மத்திய பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு 2022
பணியாளர் தேர்வாணையம் ‘ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு 2022 கணினி வழியில் நடத்த உள்ளது.
தென் மண்டலத்தில் 3,99,426 விண்ணப்பதாரர்கள் இத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர், கர்னூல், ராஜமுந்திரி, திருப்பதி, விசாகப்பட்டினம், விஜயவாடா, காக்கிநாடா, சிராலா, விஜயநகரம், தெலங்கானாவின் ஐதராபாத், வாராங்கல், கரீம்நகர், தமிழ்நாட்டின் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய 20 நகரங்களில் உள்ள 30 மையங்களில் இத்தேர்வு நடைபெறும்.
தென் பிராந்தியத்தில் இத்தேர்வு 01.12.2022 முதல் 13.12.2022 வரை 10 நாட்கள் நடைபெறும். ஒரு நாளைக்கு 4 ஷிப்ட்கள் வீதம் தேர்வு நடைபெறும். 1 ஷிப்ட் காலை 9.00 மணி முதல் 10.00 மணிவரையும், 2-வது ஷிப்ட் பகல் 11.45 மணி முதல் 12.45 மணி வரையும், 3-வது ஷிப்ட் பிற்பகல் மணி 2.30 மணி முதல் 3.30 மணி வரையும், 4-வது ஷிப்ட் மாலை 5.15 மணி முதல் 6.15 மணி வரையும் நடைபெறும்.
தேர்வுக் கூட அனுமதி சீட்டுக்களை தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்து, தேர்வு நடைபெறும் தேதிக்கு 4 நாள்கள் முன்பிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது பற்றிய விவரங்கள் விண்ணப்பதாரர்களின் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) வாயிலாகவும், விண்ணப்பத்தில் குறிப்பிட்ட மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பப்படும்.
கைக்கடிகாரங்கள், புத்தகங்கள், துணுக்கு சீட்டுகள், பத்திரிகைகள், மின்னணு சாதனங்கள் (செல்போன், ப்ளூ டூத், ஹெட் போன், பேனா / பட்டன் ஹோல் / ஸ்பை கேமராக்கள், ஸ்கேனர், கால்குளேட்டர், சேமிப்பு சாதனங்கள் உள்ளிட்டவை) தேர்வு அறைக்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. இதை மீறி எந்த விண்ணப்பதாரராவது தேர்வு அறைக்குள் இது போன்ற பொருட்களை வைத்திருப்பது கண்டறியப்பட்டால் அவர் / அவளது விண்ணப்பம் ரத்து செய்யப்படுவதுடன் சட்ட / குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். மேலும் அவர் அடுத்த 3-7 ஆண்டுகளுக்கு எந்தவொரு தேர்வையும் எழுத தடை விதிக்கப்படும். எனவே விண்ணப்பதாரர்கள் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பைகள் போன்றவற்றை தேர்வு நடைபெறும் இடத்திற்கு கொண்டு வர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
மின்னணு அனுமதிச் சீட்டு மற்றும் அசல் செல்லத்தக்க அடையாள ஆவணமின்றி வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களது மின்னணு அனுமதிச் சீட்டை தவறாமல் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு தென் மண்டல அலுவலக உதவி எண்களை Numbers (Landline - 044-28251139 & Mobile: 9445195946) தொடர்பு கொள்ளலாம்.
கொவிட்-19 பாதிப்பை கருத்தில் கொண்டு தேர்வாணையம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதுடன், விண்ணப்பதாரர்களும் மின்னணு அனுமதிச்சீட்டில் குறிப்பிட்டுள்ள கொவிட்-19 தொடர்பான அறிவுரைகளைப் பின்பற்றி பாதுகாப்பான மற்றும் சுமூகமான முறையில் தேர்வு எழுதுமாறு மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தென் மண்டல இயக்குனர் கே.நாகராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்