திருநெல்வேலி தாலுகா அலுவலகம் முன் அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மருத்துவக் காப்பீடு திட்டத்தில் கொரோனா பரவல் உள்ளிட்ட பல நோய்களுக்கு ஓய்வூதியர்கள் சிகிச்சை பெற்று அதற்கான செலவு தொகை இதுவரை வழங்கப்படவில்லை. நிலுவையிலுள்ள 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மனுக்களைப் பரிசீலித்து காப்பீட்டு நிறுவனம் மூலம் உடனடியாகப் பணத்தை வழங்க வேண்டும். 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்கள், மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், தலையாரி அல்லது கிராம உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி வட்டத் தலைவர் செய்யது சுலைமான் தலைமை தாங்கினார். செயலாளர் ஈசுவரமூர்த்தி முன்னிலை வகித்தார். மாநிலச் செயலாளர் ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் குமாரசாமி, துணைத்தலைவர் கோபாலன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்கள். நிகழ்வில் நிர்வாகிகள் சங்கரவடிவு, பேராச்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்