புதுக்கோட்டை நகர், மேல மூன்றாம் வீதியில் வசித்துவரும் கண்ணன் மனைவி சுகன்யா (வயது 34). நச்சாந்துபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவி கணக்காளராகப் பணி செய்கிறார்.
கடந்த ஒன்றரை மாதங்களாக ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வராமல் அடிக்கடி விடுப்பு எடுத்திருக்கிறார், இந்த நிலையில் தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தில் பணியாற்றக்கூடிய பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மனோஜ், சம்பந்தப்பட்ட உதவிக் கணக்காளரிடம் கேட்டபோது, அதற்கு சரியான பதில் கூறாமல் மழுப்பலாக பதில் கூறியிருந்த நிலையில் சந்தேகமடைந்த மருத்துவ அலுவலர் டாக்டர் மனோஜ், சுகன்யாவின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்து பார்த்திருக்கிறார் அப்போது, அதிர்ச்சியடைந்தாராம். ஆரம்ப சுகாதார நிலைய வங்கிக் கணக்கிலிருந்து உதவி கணக்காளர் சுகன்யாவின் வங்கிக் கணக்குக்குப் பணம் மாற்றப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மனோஜ் அந்த ஆதாரங்களுடன் புதுக்கோட்டை மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையில் கொடுத்திருக்கும் புகாரின் பேரில், மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் குற்ற விசாரணை முறைச் சட்டம் உட் பிரிவு 409, 419, 420 ன்படி வழக்கு பதிவுசெய்து, சுகன்யாவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் பின்னர் சிறைக்கு அனுப்பி முழுமையாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், சுகன்யா கடந்த ஆறு மாதகாலமாக அந்த சுகாதார நிலையத்துக்கு பல்வேறு அரசு திட்டங்கள் மூலம் வந்த பணம் மற்றும் கிராமப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் பணியாற்றக்கூடிய பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத் தொகை என மொத்தம் 11,31,909 ரூபாயை நச்சாந்துபட்டி வட்டார மருத்துவ அலுவலராக இருக்கும் மருத்துவர் மனோஜின் கையொப்பத்தை போலியாகப் பதிவிட்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது.வட்டார அலுவலக கனரா வங்கிக் கணக்கிலிருந்து, உதவிக் கணக்காளர் சுகன்யா கணக்கு வைத்திருக்கும் பனையப்பட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கணக்குக்கு மாற்றி கடந்த ஆறு மாதகாலமாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார் என்று தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக கைதியாகியிருக்கும் சுகன்யாவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதில் உண்மை நிலவரம் விசாரணை முடிவில் தான் தெரியும்.
கருத்துகள்