அரசு புகைப்படக் கண்காட்சியில் பள்ளிகளுக்கு இடையேயான பேச்சுப்போட்டி
இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மத்திய மக்கள் தொடர்பகம் மண்டல அலுவலகத்தின் சார்பாக கோயம்புத்தூரில் உள்ள ராமநாதபுரம் எஸ்.என்.மண்டபத்தில் 'அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள்' மற்றும் 'மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள்' என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.
மூன்றாம் நாளான இன்று, நடைபெற்ற காலை அமர்விற்கு இந்திய தர நிர்ணய அலுவலக விஞ்ஞானியும், முதுநிலை இயக்குநருமான திரு கோபிநாத் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு ஹால்மார்க்கிங், அதற்கான சான்றிதழ் மற்றும் தர நிலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் மாவட்ட இலவச சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழக்கறிஞர் திரு மதிவாணன் கலந்து கொண்டு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பிற்பகலில் நடைபெற்ற அமர்விற்கு மாவட்ட காசநோய்த் தடுப்பு அலுவலகத்தின் பொது மற்றும் தனியார் இணைப்பு ஒருங்கிணைப்பாளர் திரு அருண் பிரசாத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு காசநோய் குறித்து முழு விளக்க உரையாற்றினார்.
இது தவிர இரு அமர்வுகளிலும் டிஜிட்டல் திரைப்படக் காட்சி, 'சுதந்திரப் போராட்டத்தில் இளைஞர்களின் பங்கு' என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, விநாடி வினாப் போட்டி, பரிசளிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
கள விளம்பர அலுவலர்கள் திரு பிபின் எஸ் நாத் மற்றும்
பி. கோபகுமார், தொழில்நுட்ப உதவியாளர் எஸ்.ஆர்.சந்திரசேகர், கள விளம்பர உதவியாளர்கள் எம். தியாகராஜன், ப.வேல்முருகன் உடனிருந்தனர். நான்காம் நாளான நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் பள்ளிகளுக்கு இடையேயான பேச்சுப்போட்டி நடைபெற இருக்கிறது.
கருத்துகள்