தமிழ்நாட்டில் ஒன்பது அரசியல் கட்சிகள் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பாட்டாளி மக்கள் கட்சி., மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ., விடுதலைச் சிறுத்தைகள். ஆகியன அதில் இடம் பெறவில்லை
தமிழ் நாட்டில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் குறித்த தகவல் வெளியானது.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அந்தஸ்தைப் பெற, தேர்தலில் குறிப்பிட்ட அளவு வாக்குகளின் சதவீதத்தையோ அல்லது வெற்றியையோ கட்சிகள் பெற்றிருக்க வேண்டும்.
மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெற வேண்டுமெனில், நான்கு நிபந்தனைகளில் ஒன்றைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதாவது, சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தத் தொகுதிகளில் மூன்று சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
மக்களவைத் தேர்தலில், மாநிலத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒவ்வொரு 25 இடங்களில் ஒரு இடத்திலாவது வெற்றியைப் பதிவு செய்திருக்க வேண்டும்.
மக்களவை அல்லது சட்டப் பேரவைத் தேர்தலில் ஆறு சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவை அல்லது இரண்டு சட்டப் பேரவைத் தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும்.
எந்தத் தொகுதியிலும் வெற்றியைப் பதிவு செய்யா விட்டால் எட்டு சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். இதேபோன்று தேசியக் கட்சிக்கான தகுதியைப் பெற வேண்டுமெனில், மூன்று நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். மொத்த மக்களவை இடங்களில் இரண்டு சதவீத இடங்களில் குறைந்த பட்சம் மூன்று வெவ்வேறு மாநிலங்களில் வெற்றியைப் பெற வேண்டும்.
மக்களவை அல்லது சட்டப் பேரவைத் தேர்தலில் நான்கு வெவ்வேறு மாநிலங்களில் ஆறு சதவீத வாக்குகள் பெறுவதுடன், நான்கு மக்களவைத் தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும். நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக இருக்க வேண்டும்.
இந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று பூர்த்தியானால், தேசியக் கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேசிய வாதகாங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தேசிய கட்சிக்கான அங்கீகாரத்தை இழந்துள்ளன.
தமிழ் நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம்., அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ., பாரதிய ஜனதா கட்சி., காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , தேசியவாத காங்கிரஸ் கட்சி , திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய முற்போக்குத் திரவிடர் கழகம். ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன.
தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்ட உத்தரவால், தமிழ்நாட்டிலும் அங்கீகாரம் பெற்ற கட்சிகளின் பட்டியலிலிருந்து சில கட்சிகள் நீக்கப்பட்டுள்ளதன்படி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் பட்டியலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன. அதேசமயம், தேசிய கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி அங்கீகாரம் பெற்ற கட்சிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
தமிழ் நாட்டில் ஆம் ஆத்மி கட்சிக்கான தலைமை அலுவலகம் உள்ளிட்ட விவரங்களைக் கோரும் பணியில், மாநிலத் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. தேசிய கட்சிக்கான அந்தஸ்து பட்டியலிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நீக்கப்பட்டாலும், தமிழகத்தில் மாநிலக் கட்சிக்கான அங்கீகாரப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
தற்போது மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., ஆம்ஆத்மி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்டு, தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் தெரிவித்தனர்.
தமிழ் நாட்டில் மாநிலக் கட்சிகளாக உள்ள பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத் தைகள் உள்ளிட்ட கட்சிகள் மாநிலக் கட்சி என்கிற அங்கீகாரத்தை ஏற்கனவே இழந்துள்ளன. சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் எட்டு சதவீத வாக்குகளுக்கும் குறைவாக பெற்று வரும் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இன்னும் மாநில கட்சி என்கிற அங்கீகாரத்தை பெறாமலேயே இருக்கிறது.
கருத்துகள்