தமிழ்நாட்டில் நதிகள் மற்றும் நீர்நிலைகள் மறுசீரமைப்பு
தேசிய நதிகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் காவிரி, அடையாறு, கூவம், வைகை, வெண்ணாறு, தாமிரபரணி ஆகிய ஆறு நதிகளில் மாசுத்தடுப்பு திட்டங்களை செயல்படுத்த ரூ.908.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட 13 நகரங்களில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். தேசிய நீர்நிலை சூழல் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் (என்பிசிஏ) பள்ளிக்கரணை சதுப்பு நிலம் உள்ளிட்ட மூன்று இடங்களின் மேம்பாட்டுக்காக ரூ.363.10 லட்சம் தமிழக அரசுக்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மாநிலங்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ஜல்சக்தித் துறை இணையமைச்சர் திரு பிஷ்வேஸ்வர் துடு தெரிவித்துள்ளார்.நீர்வளம் குறைவதைத் தடுக்கவும், மழைநீர் சேகரிப்பை ஊக்குவிக்கவும் மத்திய அரசின் நடவடிக்கைகள்
நீர்வளம் மாநிலப் பட்டியலில் உள்ளதால், நீர்ப்பாதுகாப்பு மற்றும் நீர்வளங்களைத் திறம்பட்ட முறையில் மேலாண்மை செய்யும் நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் மேற்கொள்ளப்படுகின்றன. மாநில அரசுகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆதரவைப் பல்வேறு திட்டங்களுக்கு வழங்கி வருகிறது. நாடு முழுவதும் மழைநீர் சேரிப்புக்காக மத்திய அரசு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துகிறது.
ஜல்சக்தி அமைச்சகம், வேளாண் அமைச்சகம், ஊரக வளர்ச்சி அமைச்சகம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், வீட்டுவசதி அமைச்சகம் ஆகியவையும் மாநில அரசுகளும் மழைநீர் சேகரிப்பில் பங்காற்றுகின்றன. நீர்வளம் குறைவதைத் தடுப்பது மற்றும் மழைநீர் சேகரிப்புக்காக மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பான தகவல்கள்
http://jalshakti-dowr.gov.in/sites/default/files/Steps_to_control_water_depletion_Feb2021.pdf என்ற இணையதள இணைப்பில் விரிவாக இடம்பெற்றுள்ளன.
நீர்ப்பாதுகாப்பு, செயற்கைக்கோள் அடிப்படையில் நீர்நிலைகள் தொடர்பான புவி ஆய்வு, அனைத்து மாவட்டங்களிலும் ஜல்சக்தி மையங்களை அமைத்தல், வனப்பரப்பு குறைதலைத் தடுத்தல், விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் மழைநீர் சேகரிப்பு பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.
ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ், மழைநீர் சேகரிப்பு இயக்கம் நாடு தழுவிய அளவில் 29.03.2022 அன்று தொடங்கப்பட்டது. இதன்கீழ் தற்போது வரை நீர்த்தொடர்பான 39.46 லட்சம் பணிகள் நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீர்த்தொடர்பான பணிகளுக்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், ரூ.23.37 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது.
மாதிரி கட்டட துணைச்சட்டம் 2016-ன் கீழ், மழைநீர் சேகரிப்பு அம்சமும் கட்டடங்களில் இடம்பெற வேண்டும் என்பது சேர்க்கப்பட்டு அது அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய வீட்டுவசதி அமைச்சகத்தால் அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்கீழ், மழைநீர் சேகரிப்பு தொடர்பான சிறந்த நடைமுறைகளை ஊக்குவிக்கவும், இதை மேற்கொள்ளாவிட்டால் அபராதம் விதிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய நிலத்தடி நீர் வாரியம் மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி, நிலத்தடி நீர் பெருக்கத்திற்கான செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளது. இத்திட்டம் 1.42 கோடி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மாநிலங்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ஜல்சக்தித் துறை இணையமைச்சர் திரு பிஷ்வேஸ்வர் துடு தெரிவித்துள்ளார்.புதிய நீர்த்தேக்கங்கள் கட்டுமானம்
தமிழகத்தில் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டத்துக்கு மத்திய நிதியுதவி
தமிழகத்தில் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் 2021-22-ம் நிதி ஆண்டில் சேர்க்கப்பட்டு, ரூ.44.22 கோடி மத்திய அரசின் நிதியுதவிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.9.04 கோடி விடுவிக்கப்பட்டு அந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. கன்னடியன் கால்வாயில் இருந்து வெள்ள நீரை வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு கொண்டுசெல்லும் வகையில் இந்த இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
2017-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டுக்கு நீர்வளத் திட்டங்களுக்காக ரூ.186.53 கோடி மத்திய உதவிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2018-19-ல் ரூ.7.03 கோடியும், 2019-20-ல் ரூ.16.75 கோடியும், 2020-21-ல் ரூ.1.25 கோடியும், 2021-22-ல் ரூ.17.43 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. 2022-23-ல் இதுவரை ரூ.19.3 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கங்களில் தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல், சீரமைத்தல் ஆகிய பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.
சென்னை நகரைப் பொறுத்தவரை, நிதியுதவிக்கான கருத்துரு எதையும் மத்திய ஜல்சக்தி அமைச்சகம் பெறவில்லை.
இத்தகவலை மாநிலங்களவையில் இன்று மத்திய ஜல்சக்தித்துறை இணையமைச்சர் திரு பிஸ்வேஷ்வர் துடு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.ஜல்ஜீவன் இயக்கத்தின்கீழ் நீரின் தரத்தை உறுதி செய்தல்
ஜல்ஜீவன் இயக்கத்தின்கீழ், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்தை மத்திய 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தி வருகிறது. இந்த இயக்கத்தின்கீழ், இந்திய தர நிர்ணய அமைவனத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், பாதுகாப்பான குடிநீர் விநியோகத்துக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த இயக்கம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, ஊரகப் பகுதிகளில் 3.23 கோடி வீடுகளில் மட்டுமே குடிநீர்க் குழாய் இணைப்பு இருந்தது. இந்தத் திட்ட அமலாக்கத்திற்குப் பின், 7.88 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழங்கியுள்ள தகவலின் மூலம் தெரிய வந்துள்ளது. நாட்டில் கிராமப்பகுதிகளில் மொத்தமுள்ள 19.39 கோடி வீடுகளில் இதுவரை மொத்தம் 11.12 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது மொத்தமுள்ள கிராமப்புற வீடுகளில் 57.36 சதவீதமாகும்.
குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கப்படும் போது, பாதுகாப்பான நீர் வழங்கப்படுவதும் உறுதி செய்யப்படுகிறது. ஆர்சனிக் மற்றும் ஃப்ளூரைட் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் சமுதாய நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஆண்டுக்கு ஒருமுறை என்ற அடிப்படையில் நீரின் ரசாயனம் மற்றும் நுண்ணுயிர் தன்மைகளை சோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 2076 நீர் சோதனை மையங்கள் உள்ளன.
இந்தத் தகவலை மாநிலங்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ஜல்சக்தித் துறை இணையமைச்சர் திரு பிரஹலாத் சிங் படேல் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்