உலக மிதிவண்டி தினத்தில் மகாத்மா காந்தியின் படத்தைப் பகிர்ந்துள்ளார் பிரதமர்
இன்று உலக மிதிவண்டி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, “சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை” என்ற கருத்தை குறிப்பிட்டுள்ள பிரதமர் திரு.நரேந்திர மோடி, மகாத்மா காந்தி மிதிவண்டி ஓட்டும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
“சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை, இன்று உலக மிதிவண்டி தினம், நிலையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்த மகாத்மா காந்தியை விட சிறந்தவர் யார்”.உலக மிதிவண்டி தினம் கொண்டாட்டம்
உலக மிதிவண்டி (சைக்கிள்) தினம் தமிழ்நாட்டில் சென்னை உட்பட புராதன சிறப்பு வாய்ந்த ஆறு இடங்களில் இன்று கொண்டாடப்பட்டது.
ஆண்டுதோறும் ஜூன் 3ம் தேதி உலக மிதிவண்டி தினமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர அமிர்த பெருவிழாவையொட்டி நாடுமுழுவதும் 75 இடங்களில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. தலைநகர் புதுதில்லியில், மேஜர் தியான்சந்த் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியை மத்திய தகவல் – ஒலிபரப்பு மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் தொடங்கி வைத்தார்.
சென்னையில், நேரு இளைஞர் மையம், நாட்டு நலப்பணித் திட்ட மண்டல இயக்குனரகம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சென்னை பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம் ஆகியவை இணைந்து உலக மிதிவண்டி தினத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.
சென்னை பெசன்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரையில் நேரு இளைஞர் மையத்தின் மாநில இயக்குனர் திரு என் எஸ் மனோகரன் தலைமையில் நடைபெற்ற மிதிவண்டி பேரணியை தமிழக காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் திரு மகேஷ்குமார் அகர்வால், தொடங்கி வைத்தார். இதில் 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய திரு மகேஷ்குமார் அகர்வால், மிதிவண்டி பயன்பாட்டின் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தார்.
இதேபோன்று மாமல்லபுரம் கடற்கரை கோவில், வேலூர் கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சி மணியாட்சி ரயில் நிலையம், சிவகங்கை மாவட்டம் அரண்மனை சிறுவயலில் உள்ள மருதுபாண்டியர் கோட்டை, தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் ஆகிய புராதன சிறப்புமிக்க இடங்களிலும், உலக மிதிவண்டி தினம் கொண்டாடப்பட்டது.
மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உலக மிதிவண்டிதினத்தை முன்னிட்டு மிதிவண்டி பேரணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.உலக சைக்கிள் தினமான இன்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.அனுராக் தாக்கூர், நாடு தழுவிய நிகழ்ச்சிகளை மத்திய அமைச்சர்கள் திரு கிரண் ரிஜிஜு, திரு மன்சுக் மாண்டவியா, திருமதி மீனாட்சி லேகி ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்
உலக சைக்கிள் தினத்தையொட்டி, மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர், புது தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் மைதானத்தில், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, வெளியுறவு மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் திருமதி. மீனாட்சி லேகி ஆகியோர் முன்னிலையில் தேசிய அளவிலான நிகழ்ச்சிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் எம்.பி.யுமான டாக்டர். ஹர்ஷ்வர்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு மனோஜ் திவாரி, திரு ரமேஷ் பிதுரி, இளைஞர் விவகாரத் துறை செயலாளர் திரு. சஞ்சய் குமார், விளையாட்டுச் செயலாளர் திருமதி. சுஜாதா சதுர்வேதி மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தியான் சந்த் மைதானத்தில் இருந்து புறப்பட்ட சைக்கிள் பேரணிக்கு திரு அனுராக் சிங் தாக்கூர் தலைமை தாங்கினார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். டெல்லியில் 7.5 கிமீ பேரணியில் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், நேரு யுவகேந்திரா சங்கம் நாடு முழுவதும் உள்ள 35 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சைக்கிள் பேரணிகளை ஏற்பாடு செய்தது.
பேரணியைத் தொடங்குவதற்கு முன்பு உரையாற்றிய திரு அனுராக் சிங் தாக்கூர், இந்தியா விடுதலையின் அமிர்தப்பெருவிழாவை கொண்டாடும் நிலையில், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நாடு முழுவதும் மிதிவண்டி பேரணிகளை ஏற்பாடு செய்வதற்கான தனித்துவமான நடவடிக்கையை எடுத்துள்ளது. சுதந்திரத்தின் 75வது ஆண்டில் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் நோக்கம், உடல் ஆரோக்கியத்திற்காக மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிப்பதாகும் என்று கூறினார்.
“பிட்னஸ் பிரச்சாரத்தில் நாட்டு மக்கள் இணைய வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி விரும்புகிறார். ஃபிட் இந்தியா பிரச்சாரத்தில் சைக்கிள் ஓட்டுதல் மிகப்பெரிய பங்கை வகிக்க முடியும். உலக சைக்கிள் தினத்தில், ஒவ்வொருவரும் சைக்கிள் ஓட்டுவதை தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என்ற தெளிவான செய்தியை நாங்கள் வழங்குகிறோம். சைக்கிள் ஓட்டுதல் உங்களை ஆரோக்கியமாகவும், தூய்மையான இந்தியாவை உருவாக்கவும் உதவும்” என்று திரு தாக்கூர் கூறினார்.
கருத்துகள்