திருச்சிற்றம்பலம். இந்தப் படத்தினைப் பற்றி எழுதுவது அவசியம்
ஆபாசக் காட்சிகளோ, வன்முறைக் காட்சிகளோ இல்லாத ஓர் யதார்த்தமான திரைப்படம் எடுத்ததற்காக குழுவினரைப் பாராட்ட வேண்டும்.
தனுஷ், பிரகாஷ்ராஜ், நடிப்புத்திறன் என்னவென்பதை பல படங்களில் ஏற்கனவே பார்த்துவிட்டதால், மற்றுமொருமுறை பாராட்டவேண்டிய அவசியமில்லை
பாரதிராஜா.. இந்த ஒரு படத்தில்தான் சரியாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறார். மகனான பிரகாஷ் ராஜ் மற்றும் பேரனான தனுஷுடன் அவர் எதிர்கொள்ளும் போராட்டம் சில இடங்களில் நெகிழ்வான நிலை.
நித்யா மேனன்.. ஆஹா. நடிப்பதற்கு அழகு தேவையேயில்லை என்பதை இப்படத்தில் நிரூபித்துள்ளார். மிகைப்படுத்தாத இயல்பான நடிப்பு. பல இடங்களில் தனுஷையும் விஞ்சி நிற்கிறார்.
கதையில் தாயும், தங்கையும் விபத்தில் இறந்ததற்கு தந்தையான பிரகாஷ்ராஜ் தான் காரணமென தனுஷ் அவரை வெறுப்பது என்பது ஒரு வலுவான காரணமாகத் தோன்றவில்லை படத்தில்.
அதைக்கூட விட்டுவிடலாம். இதற்காத தந்தையை, அவன், இவன், வாடா போடா எனப் பேசுவதும், ஏசுவதும், இன்றைய தலைமுறையினர் மனதில் வெகு ஆழமாகப் பதிந்துவிடும்.
பெற்றோர்க்கான கொஞ்ச நஞ்சம் மரியாதையும் இதுபோன்ற படத்தால் காணாமல் போய்விடும் அபாயமுண்டு.
அதைவிடக் கொடுமை ஒன்று உண்டு.
தாத்தாவும், பேரனும், எப்போது எதுபற்றி விவாதித்தாலும், வீட்டிலோ, வெளியிலோ, ரெயிலிலோ, கையில் பீர் (மது) பாட்டில் இல்லாமல் ஒரு காட்சிகூட இல்லை.
பீர் குடித்தால் தான் விவாதங்களும், திட்டமிடலும், புரிதலும் சரியாக இருக்கும் என்ற ஒரு மிக மிகத் தவறான கருத்தை அழகாகப் புகுத்துகிறது இத் திரைப்படம்.
ஏற்கனவே போதை என்னும் விஷ(ய)ம், அடுத்த தலைமுறையினரைச் சீரழித்துக் கொண்டிருக்கும் வேளையில்,
இதுபோன்ற காட்சிகள் வைத்தால், சொல்லவே வேண்டாம்.
இயக்குனருக்கோ, நடிகர்களுக்கோ, எவருக்காயினும், சமூகப் பொறுப்பு என்ற ஒன்று இருக்க வேண்டும். அது இல்லாதவரை, எவ்வளவு வசூல் செய்தாலும், அது குப்பையை விற்று சம்பாதிப்பதற்குச் சமம் தான்.
குடும்பத்தோடு செல்லலாம் என சில விமரிசனங்கள் கண்டேன் முகநூலில். எதற்கும் சற்று யோசித்து செயல்படுங்கள்.
படத்தின் இதுபோன்ற காட்சிகள் உண்மையல்ல என்பதை பிள்ளைகளுக்குப் புரியவைக்க முயலுங்கள்.
அடுத்த தலைமுறை தான் நம்முடைய பாதுகாப்பு என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
சிறந்த படமாக வரவேண்டிய ஓன்று, தேவையற்ற காட்சிகளால் தடம் மாறுகிறது.. சிவன் வழிபாட்டில் திருச்சிற்றம்பலம் இறுதியாக வரும் அதுவே அதன் முடிவுரைநமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
................................................
.....................................................
.............................................
..அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.
திருச்சிற்றம்பலம்! ஆனால் இதை மனதில் வைத்து படம் பார்க்க யாரும் சென்றால் ஏமாற்றமே மிஞ்சும்.
கருத்துகள்