் அடங்கும் என்றும் சிங்கப்பூர் அமைச்சரிடம் திரு தாக்கூர் தெரிவித்தார்.
பெரிய அளவில் இளைஞர்களின் லட்சியங்களை கொண்ட நாடு இந்தியா என்றும், இன்றைய இளைஞர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் அடுத்த நூறு ஆண்டுகளுக்கு இந்தியாவை மாற்றும் என்று தாம் நம்புவதாகவும் திரு அனுராக் தாக்கூர் கூறினார். அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் இளைஞர்களை திறன்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகள் குறித்தும் வருகை தந்திருந்த உயரதிகாரிகளுக்கு திரு தாக்கூர் தெரிவித்தார்.
சிங்கப்பூருக்கு வருமாறு திரு அனுராக் தாக்கூருக்கு டாக்டர் மாலிக்கி ஒஸ்மான் அழைப்பு விடுத்தார். டாக்டர் மாலிக்கி ஏப்ரல் 26 வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார்.
கருத்துகள்