கேரளத்தின் கண்ணூரில்
ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 வது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய, மாநில உறவுகள் குறித்துப் பேசுகையில், `இந்தியாவில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்தை 356 ஆவது பிரிவைப் பயன்படுத்தி முதன் முதலில் கலைக்கப்பட்டது கேரளாவின் அரசாங்கம். தமிழ்நாட்டிலும் 1976 ஆம் ஆண்டு, மற்றும் 1991 ஆம் ஆண்டு என இரண்டு முறை மக்களால் தேர்வு செய்யப்பட்ட தி.மு.க அரசு கலைக்கப்பட்டது. அந்தவகையில் ஒன்றிய, மாநில உறவுகளைப் பற்றிப் பேசும் உரிமை கேரளா மற்றும் தமிழ்நாட்டுக்கு உண்டு. மாநிலங்கள் காப்பாற்றப்பட்டால் மட்டுமே இந்திய நாடு காப்பாற்றப்படும். மாநிலங்கள் இணைந்தால் தான் நாடு. ஆனால் அரிச்சுவடியை சிலர் மாற்றுகிறார்கள்' . இந்தியாவில் எத்தனையோ மதங்கள், மொழிகள், இனங்கள், பண்பாடுகள், கலாசாரங்கள், உடைகள், உணவுகள் இருந்தாலும் ஒற்றுமையாக இருக்கிறோம். இதனை அழித்து ஒற்றைத் தன்மையை உருவாக்க நினைக்கிறார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே பண்பாடு, ஒரே உணவு என கோரஸ் பாடுகிறார்கள். இப்படியே போனால் ஒரே கட்சி என்றாகி விடும்.
இதைவிட ஆபத்தானது வேறு இருக்க முடியுமா? இதற்கு எதிரான குரல்தான் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தைக் கடந்து தனது அதிகார எல்லையை இந்திய அரசு விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறது. இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் கூட இப்படியொரு ஒற்றைத்தன்மையை உருவாக்க நினைக்கவில்லை. ஆங்கிலேயர்கள் கூட செய்வதற்குத் துணியாததை பாரதிய ஜனதா கட்சி செய்ய நினைக்கிறது எனக் குற்றம் சுமத்துகிறேன். டெல்லியிலுள்ள ஆட்சியாளர்கள், மாநிலங்களை அடிபணியச் செய்வதில் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், ` இது மக்களுக்குச் செய்யும் துரோகம். எந்தவித விவாதமும் இல்லாமல் நாடாளுமன்றத்தில் சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அங்கே எந்தக் கேள்விகளுக்கும் பதிலில்லை. எதற்கும் பொறுப்பேற்காத வகையில் டெல்லியிலுள்ள அரசு செயல்படுகிறது. கிராமங்களிலுள்ள கூட்டுறவு சங்கங்களைக்கூட தனது கட்டுப்பாட்டில் வைப்பதற்கு அதிகாரத்துடன் ஒன்றிய அரசு செயல்படுகிறது. தமிழ்நாட்டில் ஆளுநர் வசம் நீட் தேர்வு விலக்கு உள்பட 11 மசோதாக்கள் நிலுவையிலுள்ளன. இங்குள்ள எட்டு கோடி மக்களைவிட நியமன ஆளுநருக்கு அதிக அதிகாரம் உள்ளதா?' எனவும் கேள்வியெழுப்பினார்.
`இதுபோன்ற இடையூறுகளை எதிர்கொள்வதற்கு அரசியலையும் தாண்டி மாநிலங்கள் ஒன்றிணைய வேண்டும்' எனக் குறிப்பிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், `தென்னிந்திய முதலமைச்சர்கள் அடங்கிய குழுவை உருவாக்க வேண்டும். அந்தக் குழுவில் பின்னர் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் முதல்வர்களையும் சேர்க்கலாம். மாநிலங்களுக்கு அதிக உரிமைகளை வழங்கக் கூடிய வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். இதனை நிறைவேற்றுவதற்கு அரசியல் எல்லைகளைத் தாண்டி நாம் ஒன்றிணைய வேண்டும். அப்போது தான் சமூக நீதி, சமத்துவம், மதச்சார்பின்மை ஆகிய லட்சியங்களை நம்மால் காப்பாற்ற முடியும்'' என்றார். இது அகில இந்திய அளவில் பலரும் பேசும் பொருளாகியது.
கருத்துகள்