சென்னை - மதுரை இரயில் போக்குவரத்தின் இருவழிப் பாதை
தயாராகி விட்டது. இது பல ஆண்டுகள் கடந்து நிறைவேறியுள்ளதென்பது யாராலும் மறுக்க முடியாதது. ஆனால் இரு வழிப் பாதை அமைந்து போக்குவரத்து துவங்கி விட்டாலும் திருநெல்வேலி - மதுரை - சென்னைக்கு கூடுதல் இரயில்கள் இயக்கப்படாத வரை அதனால் ஒரு பயனும் இருக்கப்போவதில்லை என்பதே நிஜமாகும்.
ஆரம்பத்திலிருந்து இன்று வரை மதுரையிலிருந்து சென்னைக்கு காலையில் வைகை எக்ஸ்பிரஸ் பகல் நேர விரைவு இரயிலும், இரவு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மட்டும் தான் நேரடி இரயிலாக இயக்கப்படுகின்றன. இடைப்பட்ட பகல் நேரத்தில் மதுரை - சென்னை கூடல் எக்ஸ்பிரஸ் ரயிலும், இரவு 11.15 மணிக்கு மஹால் எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்பட்டன. வழக்கம் போல் கேரள மாநிலத்தவர்கள் தங்களுடைய வசதிக்காக பகல் நேர கூடல் எக்ஸ்பிரஸ் ரயிலை குருவாயூர் வரை நீட்டித்து குருவாயூர் - சென்னை என்றும், இரவு நேர மஹால் எக்ஸ்பிரஸ் ரயிலை திருவனந்தபுரம் வரை நீட்டித்து திருவனந்தபுரம் - சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் என்றும், மதுரை கோட்டத்திற்காக இருந்த ரயிலை திருவனந்தபுரம் கோட்டத்தினர் மாற்றம் செய்து அபகரித்துக் கொண்டார்கள். அதற்கு மதுரை டிவிசன் ஆட்களும் எந்த விதமான எதிர்ப்புமின்றி இருந்த பிறகும் கூட அவர்கள் திருச்சிராப்பள்ளியிலிருந்து - திருநெல்வேலி வரை பகல் நேர இண்டர்சிட்டி இரயில் இயக்கப்பட்டது, அந்த இரயிலையும் திருவனந்தபுரம் வரை நீட்டித்து திருச்சிராப்பள்ளி - திருவனந்தபுரம் இண்டர்சிட்டி இரயில் என்றானது. இப்படி மதுரை இரயில்வே கோட்டத்திற்கென்று ஒதுக்கப்படும் அனைத்து இரயில்களையும் திருவனந்தபுரம் கோட்டத்தினர் வசதிக்காக மாற்றியதை இங்குள்ள அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ கண்டு கொள்வதேயில்லை.
திருநெல்வேலி -மதுரை - சென்னைக்கு கூடுதல் இரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கேட்டு வந்த போது ஒரு ஒரு வழிப் பாதையாக இருப்பதால் சாத்தியமில்லை என்றார்கள்.
தற்போது தான் இருவழிப்பாதை ஏற்படுத்தப்பட்டு போக்குவரத்தும் துவங்கியது. இனியாவது கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பதே மதுரை திருநெல்வேலி இராமநாதபுரம் சார்ந்த சுற்று வட்டார மக்கள் கோரிக்கையாகும்.
கருத்துகள்