முதன்மையாக வருபவர்கள் மட்டுமே அறியப்படுவார்கள் எனக் கருதாமல் திறமையை வெளிப்படுத்தும் அனைவரும் அறியப்படுவார்கள் என மாணவர்கள் எண்ண வேண்டும் - விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி. பழனி பேச்சு
முதன்மையாக வருபவர்கள் மட்டுமே அறியப்படுவார்கள் எனக் கருதாமல், திறமையை வெளிப்படுத்தும் அனைவரும் அறியப்படுவார்கள் என மாணவர்கள் எண்ண வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி. பழனி கூறியுள்ளார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகம் மண்டல அலுவலகத்தின் சார்பில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த மூன்று நாள் புகைப்படக் கண்காட்சி டாக்டர் எம் ஜி ஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று தொடங்கியது.
இந்தக் கண்காட்சியை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து கண்காட்சியைப் பார்வையிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூலம் இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் அறியப்படாத ஏராளமானோர் இன்று அறியப்படுவது போல், முதன்மையாக வருபவர்கள் மட்டுமே அறியப்படுவார்கள் என்று மாணவர்கள் கருதாமல், திறமையை வெளிப்படுத்தும் அனைவரும் அறியப்படுவார்கள் என்று எண்ண வேண்டும். அதற்கான சான்றாக மத்திய தகவல் தொடர்பகம் அமைத்துள்ள இந்தக் கண்காட்சி உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தலைமையுரை ஆற்றிய பத்திரிக்கை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகம் (தென் மண்டலம்) முதன்மை தலைமை இயக்குநர் திரு எஸ்.வெங்கடேஸ்வர், மத்திய அரசால் நடத்தப்படும் இந்த அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், அவர்கள் வரலாறு அடங்கிய தொகுப்புகள், புகைப்படங்கள் மூலம் அனைத்துப் பகுதிகளிலும் கண்காட்சியாக நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் டாக்டர் எம் ஜி ஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் டி. கணேசன் வாழ்த்துரை வழங்கினார்.
மத்திய மக்கள் தொடர்பகத்தின் கள விளம்பர அலுவலர் திரு. கே. ஆனந்த பிரபு வரவேற்புரை ஆற்றினார். பத்திரிகை தகவல் அலுவலகத்தின் ஊடகத் தொடர்பு அலுவலர் திரு. அ. அழகுதுரை நன்றியுரை ஆற்றினார்.
முன்னதாக தேசத்தின் வளர்ச்சியில் மகளிர் பங்கு என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் மத்திய அரசின் இசை மற்றும் நாடகப் பிரிவின் குழுவினர் அரங்கேற்றிய பறையாட்டம், ஒயிலாட்டம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இக்கண்காட்சியில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், பொது சுகாதாரத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி, காசநோய்த் தடுப்புத் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் அஞ்சல் துறை ஆகிவற்றின் அரங்குகள் இடம்பெற்றிருந்தன
கருத்துகள்