விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். திறன்களும், கடமை உணர்வும் அமிர்த காலத்தில் நாட்டை புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் என்று அவர் தெரிவித்தார்.
ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்ததாவது:
“பகவான் விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள். இந்தத் தருணத்தில், அனைத்து வகையான படைப்பாற்றல்களுடன் தொடர்புடைய கர்மயோகிகளுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். உங்களது திறன்களும், கடமை உணர்வும் அமிர்த காலத்தில் நாட்டை புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறது.”எனக் குறிப்பிட்டார் மேலும் விஸ்வகர்மா குறித்த ஒரு பார்வை:-புராண கால தேவலோகச் சிற்பி, சிறந்த கட்டடக்கலை நிபுணர், பொறியியல் வல்லுநர், தொழில் படைப்பாற்றலுக்கானத் தெய்வம் விஸ்வகர்மா. மனிதன் பொறியியல் கல்வி விஞ்ஞானத்தைப் பற்றி அறிந்து கொள்ள மூலகாரணமானவர் கைவினைக் கலைஞர்களுக்கும் ஞானம் அளிப்பவர். அழகுப் பெட்டகமென, உள்ளம் கவரும் கலை ரசனைமிக்க, குறைபாடில்லாத சிற்பங்களை உள்ளடக்கிய கட்டடங்களை உருவாக்குவதில் வல்லமை மிக்கவர். பூமி, உலகம், தேவலோகமாகிய அனைத்துக்கும் பிரம்ம தேவனின் ஆணைக்கிணங்க அழகான வடிவம் தந்தவர். சத்ய யுகத்தில் சொர்க்கத்தையும், திரேதாயுகத்தில் தங்கத்தில் ஜொலித்த இலங்கையையும், துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணனின் துவாரகையையும் நிர்மாணித்தவர், இந்திரன், யமன் அரண்மனை, கடலுக்குக் கீழ் வருணனுக்கு மாளிகை மற்றும் அஸ்தினாபுரம், இந்திரப்ரஸ்தம் நகர்களையும் உருவாக்கியவர். தேவர்கள், தேவியர் அணிந்திருந்த பல்வேறு ஆபரணங்களைத் தயாரித்தவரும், தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, தன் உடல் எலும்புகளால் பலவிதமான ஆயுதங்களை விஸ்வகர்மாவைச் செய்யச் சொன்னார் ததீசி ரிஷி. அவரின் முதுகுத் தண்டுவடத்தைக் கொண்டு உருவானதே இந்திரனின் ‘வஜ்ராயுதம்.’ சூரியனின் மனைவியான இவரது மகள் சஞ்சனா, கணவரின் உஷ்ணம் நிறைந்த கதிர்களின் தீவிரத்தைச் சற்றுக் குறைக்கும்படி தந்தையிடம் வேண்ட, இவரும் சூரியனிடமிருந்து எட்டில் ஒரு பங்கு பிரகாசத் தீவிரத்தைக் குறைத்தார்.
கீழே விழுந்த அந்தத் துகள்களிலிருந்து விஷ்ணுவுக்கு ‘சுதர்சனம்’ என்ற சக்ராயுதத்தையும், சிவனுக்குத் ‘திரிசூல’த்தையும், தேவர்களின் உபயோகத்துக்காகப் ‘புஷ்பக விமான’த்தையும் உருவாக்கினார். மேலும், தான் இயற்றிய ‘ஸ்தாபத்ய வேதம்’என்ற நூலில் 64-வகை இயந்திரவியல் நுணுக்கங்கள், சிற்பக்கலை அறிவாற்றல் பற்றிய விளக்கங்களையும் விவரித்திருக்கிறார்.சுறுசுறுப்பான படைப்புத் திறனுக்கு அதிபதியாதலால் அதற்குரிய சிவப்பு வண்ணப் பின்புலத்திலேயே, யானை வாகனத்தில் அமர்ந்தவராகக் காணப்படுகிறார். இவர், வசிஷ்ட முனிவரின் சாபத்தினால் மறுபிறவியில் கங்கை - மகாராஜா சந்தனுவின் எட்டாவது மகன் தேவவிரதன் என்ற பீஷ்மராகப் பிறந்தவர். யோகசித்தா தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர். இவர் மனைவியின் பெயர் காயத்ரி. இவர்களது ஐந்து மகன்களும் புகழ்மிக்க முனிவர்களாகவும், தந்தையைப் போன்று தங்கள் தங்கள் துறைகளில் தலைசிறந்த விற்பன்னர்களாகவும் விளங்கினர். அவர்கள் மனு (கருமான் என்கிற கொல்லன்), மயன் (தச்சர்), த்வஸ்தா (உலோக வேலைப்பாடு மற்றும் வார்ப்படத் துறை), சில்பி (கைவினைக் கலைஞர், கொத்தனார்) மற்றும் விஸ்வஞர் (தங்கம், வெள்ளி, இரத்தினம், வைர நகைகள் தயாரிக்கும் பொற்கொல்லன்) ஆவர்.
விஸ்வகர்மா ஜெயந்தி நாள் ஒன்றல்ல; இரண்டு.
ஒன்று, ரிஷி பஞ்சமி - மனிதர்கள் போல் பிறந்த நாள் என்பது விஸ்வகர்மாவுக்குக் கிடையாது என்பது ஒரு சாராரின் கருத்து. கல்வி, கேள்விகளில் சிறந்த தங்கள் தகப்பனாரை நினைவு கூறும் வகையில் அவரது ஐந்து மகன்களும் சேர்ந்து நினைவு கொள்ளும் நாள்.
மற்றொன்று,
கன்னி சங்கராந்தி - இதுவே அனைவராலும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது, வட இந்தியப் பஞ்சாங்கப்படி பாத்ரபத் மாதம் எனும் புரட்டாசி முடியும் கடைசி நாளன்று, சூரியன் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு இடம் பெயரும் போது விஸ்வகர்மா பூஜை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் மாதம் 17 - ஆம் தேதியாகும்.
கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் காரியாலயங்களில் தாங்கள் கையாளும் கருவிகள், இயந்திரங்கள், வாகனங்களைச் சுத்தப்படுத்தி, புது வண்ணம் பூசி ஜோடிப்பார்கள். செய்யும் தொழில் வளமுடன் பெருகவும், விபத்துகளின்றி நாட்கள் நகரவும் தேவலோகச் சிற்பியின் அருள் வேண்டி கோலாகலமாக விழா நடத்தப்படும்.
கலைத்திறனுக்கும், அதன் மேம்பாட்டுக்கும் உதாரணமாய் விளங்கும் விஸ்வகர்மாவின் நினைவுக்கு ஒரு சான்றாக எல்லோராவின் பத்தாம் குகை அமைந்துள்ளது...
கருத்துகள்