தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2023 அக்டோபர் 7 முதல் 9 வரை நடைபெறவுள்ள சாகர் பரிக்ரமாவின், 9-வது கட்டத்தை மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைக்கிறார்
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆகியோர் சாகர் பரிக்ரமாவின் 9-வது கட்டத்தை அக்டோபர் 7-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தொடங்கி வைக்கின்றனர். புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய 8 கடலோர மாவட்டங்களிலும், காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளிலும் நடைபெறும் இந்த சாகர் பரிக்ரமாவில் இரண்டு மத்திய அமைச்சர்களும், முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.
சாகர் பரிக்ரமாவின் 9-வது கட்டப் பயணத்தின் போது, திரு பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் டாக்டர் எல்.முருகன் மீனவர்களுடன் கலந்துரையாடுகின்றனர். பிரதமரின் மத்சய சம்பட யோஜனா, மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம், கிசான் கடன் அட்டை மற்றும் அரசு திட்டங்கள் தொடர்பான சான்றிதழ்கள் மற்றும் ஒப்புதல் ஆணைகளை மீனவர்கள் மற்றும் பயனாளிகளுக்கு அமைச்சர்கள் வழங்க உள்ளனர்.
மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை திட்டங்களின் செயலாக்கங்களில் உள்ள முன்னேற்றங்கள் குறித்து அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆகியோர் ஆய்வு செய்கின்றனர்.
07.10.2023 அன்று நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம், 08.10.2023 அன்று பூம்புகார் மீன்பிடித் துறைமுகம் மற்றும் கடலூர் மீன்பிடித் துறைமுகம் ஆகிய இடங்களில் திட்டமிடப்பட்டுள்ள விழாக்களிலும் இரு அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். இந்த பரிக்ரமா பயணத்தின் போது, பிரதமரின் மத்சய சம்பட யோஜனா, அரசுத் திட்டங்கள், இ-ஷ்ரம் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
சாகர் பரிக்ரமா என்பது நாட்டின் அனைத்து கடலோரப் பகுதியிலும் உள்ள மீனவ சமூகத்தை சென்றடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டமாகும். மீனவர்களின் பிரச்சினைகள், அனுபவங்கள் மற்றும் தேவைகளைப் புரிந்து கொள்ளவும், கடலோரப் பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
சாகர் பரிக்ரமா 9-வது கட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீன்வளத் துறை அதிகாரிகள், மாவட்ட அலுவலர்கள், மத்திய அரசின் மீன்வளத் துறை, தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், இந்திய கடலோர காவல்படை, இந்திய மீன்வள ஆய்வு மையம், தேசிய மீன்வள அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்ப மற்றும் பயிற்சி நிறுவனம், மத்திய மீன்வள கடல்சார் மற்றும் பொறியியல் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இருந்து புதுச்சேரி உள்ளிட்ட பிற பகுதிகள் வழியாக சென்னை சென்றடையும் சாகர் பரிக்ரமா பயணத்தில் மீனவர்கள், மீனவ பிரதிநிதிகள், மீன் வளர்ப்போர், தொழில் முனைவோர், மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள், அறிவியலாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1400 ஹெக்டேர் உள்நாட்டு நீர்ப்பரப்பு குளம் மற்றும் கண்மாய்கள் மீன்பிடித்தல் மற்றும் மீன் வளர்ப்பு ஆகிய இரண்டிற்கும் ஏற்றதாக உள்ளது. 800 ஹெக்டேர் உவர்நீர்ப் பகுதிகளில் உவர்நீர் இறால் வளர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு 1,076 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது. இது நாட்டிலேயே இரண்டாவது பெரிய கடற்கரை மாநிலமாகும். இம்மாநிலம் கடல், உவர்நீர் மற்றும் உள்நாட்டு மீன்வளம் ஆகியவற்றில் செழுமையானதாகவும் மீன் பிடிப்பு மற்றும் வளர்ப்புக்கு ஏற்றதாகவும் உள்ளது. மாநிலத்தின் கடல் மீன் உற்பத்தி (2021-22) 5.95 இலட்சம் மெட்ரிக் டன் ஆகும். இதில் ரூ. 6,559.64 கோடி மதிப்புள்ள 1.14 லட்சம் மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 5,830 விசைப்படகுகள் மற்றும் 45,685 பாரம்பரிய மீன்பிடி படகுகள் மூலமாக மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தில் பதிவு 4,41,977 கடல் மீனவர்கள் பதிவு செய்துள்ளனர். 10.48 லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு இத்தொழில் உறுதுணையாக உள்ளது
தமிழ்நாட்டின் வளமான மீன்வளம் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு நேரடியாகவும் துணை நடவடிக்கைகளிலும் வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குகிறது. 2021-22 ஆம் ஆண்டில், மாநில விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இத்துறையின் பங்களிப்பு 5.78 சதவீதம் ஆகும். 2021-22 ஆம் ஆண்டில் 1.14 இலட்சம் மெட்ரிக் டன் மீன் மற்றும் மீன் பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் அந்நியச் செலாவணியில் மீன்வளத் துறையின் பங்கு ரூ. 6,559.64 கோடியாக இருந்தது. மீன்வளத் துறை, மீனவர்களின் வாழ்வாதாரமாக இருந்து சமூகத்தில் பெருமளவு வேலைவாய்ப்பை உருவாக்குவதோடு, தேசிய உணவுப் பாதுகாப்புக்கு முக்கிய பங்களிப்பை வழங்குகிறது அத்துடன் புதுச்சேரிக்கு அந்நியச் செலாவணி வருவாயை வழங்கும் ஒரு முக்கிய துறையாக இது மாறியுள்ளது.
சாகர் பரிக்ரமாவின் முதல் எட்டு கட்டங்கள் குஜராத், டையூ மற்றும் டாமன், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் உள்ளிட்ட 8 கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 4,115 கிலோ மீட்டர் பயணத்தைக் கொண்டதாக அமைந்தது. அதில் அந்த கடலோரப் பகுதி முழுவதும் உள்ள மீனவ மக்கள், மீன் பண்ணையாளர்கள் மற்றும் தொடர்புடைய பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படுவதற்கான மத்திய அரசின் முன்முயற்சியை எடுத்துக் காட்டியது. பிரதமரின் மத்சய சம்பட யோஜனா, கிசான் கடன் அட்டை போன்ற அரசு திட்டங்களால் பல்வேறு மீன்வளத் திட்டங்கள் மற்றும் இதர திட்டங்களால் மீனவ சமூகத்தினரின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவுவதற்கு சாகர் பரிக்ரமா வகை செய்கிறது. நிலையான சமநிலையை மையமாகக் கொண்டு பல்வேறு மீன்வளத் திட்டங்கள் பற்றிய தகவல்களைப் பரப்புவதற்கும், பொறுப்பான மீன்வளத்தை ஊக்குவிப்பதற்கும், கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் இது முக்கிய பங்காற்றுகிறது.
கருத்துகள்