சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் கான்பாநகரில் கணவர் உயிரிழந்த நிலையில் சொந்த வீட்டில்
தனியாக வசித்தவர், ரஞ்சிதம்(வயது 52). தென்மாபட்டு அரசினர் உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றியவர். செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி புதன்கிழமை அவரது வீட்டில் கால்,கை நரம்புகள் அறுக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில்
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள், மற்றும் மோப்ப நாயை வரவழைத்து தீவிரமாக விசாரித்தனர். தடயங்கள் கிடைக்காத நிலையில், கொலைக் குற்றவாளியைப் பிடிக்க முடியாமல் திணறிய நிலையில் கடந்த நான்கு நாட்களாக ரஞ்சிதத்தின் உறவினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தலைமை ஆசிரியை ரஞ்சிதத்தின் அக்காவின் மகளும், அவருடன் பிறந்த தம்பி பாண்டிவேல் முருகனின் மனைவியுமான நதியா (வயது 32) மீது காவல்துறையினருக்கு சந்தேகமெழுந்தது
திருப்பத்தூர் வட்டம் நெடுமரம் கிராமத்தில் வசித்த நதியா, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருவதற்கு முன்னரே வந்திருக்கும் தகவல் காரணமாக காவல்துறையினரின் சந்தேக வளையத்திலிருந்த அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. காவல்துறையினர் தரப்பில் வரும் தகவல்:-, கொலை செய்யப்பட்ட ரஞ்சிதம், அவரது அக்கா மகள் நதியாவை, அவரது தம்பி பாண்டிவேல் முருகனுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார். அவர்களுக்கு மூன்று குழந்தைகளுள்ள நிலையில் சிங்கப்பூரில் வேலை செய்து வரும் பாண்டிவேல் முருகன், மனைவி நதியாவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், தனது அக்கா ரஞ்சிதத்திற்கு நேரடியாகப் பணம் அனுப்பி, வீட்டுச்செலவுக்கு மட்டும் மனைவி நதியாவிடம் பணம் கொடுக்கும் படி கூறியுள்ளார்.
அதனால் நதியாவின் சித்தி ரஞ்சிதம் மீது நதியாவுக்கு கோபமிருந்து வந்துள்ள நிலையில் நதியாவின் எதிர் வீட்டில் வசிக்கும் திருமணமாகாத நபரான சூர்யா (வயது 25) என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்ட நிலையில் பின் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து வந்த நிலையில் நதியா கள்ளக்காதலன் சூர்யாவிடம், அவரது சித்தி ரஞ்சிதம் அவரது கணவன் அனுப்பும் பணத்தை வைத்துக் கொண்டு, எனக்குத் தராமல் என்னை கடன்காரியாக அலைய விடுகிறாள்.
அவள் உயிரோடு இருக்கும் வரை நான் நிம்மதியாக வாழ முடியாது எனக் கூறிய நிலையில், சரி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவரிடம் சூரியா கூறியுள்ளார். 12 ஆம் வகுப்பு வரை படித்த சூர்யா, கொலை செய்தால் எப்படித் தப்பிக்கலாம்? சி.சி.டி.வி கேமரா ஹார்டு டிஸ்க்கை எப்படிக் கழட்டுவது? எனத் தெரிந்து கொள்வதற்காக அது சம்பந்தப்பட்ட காணொளிகளை யூடியூப்பில் கடந்த ஒரு மாதமாகப் பார்த்துக் கற்றுள்ளார். மேலும், தடயங்கள் சிக்காத சந்தேகம் வராத வகையிலும் கொலை செய்து கொள்ளையடிப்பதற்காநதியாவிடம் பணம் கொடுக்கும்படி சொல்லியுள்ளார். இந்த நிலையில், செப்டம்பர் 6 ஆம் தேதி செவ்வாய்கிழமை நதியாவின் கணவர் ரூபாய் 1.50 லட்சம் பணம் அனுப்பியுள்ளது தெரியவந்த நிலையில். அன்றிரவு 9:30 மணி அளவில் தலைமை ஆசிரியை இரஞ்சிதம் வீட்டின் பின்புற சுவரேறிக்குதித்த பின்னர் அங்கு சூர்யா, மறைந்திருந்து தூங்குவதற்கு முன்பாக ரஞ்சிதம் வீட்டின் பின்புறமுள்ள கழிப்பறை சென்று விட்டு வீட்டுக்கு செல்லும் போது பின் தொடர்ந்த சூர்யா, கையுறை மாட்டிக்கொண்டு தலைமை ஆசிரியர் ரஞ்சிதத்தின் மூக்கையும் வாயையும் பொத்தி, இடதுகையால் கழுத்தை நெறித்து கீழே தள்ளியுள்ளார்.
அதனால் ரஞ்சிதம் மயங்கிக் கிடந்த நிலையில் அவர் வீட்டில் பீரோவிலிருந்த சுமார் 60 பவுன் நகைகள் மற்றும் சுமார் ரூபாய் 2.50 லட்சம் பணத்தையும் எடுத்துக் கொண்டு தப்ப முயன்ற போது மயக்கம் தெளிந்த ரஞ்சிதம் முனங்கிய சத்தம் கேட்டதால், சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து யூடியூபில் பார்த்தவாறு ரஞ்சிதத்தின் வலது கை நரம்பை அறுத்துள்ளார். அப்போதும் உயிர் பிரியாததால், தொடர்ந்து கால் நரம்பையும் அறுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு, சிசிடிவி ஹார்ட் டிஸ்க்கையும் திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பியோடிள்ளார். கொள்ளையடித்த நகை, பணத்தை கள்ளக்காதலி நதியாவிடம் கொடுத்து விட்டு எதுவும் நடக்காதது போல தனது வீட்டிற்குச் சென்று விட்டார்.
நதியாவின் சித்தி இரஞ்சிதம் கொலையில் அவர் மீது சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக, அடுத்த நாள் காலை காவல்துறையினர் அங்கு வருவதற்கு முன்னதாகவே நதியா சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்திருக்கிறார். எனவே, திருப்பத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மலைச்சாமி நதியாவின் மீது சந்தேகப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அடுத்தடுத்து வருகை தந்ததால், அப்போது தப்பித்துக் கொண்ட நதியா எதுவும் தெரியாதது போல துக்க நிகழ்வில் அழுது கொண்டு நடித்துள்ளார். மேலும், அவரது கள்ளகாதலன் சூர்யாவும் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், திருப்பத்தூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆத்மநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட மூன்று தனிப்படைகள் நடத்திய விசாரணையில் சிக்கிய நதியா, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவர்களிடமிருந்து சுமார் 60 பவுன் நகைகள், ரூபாய் 2.20 லட்சம் ரொக்கம், இரண்டு செல்போன்கள், சிசிடிவி ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கருத்துகள்