நியோ மேக்ஸ் நிலமோசடி வழக்கில் நீதிபதி ஆணையம் அமைக்க அரசு கடுமையான எதிர்ப்பு: சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் தீர்ப்பு ஒத்திவைப்பு
நியோ மேக்ஸ் நில மோசடி வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க தமிழ்நாடு அரசு சார்பில் கடுமையான ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதையடுத்து மதுரைக் கிளை சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
மதுரை நியோமேக்ஸ் நில வர்த்தகம் மற்றும் பண சூதாட்டம் நடத்திய நிறுவனம் பல்வேறு போலி நிறுவனங்களுன் பெயரில் பொதுமக்களிடம் நிலம் விற்பது என பணம் வசூலித்து மோசடி செய்ததை மதுரை பொருளாதார குற்றப்பிரிவுக் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில், நியோ மேக்ஸ் பிரச்சினையில் மக்களிடம் சுமூகமான தீர்வு ஏற்படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கக் கோரி நியோ மேக்ஸ் நிறுவன இயக்குநர்கள் பழனிச்சாமி, பாலசுப்பிரமணியன் ஆகியவர்கள் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க தமிழக அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதையடுத்து உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளைத் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த மனுவானது நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு தரப்பில் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா மற்றும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி ஆகியோர் ஆஜராகி வாதிடுகையில், ''ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்தால் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் விரைவில் நிவாரணம் வழங்கி விடலாம் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் அது உண்மையல்ல. நிதி நிறுவன மோசடியில் 1999-ஆம் ஆண்டுல் அமைக்கப்பட்ட ஆணையம் முதல் இதுவரை பல்வேறு ஆணையங்கள் குறிப்பாக பிஏசிஎல் நிறுவனம் சார்பில் லோதா கமிட்டி உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படவில்லை. பல ஆணையங்களிலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் விலகிச் சென்றுவிட்டனர்.
நியோ மேக்ஸ் நிறுவன கும்பல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், 32048 முதலீட்டாளர்கள் உள்ளதாகவும், புகார் அளித்த ஜெயசங்கரீஸ்வரனுக்கு 15,515 சதுர அடியும், ரூ.25 லட்சமும் கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் கணக்கீடு செய்தால் 32,048 முதலீட்டாளர்களுக்கு கொடுக்க 49 கோடியே 72 லட்சம் சதுர அடி நிலம் தேவைப்படும். ஆனால் மனுதாரர்கள் தரப்பில் தங்களிடம் டிடிசிபி அனுமதி பெற்ற இடம் 5 கோடியே 9 லட்சம் சதுர அடி மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் வைத்திருக்கும் நிலத்தை 32,048 முதலீட்டாளர்களுக்கு நிறுவனம் பிரித்துத் தருவதாகச் சொல்கிற 2 கோடியே 23 லட்ச சதுர அடியை சரியாக பிரித்துக் கொடுப்பதாக இருந்தால் ஒருவருக்கு 697 சதுர அடி தான் கொடுக்க முடியும். இதற்கு முதலீட்டாளர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.
சட்டத்துக்குப் புறம்பாக நீதிபதி ஆணையம் அமைக்க முடியாது. புலன் விசாரனை முழுமை பெற வேண்டும். இதுவரை 667 மட்டுமே புகார் அளித்துள்ளார். ஆனால் உத்தேசமாக 32,048 பேர் முதலீடு செய்துள்ளார்கள் என நிறுவனம் கூறியுள்ளது. இதனால் விசாரணைக்குப் பிறகே எத்தனை முதலீட்டாளர்கள் உள்ளனர் என்பது தெரியவரும். முதலீட்டாளர்கள் முதலீடு செய்த பணம் எவ்வளவு என்பதையும் நிறுவனம் தெரிவிக்கவில்லை. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்தால் காவல்துறை விசாரணை பாதிக்கும். இதனால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என வாதிட்டாகள்
முதலீட்டாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிடுகையில், ''ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கக் கோருவது திசை திருப்பும் வேலையாகும். இதனால் முதலீட்டாளர்களுக்கு நிவாரணம் கிடைக்காது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்றனர். பின்னர் வழக்கின் தீர்ப்பை அக்டோபர் மாதம் 20-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
கருத்துகள்