நீதிபதிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம்
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனம் இந்திய அரசமைப்பு சட்டத்தின் 124, 217 மற்றும் 224 ஆகிய பிரிவுகளின் கீழ் செய்யப்படுகிறது, எந்த சாதி அல்லது பிரிவினருக்கும் இதில் இடஒதுக்கீடு இல்லை.
கொலீஜியம் அமைப்பின் மூலம் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும் தற்போதைய முறையில், பட்டியல் பிரிவினர்/ பழங்குடியினர்/ இதர பிற்படுத்தப்பட்டோர்/ பெண்கள்/ சிறுபான்மையினர் உட்பட சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சமூகப் பன்முகத்தன்மை மற்றும் பிரதிநிதித்துவம் வழங்கும் பொறுப்பு நீதித்துறையிடம் முதன்மையாக உள்ளது.
உயர் நீதிமன்ற கொலீஜியம்/உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்யாத எவரையும் உயர் நீதிமன்ற நீதிபதியாக அரசு நியமிக்க முடியாது.
இருந்த போதிலும், நீதிபதிகள் நியமனத்தில் சமூக பன்முகத்தன்மைக்கு அரசு உறுதியாக உள்ளதோடு நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான முன்மொழிவுகளை அனுப்பும் போது, பட்டியல் பிரிவினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த தகுதியான விண்ணப்பதாரர்களை உரிய பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்து வருகிறது.
01.01.2021 முதல் 30.03.2022 வரை, 39 பெண்களை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது, அவர்களில் 27 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், மீதமுள்ள 12 பேரின் நியமனம் செயல்பாட்டில் உள்ளது.
கருத்துகள்