பொங்கல் பரிசு 1000 வங்கிகள் மினிமம் பேலன்ஸ் என பிடித்துக் கொள்ள வாய்ப்பு ஆகவே மக்களிடம் நேரடியாக வழங்குவதாக உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம்
தமிழ்நாட்டில் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசுத் தொகையை குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தாதது ஏன்? -என சென்னை உயர்நீதிமன்றத்தின் கேள்விக்கு தமிழக அரசு சரியான விளக்கம்
பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்தாதது ஏன்? என்பது குறித்து தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றக் கிளையில் தற்போது சரியான விளக்கமளித்துள்ளது.
அதன் விபரம் வருமாறு :- தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுந்தர விமலநாதன், சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் பொருட்களை தமிழ்நாடு விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்’’ எனக் கூறப்பட்டிருந்தது.இந்த மனு, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் ரூபாய் 1000 பணத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதற்கு அரசு தரப்பில் வாதிடும்போது, ‘‘பொங்கலுக்கு குறுகிய காலமே இருப்பதால் பணப்பரிசை வங்கிக் கணக்குகளில் செலுத்துவது கடினம்தான். மேலும் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை எனக் கூறி சில ஏழைகளின் பணங்களை வங்கிகள் பிடித்துக் கொள்ளவும் வாய்ப்புள்ளது. இதனால் மக்களுக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் பயனில்லாமல் போய்விடும். மூன்று வகையான குடும்ப அட்டைகள் இருப்பதால் அவற்றை பிரிப்பதிலும் சிக்கலுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது.அதற்கு நீதிபதிகள், மின் இணைப்புகளுடன் ஆதார் இணைக்கும் பணியைப் போல் இப்பணியை செய்தாலென்ன? எனக் கேள்வி எழுப்பினர்.
பின்னர் பொங்கல் பரிசுத் தொகையை குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த முடியுமா? என்பது குறித்து அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
கருத்துகள்